ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 6, 2022

துன்புறுத்தும் உணர்வுகளை நாம் நீக்கினால் தான் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்

வயலை உழுகும் போது சீதா என்ற குழந்தை கிடைத்தது. அதை ஜனகச் சக்கரவர்த்தி எடுத்து வளர்த்தான் என்று காவியங்கள் கூறுகிறது.

ஜனகச் சக்கரவர்த்தி யார்...?

நாம் உழுது பயிரிடும் போது அந்தப் பயிரிலிருந்து வரக்கூடிய மணம் சுவை கொண்டதாக இருக்கிறது. அது தான் சீதா. அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கிறது. “சீதாலட்சுமியாக…” அந்த ஜனகச் சக்கவரவர்த்தி சீதாவைத் தத்துப் பிள்ளையாக எடுத்து வளர்க்கின்றார்.

நாம் உழுது பயிரிட்டு அதிலே விளைந்ததை உணவாக உட்கொள்ளும் போது அந்தச் சுவையின் சத்து நமக்குள் எப்படி வளர்கிறது…? என்ற நிலையை இப்படித் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

காட்டிலே விளையும் பயிர்கள் வெளிப்படுத்தும் சத்தினையும் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கொள்கிறது. சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வளர்க்கிறது. ஆனால் அது விஷச் செடிகளாக இருக்கின்றது.

இப்படி இத்தகைய இரண்டு விதமான உணர்வின் சத்துகளும் (நல்ல பயிர்கள், காட்டிலே விளையும் விஷமான பயிர்கள்) உலகில் பரவப்படும் போது அந்த உணர்வின் இயக்கத்தை நமக்குத் தெளிவாக்குகின்றனர்.

அப்போது… நற்குணம் கொண்ட சீதாவை திருமணம் செய்ய வல்லமை பெற்றவர்கள் அவரவர்கள் திறமைகளைக் காட்டுங்கள்…! என்று பறைசாற்றுகின்றனர்.

பறைசாற்றும் போது அவரவர்கள் வில்லை எடுத்துக் குறி வைத்து மற்றவரை வீழ்த்துகின்றனர். செடி கொடிகளில் விளைவதையும் அதனின் மணத்தைச் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கொள்ளும் போது அதை எவரெவெர் நுகர்கின்றனரோ அந்த உணர்வின் சொல்லாக வெளிப்படுத்தி மற்றதை வீழ்த்துகின்றனர்.

1.உழுது பயிரிட்ட உணர்வுகள் ஒன்றை அரவணைக்கிறது என்றும்…
2.அப்போது மகிழச் செய்யும் எண்ணங்கள் வருகிறது என்றும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்
3.ஆனால் விஷம் கொண்ட செடியின் உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் உடனே அலறும் தன்மையாக வருகிறது என்றும்
4.நுகர்ந்தவரை வீழ்த்தச் செய்கின்றது என்றும் காட்டுகின்றனர்..

உழுது பயிரிடப்பட்டதை உணவாக உட்கொள்ளும் போது அந்த உணர்வின் சொல்லாக விளையப்படும் போது கேட்போர் நிலைகளை அது அரவணைக்கும் தன்மையாக வருகிறது.

இந்த உணர்வுகளின் இயக்கங்களைத் தெளிவாக்குவதற்காக
1.எண்ணங்கள் எப்படி உருவாகிறது என்றும்…?
2.சுவைக்கொப்ப உணர்வுகள் உருவாவது “அது தான் எண்ணம்…” என்றும்
3.இவை எல்லாம் உருவாக்குபவன் அனைத்திற்கும் சக்கரவர்த்தி (ஜனகர்) சூரியன் என்றும் தெளிவாக்குகின்றார்கள்.

சீதாவைத் திருமணம் செய்ய அவரவர்கள் வைத்திருக்கும் வில்லைக் (ஆயுதம்) காட்டித் திறமைகளைக் காட்டுகின்றார்கள். ஆனால் இராமனோ “தீமை விளைவிக்கும் அந்த வில்லையே ஒடித்துவிடுகின்றான்…!”

ஒடித்தபின் தீமையான எண்ணங்களை நீக்கிய பின் அந்தச் சீதாவைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்கிறான்.
1.அரவணைக்கும் தன்மையாக மற்றொன்றை மகிழ்ச்சியுடன் தனக்குள் எண்ணினால்
2.அந்தச் சக்தி தன்னுடன் இணைந்தே வாழும் என்றும் அதைக் “கல்யாணராமா…” என்றும் சொன்னார்கள்.

ஆகவே நாம் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் உடலுக்குள் பரவச் செய்து தீமை செய்யும் பகைமை உணர்வுகளை எல்லாம் ஒடித்துவிட வேண்டும். அப்போது நாம் மகிழ்ச்சியை அரவணைத்துக் கொள்கிறோம் – கல்யாணராமா.