ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 1, 2022

சூரியனுக்கும்… உயிருக்கும்… துருவ நட்சத்திரத்திற்கும் உண்டான தனித் தனி செயலாக்கங்கள்

 

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தையே பொங்கச் செய்கின்றது அதனதன் வாழ்விற்கு அதனதன் நிலையைக் கொடுக்கின்றது. ஆனால் மனிதன் அருள் ஞானத்தின் உணர்வைத் தனக்குள் செலுத்தி வாழ்க்கையில் வரும் இருளை நீக்குதல் வேண்டும்.

1.சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை ஒளிமயமாக ஆக்குகின்றது
2.நமது உயிரோ மற்ற அணுக்களின் தன்மையை அறிவாக இயக்கச் செய்கின்றது
3.துருவ நட்சத்திரமோ இருளை வென்று ஒளியின் உணர்வாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

நம் உடலில் தெரிந்தோ தெரியாமலோ தீமையான அணுக்கள் உருவானால் அந்த அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தி அதனின் வீரிய உணர்வு பெற வேண்டும் என்று செலுத்தினால் அது ஒளியின் தன்மை பெறும்.

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு நல்ல மருந்தினை உருவாக்கி நோயுற்ற உடலில் செலுத்தப்படும் பொழுது அது இரத்த நாளங்களில் கலந்து மற்றவையுடன் சேர்த்து நல்ல அணுக்களாக உருவாக்குகின்றது.

இதைப் போன்றுதான் நாம் நுகரும் உணர்வுகள் நம் சிரசு பாகம் இருக்கும் உயிருடன் கலந்தால் அது ஈஸ்வரலோகம். உயர்ந்த குணத்தை உருவாக்கி அந்த அணுவின் கருவாக நம் இரத்த நாளங்களில் சேர்க்கின்றது… இந்திரலோகமாக மாறுகிறது.

அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் சென்று இரத்த நாளங்களில் கலந்து உடல் உறுப்புகளில் இணையப்படும் போது பிரம்மலோகமாக மாறுகிறது. எக்குணத்தின் தன்மை பெற்றோமோ இந்த உணர்வின் இயக்கமாக அது இயக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே அதன் வழி கொண்டு நமது வாழ்க்கையில் தெளிந்த மனதையும் உயர்ந்த உணர்வுகளையும் உருவாக்கி பேரின்பப்பெரு வாழ்வு வாழச் செய்யும் அருள் உணர்வுகளை நாம் உருவாக்குதல் வேண்டும்.

1.உலகில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும்
4.வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றும் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

காரணம் உலக மக்கள் உணர்வுகள் நமக்குள்ளும் உண்டு.

எல்லோருடைய உணர்வுகள் நமக்குள் இருந்தாலும்… கீதையிலே நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய் என்பது போல்
1.எல்லோரும் நலம் பெற வேண்டும் என்றும்
2.அருளொளி நமக்குள் பெற வேண்டும் என்றும் நாம் எண்ணும் பொழுது
3.நமக்குள் இருக்கும் உணர்வுகளை அது ஒளியாக மாற்றுகின்றது.

அரிசியையும் பருப்பையும் சர்க்கரையும் பாதாமையும் முந்திரியையும் போட்டுச் சுவையாகப் பொங்கலை உருவாக்குவது போன்று நமக்குள் பல சரக்குகள் இருந்தாலும்
1.அருள் ஞானிகள் உணர்வு கொண்டு எல்லோரும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நுகர்ந்தால்
2.அதுவே நமக்குள் சுவையாக உருவாகின்றது... பொங்கல்…!
3.இது தான் தை… “இணைத்தல்” என்று நமக்குள் சேர்க்கின்றது.

ஆகவே… எந்த உணர்வின் தன்மையை இணைக்கின்றோமோ அதன் உணர்வுக்கொப்ப நம்மை இயக்குகிறது என்ற உண்மையை நாம் அறிந்து கொண்ட நிலையில்… உலக மக்கள் அருள் ஞானம் பெற்று அவர்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருளை நீக்கி மலரைப் போன்ற மணம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.

1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற தியானிப்போம்… நம் உடலுக்குள் அதை உருவாக்குவோம்
2.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்… மகிழ்ந்து வாழும் சக்தியை நம் உடலில் உருவாக்குவோம்
3.நம் சொல்லும் செயலும் பிறரை மகிழச் செய்யும் நிலையாக நமக்குள் உருவாக்குவோம்.
4.உலக மக்கள் அனைவரும் தெளிந்த மனம் கொண்டு வளர “குரு அருளை” நமக்குள் பெருக்குவோம்
5.குரு அருளைத் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவோம்
6.உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறத் தியானிப்போம்… தவம் இருப்போம்.
7.அந்தத் தவத்தின் பலனாக அனைத்து மக்களும் உடல் நலம் பெற… நம் உடலில் உள்ள அணுக்களும் நலம் பெற
8.நம் சொல் கேட்போர் உணர்வுகளை நலம் பெறச் செய்யக்கூடிய சக்தியாக ஒவ்வொரு நாளும் நாம் செயல்படுத்துவோம்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!