ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 21, 2022

குடும்பப் பற்றும்... அருள் பற்றும்

ஞானிகள் காட்டிய வழியினைப் பற்றுடன் பற்றும் பொழுது அருளை நாம் பற்றுகின்றோம். அதன் வழியே காரியங்கள் எல்லாம் நடக்கின்றது.

வாழ்க்கையில் குடும்பப் பற்றினை அதிகமாகச் சேர்த்து அருள் பற்றினைக் குறைக்கப்படும் போது செயல்கள் தடைப்படுகிறது. காரணம்...
1.குடும்பப் பற்று என்று வந்தாலே
2.அதிகமான நிலையில் தன் சிந்தனையை இழக்கச் செய்யும்.

இந்தக் குழந்தைக்கு இப்படி ஆக வேண்டும்... அங்கே இப்படி நடக்க வேண்டும்... என்ற உணர்வு வந்து விட்டாலே போதும்.
1.நமக்குள் பதிந்திருந்த “பழைய உணர்வுகள்” அனைத்தும் முன்னாடி வந்துவிடும்.
2.அது முன்னாடி வந்து விட்டால் அதனைக் காப்பது என்பதே பெரிய சிரமம்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் ஒரு காரியத்தைச் சித்தியாக்க வேண்டுமென்றால் அருள் உணர்வுகள் பெற வேண்டும்... எல்லாம் தெளிவாக வேண்டும் என்ற உணர்வினை அடிக்கடி நாம் கூட்டிக் கொண்டே வந்தால் சரியாக இருக்கும்.

1.கண்களைத் திறந்து விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது எண்ணி
3.அந்த அருள் சக்திகளைச் சுவாசிக்க வேண்டும்.

அதற்குப் பின் வாழ்க்கையில் எது நமக்குக் குறையாகத் தென்படுகிறதோ அது நிறைவேற வேண்டும்... குழந்தைக்கு திருமணம் ஆக வேண்டும் சீக்கிரம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்

ஆனால் ஆகவில்லை என்கிற போது பெண்ணுக்கு இவ்வளவு வயதாகிவிட்டது... திருமணம் ஆகவில்லையே...! என்று ஏக்கம் வருகிறது.

ஏக்கத்தின் தன்மை கொண்டு “அது நடக்க வேண்டும்...” என்ற நிலை இருந்தால் சோர்வு நமக்குள் வராது. ஆனால் சோர்வடைந்த நிலையில் எண்ணி எடுக்கப்படும் பொழுது இந்த விஷத் தன்மைகள் கூடி
1.இந்தப் புவியின் பற்றும் உடலின் பற்றும் அதிகரித்து விடுகின்றது.
2.அருள் ஞானிகளின் பற்று தணிகின்றது.

ஆனால் அருளைக் கூட்டினால் அது வளர்ந்து எதையும் நாம் வெல்ல முடியும்

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுக்கும் உணர்வுகள் உயர்வாக இருக்கப்படும் பொழுது நலமாகின்றது.

கொஞ்சம் தளர்ச்சி அடைந்தால் விஷத்தின் தன்மை கூடி விடுகின்றது மனித வாழ்க்கையின் எண்ணங்கள் கூடினால் அருள் ஞானத்தை இழக்கும் சக்தி வருகின்றது.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும்
1.நமக்குள் வரும் எந்தக் குறையாக இருந்தாலும் அதை மனதில் இருத்தாதபடி
2.அருள் ஒளி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.அருள் ஞானம் பெருக வேண்டும் அருள் வழியில் எங்கள் வாழ்க்கை நலம் பெற வேண்டும்
4.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும்... நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் என்று
5.இந்த உணர்வினை நாம் வளர்த்துக் கொண்டே வந்தால் இந்த உயர்ந்த குணம் நமக்குள் உருவாகும்... நமக்குள் அது பெருகும்... நம்முள் அது வளரும்.
6.நம் சொல் அனைவரையும் பற்றுடன் இயக்கும் நிலை வரும்
7.நாம் எண்ணிய காரியங்கள் ஜெயமாகும்... அந்த உணர்வின் இயக்கமும் நமக்குள் தொடர்ந்து செயலாகும்.