ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2022

தன் தேவைக்கு மேல் சேமித்து வைப்பவன் ஒவ்வொருவனும் “தனக்குத்தானே எதிரி ஆகின்றான்…!”

இன்றுள்ள உலக நிலை அனைத்திலுமே
1.தன் புகழ் உயர வேண்டும்
2.அந்தப் புகழ் உயரச் செல்வம் வேண்டும்
3.அந்தச் செல்வம் சம்பாதிக்க இவ்வுடல் என்னும் கூடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற
4.இப்படிப்பட்ட ஆசைகளுக்காகத்தான் அநேகம் பேர் பல வழிகளில் ஆண்டவனை வணங்குகின்றார்கள்.

ஆண்டவனிடம் தன் ஆசைக்கும்… தன் புகழுக்கும் வேண்டக் கூடாது…! என்பவர்களை எல்லாம் இன்றைய உலகம் “பெரும் பைத்தியமாக…” எண்ணுகின்றது. ஆண்டவன் எங்குள்ளான்…? என்ற கேள்விக்கும் இன்றைய உலகில் அறிந்து பார்க்கும் தன்மை இல்லையப்பா.

ஆண்டவனிடம் வேண்டிக் கேட்காவிட்டால் இவ்வுடலுக்கு ஆகாரம் வேண்டியது இல்லையா…? ஆண்டவன் தான் “பசி…” என்ற பெரும் பசியை இவ்வுடலுக்கு அளித்துள்ளானே.
1.இப்பசியை அடக்க… நாம் உண்டு வாழ்வதற்கு…
2,அவ்வாண்டவனை வேண்ட வேண்டாமா…? என்றெல்லாம் பல நிலைகளில் எண்ணுகிறார்கள்.

ஆனால் இவ்வெண்ணப் பசியைப் பேராசை கொண்ட பசியாக அலைய விட்டு அதனால் வரும் பல இன்னல்களுக்கு நாம் அடிபணிகிறோம்…! என்பதை நம் எண்ணப் பசியில் எண்ணிப் பார்த்தால் புரிந்துவிடும்.

இவ்வாத்மா பசியை யாரும் எண்ணுவதில்லை. இவ்வுடல் பசிக்குத்தான் இவ்வுலகமே இன்றுள்ளது. இவ்வுடல் பசியினால் தான் வரும் நிலைகள் எல்லாமே நமக்கு நடப்பவை.

இவ்வுடல் பசிக்கு நாம் எடுக்கும் உணவும் பிற நிலைகளும் நம் ஆத்மாவிற்கு எந்த நிலையில் ஏற்கிறது என்று எண்ணி
1.இவ்வுடல் என்னும் பசியை
2.மனம் என்ணும் பசியால் அடக்கி ஆண்டிட முடியுமப்பா.

இவ்வுலகில் உதித்த எல்லோரும் ரிஷிகளைப் போலவும் ஞானிகளைப் போலவும் இவ்வுடலுக்கு உணவு உண்ணாமல் “உடல் பசியை அடக்கி ஆளுங்கள்… என்று சொல்லவில்லையப்பா…!

அன்ன ஆகாரம் இல்லாமல் வாழ்ந்திடுங்கள் என்று சொல்லவில்லை.
1.இவ்வுடல் என்னும் கூட்டை
2.”எண்ணம் என்ற ஏவலனால்…” (CONTROL) எந்த நிலைக்கும் வைத்திருக்க முடியுமப்பா.

உண்ணும் உணவிலிருந்து இவ்வுடலுக்கு எப்படிப் பல நிலைகள் கிடைக்கின்றதோ அதேபோல் தான் அவ்வாத்மாவிற்கும் கிடைக்கின்றது.

நாம் உண்டு உடுத்தி மகிழ்ந்து வாழ்ந்திடத்தான் வேண்டும். ஆனால் அதற்காகப் பேராசை நிலை கொண்டு தன் தேவைக்கு மேல் சேமித்து வைப்பவன் ஒவ்வொருவனும் “தனக்குத்தானே எதிரி ஆகின்றான்…!”

இன்று இவ்வுலகில் பெருகி உள்ள மக்கள் நிலையில் அன்பும் ஆதரவும் காட்டி வாழும் நிலைமை மறைந்துவிட்டது. தன் உடல் பசி ஒன்றுதான் ஓங்கி நிற்கிறது.

நல்ல உபதேசங்களைக் கேட்பதும் நல்லோர் வழியில் செல்வதும் நம் ஆத்மாவிற்குச் செய்யும் நற்பணிகளை நாம் ஏற்று நடக்கவில்லை. நம் எண்ணங்கள் எல்லாம் இவ்வுடல் என்னும் பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆண்டவனை எண்ணுவதாகவே உள்ளது.

இவ்வுடல் வேறு… இவ்வாத்மா வேறு…! இவ்வுடலில் இவ்வாத்மா தங்கி இருப்பதையே நாம் பெற்ற பாக்கியமாகக் கொண்டு இவ்வுலக நிலையில் இவ் இயற்கையில் கலந்துள்ள உண்மைகளை அறிந்தே மெய் ஞானிகள் பெற்ற ஆற்றலைப் பெற்று (விண்ணின் ஆற்றல்) நாமும் வாழ்ந்திட வேண்டும்.

அச்சக்தி நிலை ஒரே நிலையில்தான் உள்ளது. நாம் எந்த நிலை கொண்டு ஏற்கின்றோமோ… “அந்த நிலைக்குத்தான்…” அச்சக்தி நிலை நம்முடன் வரும்.

இன்று வீசும் இக்காற்றையே நாம் எண்ணிப் பார்த்தால் நம் நிலைக்கு எல்லாம் விளங்கும்.
1.கொதிக்க வைத்த தண்ணீரை ஆற்றுவதும் அக்காற்றுதான்.
2.அனல் கொண்டு எறியும் விறகை எரிய விடுவதும் அக்காற்றுதான்.
3.ஒரே நிலை கொண்டு வீசும் காற்றுதான் இவ்வனலையும் எரிக்க உதவுகின்றது, கொதி நீரையும் குளிரவிடுகிறது.

அதைப் போல சக்தி நிலையும் நம் நிலைக்கு இப்படித்தான் வருகின்றது. எந்த நிலைகொண்டு நாம் எங்கு செல்கின்றோமோ அந்த நிலைகொண்டு தான் அச்சக்தி நமக்கு உதவி புரிகின்றது.
1.நம் எண்ணத்திற்கு உகந்தபடிதான் அவ்வாண்டவனின் சக்தியையும் நாம் பெற முடியும்.
2.இவ்வுலகமே இவ்வெண்ணம் என்ற பசி நிலையைக் கொண்டுதான் சுற்றி வருகின்றது.
3.தன் எண்ணமும் செயலும் அமைதி கொண்டு தன் ஆத்மாவை அடக்கி ஆள்பவனுக்கு
4.தன் நிலையில் பதட்டத்தை வளர விடாமல்
5.நான் என்ற எண்ணம் கொள்ளாமல் நல்லுணர்வுடனே வாழ்ந்திட முடியும்.

அமைதியுடனும் அன்புடனும் நடத்திச் செல்லும் மனப்பக்குவம் பெற்று வாழத்தான் யாம் சொல்லும் இந்த உபதேசமும் தியானமும்.