ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 8, 2022

இறந்த உயிரான்மாக்களை எண்ணி இழுக்கக்கூடாது… உந்தித் தள்ள வேண்டும்…!

உதாரணமாக உடலை விட்டுப் பிரிந்தவர்கள் (இறந்த உயிரான்மாக்கள்) இன்னொரு உடலுக்குள் போவதற்கு முன்
1.அந்த 48 நாள்களுக்குள் உணவைப் படைத்து (படையல்) அவர்களை நாம் அழைத்தோம் என்றால்
2.மந்திர தந்திரக்காரர்கள் அதைக் கவரும் வாய்ப்புகள் வருகிறது.

காரணம்… முதல் அமாவாசை அன்று மந்திரவாதிகள் வருவார்கள். இது எல்லாம் அரசர் காலத்தில் செய்யப்பட்ட முறைகள். வழி வழி இன்றும் வருகிறது.

குடுகுடுப்புக்காரனை எடுத்துக் கொண்டால் பார்க்கலாம்… இரவிலே மண்ணை எடுத்து ஜெபிப்பார்கள். உடலில் பட்ட உணர்வுகள் மண்ணிலே பதிந்திருக்கும்.

வாசல்படி மண்ணை எடுத்துக் கொண்டு போய் உணர்வின் தன்மை அறிந்து கொள்வார்கள். காலையில் வந்தவுடனே உங்கள் குடும்பத்தில் இன்னது நடந்தது… இன்னது நடக்கும்…! என்றும் சொல்வார்கள்.

ஆனால்
1.பழைய துணியைத் தான் கேட்பார்கள். தலை முடியையும் கேட்பார்கள்.
2.இது சம்பந்தப்பட்ட ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்துவார்கள்.
3.வியாபார நிலைகளுக்குப் பயன்படுத்துவார்கள்.
4.மந்திர தந்திரங்கள் செய்வோர் இதன் வழியில் தான் செயல்படுத்துகிறார்கள்.

ஆகவே… நாம் அந்த ஆன்மாக்களை மோட்சத்திற்கு அனுப்புவதில்லை.

அமாவாசை அன்று (இருளான நாளில்) இங்கே நாம் அழைப்போம். மண்ணையும் துணியையும் முடியினையும் எடுத்துக் கொண்டவர்கள் மந்திர ஒலி கொண்டு ஜெபிப்பார்கள்.

1.நாம் பாசத்தால் கூப்பிடும் போது அந்த உணர்வின் தன்மை வைத்து
2.ஆன்மாவை இழுத்து அவர்கள் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் நாம் விடுத்துப் பழக வேண்டும்.

“பௌர்ணமி நாளன்று…” குடும்பத்தைச் சேர்ந்தோர் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

உங்கள் குடும்பத்தில் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ளுங்கள்.

உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அந்த ஆன்மாக்களை அங்கே கலக்கச் செய்யுங்கள். இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி பிறவி இல்லா நிலையை அடையச் செய்யுங்கள்.

சப்தரிஷி மண்டலத்தின் உணர்வை நாம் வளர்த்துக் கொண்டால் அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த ஆன்மாக்களை (சூட்சம சரீரத்தை) அங்கே ஏவிவிடலாம்.

சப்தரிஷி மண்டலத்தின் அருகில் சென்ற பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகிறது. நாம் எடுத்துப் பாய்ச்சிய அறிவின் நிலைகள் உயிருடன் ஒன்றுகின்றது.

இப்படி…
1.நம் முன்னோர்கள் முதலில் சப்தரிஷி மண்டலத்திற்குச் சென்றால்
2.அந்த உணர்வைப் பெற வேண்டும் என்று நாம் ஏங்கும் போது துரித நிலைகள் கொண்டு நம் எண்ணங்கள் அங்கே செல்கிறது.
3.அதனின் உணர்வின் துணை கொண்டு தீமைகளை அகற்றும் சக்திகளை எளிதில் பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.