ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 25, 2022

நம்முடைய உணர்வுகள் தீமைகளை அகற்றிடும் சக்தியாகவே என்றும் வெளிப்பட வேண்டும்

குடும்பத்தில் மிகவும் கஷ்டம் என்று ஒருவர் சொன்னால் அதை அதிக நேரம் கேட்டு நமக்குள் பதிவாக்கக் கூடாது. கேட்டவுடனே...
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
2.எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட வேண்டும் ஈஸ்வரா... என்று ஏங்கித் தியானியுங்கள்.

தியானித்த பின் கஷ்டத்தைச் சொன்னவரிடம்... உங்கள் குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து குடும்பத்தில் எல்லோரும் நலமாக இருப்பீர்கள்... உங்கள் தொழில் நன்றாக இருக்கும்... குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பீர்கள்... செல்வம் செல்வாக்கு பெருகும்... என்று இதைச் சொல்ல நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அவர் உடலில் வந்த நோயைப்பற்றிச் சொன்னாலும் அடுத்த கணம் ஈஸ்வரா...! என்று ஏங்கித் தியானியுங்கள். பின் அவரிடம்... மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் இரத்த நாளங்களில் கலந்து உங்கள் உடல் முழுவதும் அது படர்ந்து நீங்கள் நலம் பெறுவீர்கள்...! என்று சொல்ல வேண்டும்.
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவர்களை ஏங்கித் தியானிக்கும்படி சொல்ல வேண்டும்
2.உடலில் எங்கு வலி இருக்கிறதோ அவர்களை அங்கே நினைக்கச் செய்து
3.மகரிஷிகளின் அருள் சக்தி அந்த வலி எடுக்கும் இடங்களில் படர்ந்து வலி நீங்கி நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்கச் செய்ய வேண்டும்.

இப்படிச் செய்தால் அவருடைய நோய் நீங்க நீங்களே உதவி செய்கின்றீர்கள். ஆனால்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்காதபடி
2.உடனடியாக (SUDDEN ஆக) நோய் நீங்கிவிடும் என்று சொல்லக்கூடாது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா என்று முதலில் ஏங்கி அந்தச் சக்திகளை வலுவாக்க வேண்டும்.

அதற்குப் பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவருடைய இரத்த நாளங்களில் கலந்து அவர் உடலில் இருக்கக்கூடிய சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ மற்ற எந்த நோயோ அது நீங்க வேண்டும் என்று சொல்லிப் பழக வேண்டும்.

கணவன் மனைவிக்குள் இவ்வாறு இருந்தாலும்
1.கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்றும்...
2.கணவர் உடல் நலம் பெற வேண்டும் என்றும் மனைவி இதே மாதிரி சொல்லி
3.ஒருவருக்கொருவர் இந்த உணர்வை பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

இதன்படி செய்து வந்தால் எந்த நோயாக இருந்தாலும் அதை நீக்கிடும் சக்தி பெறுகின்றீர்கள். இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும். பழகி விட்டால் சரியாகிவிடும்.

ஆகவே நம்முடைய உணர்வுகள் தீமைகளை அகற்றிடும் சக்தியாக இருக்க வேண்டும்.

தீமைகளை நீக்கிடும் அரும் பெரும் சக்தியாக நாம் விடும் இத்தகைய மூச்சலைகள் இந்த பூமியிலே பரவப் பரவ.... விஞ்ஞான அறிவால் காற்று மண்டலம் நச்சுத் தன்மை அடைந்து வரும் இந்த வேளையில் அதை மாற்றிடும் சக்தியாகப் பரவும்.

கூட்டுத் தியானங்களின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்... நோய்களை நீக்கும் சக்தி பெற வேண்டும் என்றும்... நாம் ஏங்கி எடுத்து அந்த உணர்வுகளைப் பரப்பும் போது பூமியிலே அதிகமாக இது பரவும்.

ஒவ்வொருவரும் இதைச் செய்தால் எல்லோருக்கும் நன்மை பயக்கும் சக்தியாகப் பரவுகிறது. எளிதில் கிடைக்கும் சந்தர்ப்பமும் உருவாகிறது.

உதாரணமாக நண்பனுக்கு நண்பன் பழகும்போது “நன்மை செய்தான்...” என்றால் விக்கலாகிறது... நாம் செய்யும் காரியமும் அப்போது நல்லதாகிறது.

காரணம்... நன்மை செய்த உணர்வுகள் இங்கே படர்ந்திருக்கும் நிலையில் அதை எண்ணும்போது உடனே அவர்கள் உடலிலே பதிந்திருக்கும் உணர்வுகள் அதை இயக்கிச் செயல்படுத்துகின்றது.

ஆனால் பழகிய பின் தீமை செய்திருந்தால் அதைப் பதிவு செய்து எனக்குத் துரோகம் செய்தான் பாவி...! என்று எண்ணினால் உடனே அங்கே இயக்கிப் புரையோடச் செய்கின்றது... காரியங்களும் தடையாகின்றது.

இது போன்ற உணர்வின் இயக்கங்களை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால்
1.நண்பர்கள் உடல் நலக் குறைவாக இருந்தாலும் கேள்விப்பட்ட மாத்திரத்தில் உடனே நாம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு
2.நண்பனின் உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.
3.ஒருவருக்கு ஒருவர் இவ்வாறு நாம் செய்து துன்பங்களை நீக்கிப் பழகுதல் வேண்டும் (இல்லை என்றால் நண்பரிடம் விளைந்தது இங்கேயும் பரவும்)

கூட்டுத் தியானங்கள் ஆங்காங்கு நடக்கும் பொழுது புதிய அன்பர்கள் வந்தாலும் அவர்களுக்கும் இந்த முறையைச் சொல்லிக் கொடுத்து... நீங்கள் இந்த மாதிரிச் செய்யுங்கள்...! உங்கள் குடும்பம் நலமாகும் தொழில் நலமாகும்... உடல் நோய்கள் நீங்கும் என்ற வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்.

அதன் வழியில் கூடுமானவரை அவர்கள் உடலில் இருக்கக்கூடிய சிரமங்கள் குறைந்தால் நீங்கள் சொல்வது போல் அவர்களும் இந்தத் தியானத்தைச் செய்ய முற்படுவார்கள்.
1.அவர்கள் விடும் நல்ல மூச்சுகளும் இந்தப் பூமியிலே பரவும்
2.ஒன்று சேர்ந்து வாழும் சக்திகள் நம் பூமியிலே அதிக அளவிலே வளரும்.