ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 26, 2022

“அறிந்து விட்டோம்...” என்ற எண்ணத்தை விட்டு விட்டு அறிய வேண்டிய எண்ணம் கொண்டு செலுத்துவதே உத்தமம் - ஈஸ்வரபட்டர்

 

நட்சத்திரமாய் உயர்ந்த வளர் சக்தி கொண்ட கோள்களாய்... பல கோடி உயர்ந்த உருளக் கூடிய மண்டலக் கோள்கள் இருந்தாலும்... உணர்வின் உண்மை அறியும் “ஞான மனித நிலை” எல்லாக் கோள்களிலும் இல்லை.

உணர்வின் எண்ணத்தில்... அறியும் ஆற்றல் செயல் தன்மை செயலாகும்...
1.இயற்கையின் ஒளி சூட்சுமத்தை வளர்க்கும் வலிமை கொண்ட தொடர்நிலை வளர்ந்தால்தான்
2.இயற்கையின் சுழற்சி ஓட்டத்திலிருந்து சமைக்கும் குண தத்துவத்தைச் செயலாக்க முடியும்.

ஆகவே பல கோடி நிலைகள் செயல்படும் அண்டக் கோள்களில் அறிவின் ஆற்றலும் அறியும் திறனும் மனிதனுக்குத்தான் உண்டு.

தனக்கொத்ததை மனிதனின் எண்ணம் ஏற்படுத்திக் கொள்ளும் ஏற்றத்தில்...
1.மனித உணர்வின் செயல் வீரியம்... “தான்...!” என்ற முதிர்வு நிலை ஏற்படுத்திக் கொண்டால்
2.தன் அடுத்த வளர்ச்சி நிலை இயற்கையின் தொடர்பு ஒலியை எடுக்க முடியா தேக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும்.

இந்த உண்மைகளை எல்லாம் அறிந்த சித்தன் “தனக்கு மேல் ஒருவன் உண்டு...” என்ற தெய்வத்தின் குணங்களை மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டத் தான் கோவில்களையும் சிலைகளையும் தத்துவ ஞானத்தில் ஸ்தாபித்தான்.

மனிதனின் உணர்வின் வேகம் “தான் உயர்ந்து விட்டேன்...!” என்ற எண்ணத்தைக் கூட்டிக் கொள்ளும் பொழுது தன்னை ஒத்த ஜீவாத்மாக்களை உயர்த்தக் கூடிய உணர்வுகள் மங்கிவிடுகின்றன.

1.தனக்கு மேல் ஒருவன்...
2.“தன்னை உயர்த்தச் செயல்படுகின்றான்...” என்ற எண்ணத்தின் வேகம் செலுத்தும் பக்தியினால் தான்
3.மனிதர்களின் உணர்வில் “தான்...” என்ற எண்ணத்தை அகற்ற முடியும்.

இதை உணர்த்திய பக்குவம் நம் ஞான பூமியில் பல உண்டு.

மனிதன் தெய்வத்தின்பால் செலுத்தப்பட்ட எண்ணத்தின் வேகம் கோயில்களில் தீ மிதித்து விரதங்கள் அனுஷ்டித்து பல செயல்கள் பக்தியில் செயல்படுவதை எல்லாம் பார்க்கின்றோம்.

பக்தியின் உந்தலின் வேகம் அவ் உணர்வின் வீரியத்திற்கொப்ப “அவன் எடுக்கும் சுவாசத்தின் வேகத்தால்” இன்றும் தீக்குண்டங்கள் நடப்பதைக் காண்கின்றோம்.

மனிதனின் உணர்வின் எண்ண வேகம் “எதனையும் ஈர்க்கவல்ல செயல் குணத் தன்மை கொண்டது...” இதனை...
1.தான் அறிந்து விட்டோம்... என்ற எண்ணத்தை விட்டு விட்டு
2.அறிய வேண்டிய எண்ணம் கொண்டு செலுத்துவதே உத்தமம்.

மனித உணர்வில் சலிப்பு சோர்வு வெறுப்பு கோபம் என்ற நிலைகளைக் கூட்டிக் கொள்ளாமல்... நற்குணத்தின் நறுமணமாய் இச்சரீர உணர்வின் ஒலி சுவாசமெடுத்து.... சம குணத்தின் ஒலியால் இயற்கையின் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் ஒளியால்... நட்சத்திர மண்டலங்களின் ஒலி அலைகளையும் ஜீவ உணர்வுடன் இழுக்கும் பொழுது... இஜ்ஜீவ உணர்வின் எண்ணத்தில் மோதும் பொழுது... ஒளியாக... மின்காந்த ஒளியாக ஆத்மா ஒளிர்கின்றது.

ஆத்மாவின் ஒளிகள் மண்டலக் கோள்களின் எண்ண உணர்வுடன் ஈர்க்கும் பொழுது எப்படி இன்று நீரைக் கொண்டு இக்காற்றலையில் இருக்கும் மின் காந்த ஒளி சக்தியை மின்சாரமாக விஞ்ஞானத்தில் காண்பதைப் போன்று...
1.இச்சரீர எண்ணத்தின் உணர்வின் வேகத்தால்
2.நட்சத்திரங்களில் இருந்து வருவதையும் சூரியன் சந்திரன் மற்றக் கோள்களிலிருந்து வரும் சக்திகளையும்
3.நாம் எண்ணி எடுக்கும் ஒலி அலையில் அவ்வொலியின் உணர்வுடன் எண்ணத்தை எக்கோளுடன் செலுத்துகின்றோமோ
4.அந்த மண்டலங்களிலிருந்து வெளிப்பட்ட அமிலம் இச்சரீர உணர்வின் எண்ணமுடன் மோதும் பொழுது
5.உடலில் உள்ள உயிர் அணுக்கள் யாவும் ஒளி நிலையைப் பெறும் தன்மையை இச்சரீர ஆத்மா வளர்த்துக் கொள்ளும்.

இப்பூமியின் உணர்வுடன் சுழலும் வாழ்க்கை நிலையில்... மீண்டும் மீண்டும் இப்பூமி சமைத்து வெளிப்படுத்திய உணர்வின் ஒளியைத் தான் ஆத்மா வளர்த்துக் கொள்கிறது.

அத்தகைய தொடரில் நம் ஆத்மா இப்பூமிப் பிடிப்பில் சிக்கிவிடும் தன்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு
1.உயிரின் உயர்வை உய்யும் செயலாய்
2.ஒவ்வொரு நொடிப் பொழுதும் காலத்தை விரயப்படுத்தாமல்
3.உயரும் தன்மையில் நாம் அனைவரும் உய்வோமாக..!