ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 17, 2022

தெய்வ குணத்தை வளர்ப்பதே “சைவ சித்தாந்தம்...” ஈஸ்வரபட்டர்

 

ஜீவன் பெற்ற அனைத்து ஜீவன்களுக்குமே ஞானம் உண்டு. ஞானத்தை எதில் செலுத்துகின்றோமோ அச்செயல்தான் நடக்கின்றது.

1.ஞானத்தை மெய்யாக ஆக்கும் உயர் ஞானத்தை உணரும் சித்தத்தால்
2.உண்மையை வளர்க்கும் சைவ சித்தமாக்க வேண்டும்.

உணர்வில் வளர்க்கப்படும் எண்ணங்கள் “பிறிதொன்றை வளர்க்கவல்ல...” உயர் குணமுடன் தெய்வ குணங்களைப் பெறுவது சைவத்தின் சித்தம்.

ஆனால் அசுர குணங்களை அரக்க குணமாக எண்ணக்கூடிய உணர்வு அசைவமாகின்றது. அதனுடைய தொடர் அலையில் வளர்ப்பின் நிலை யாவையுமே வளர்வற்ற சிதறும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

இன்று இப்பூமியில் காற்றலையில் கலந்துள்ள அமிலத் தன்மை திடமாகி அத்திடத்தை நாம் நுகரும் பொழுது அதனுடைய வாசனை அதிகமாக வீசுகின்றது.
1.அதனையே சமைக்கும் பொழுது
2.திடத்தைக் காட்டிலும் வேகமாக அதனை நுகர முடிகின்றது.

சமைப்பின் பொருள் அனைத்தும் காற்றலையில் இருந்துதான் திடப்பட்டு செயலுக்கு வருகின்றது.

செயல்படும் பொருளைப் பார்க்கும் பொழுது (கண்களால்) அது “உறுதிப்படுத்தப்பட்ட உண்மை...” என்று அறிகின்றோம். உண்மை எதிலிருந்து வருகின்றது...?

இக்காற்றலையில் எவை எவையெல்லாம் கலக்கப் பெற்றுள்ளனவோ அவை தான் திடமாகிச் செயலாகின்றது. அதைப் போன்று...
1.வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள திடப் பொருளை நம்பி
2.அதைத்தான் உண்மை...! என்று நாம் உணர்ந்து
3.இந்த உடலுக்கு மட்டும் வாழுகின்றோம்.

உணர்வலையாக எண்ணுவதை... காற்றலையில் கலந்துள்ள உயர்ந்த நிலையை... தனக்கொத்த உணர்வலையின் எண்ணமுடன் “வலுப்படுத்தக் கூடிய வளர்ச்சிக்குத் தன் சித்தத்தைச் சைவமாக்க வேண்டும்...”

திடத்தின் உடல் வாழ்க்கையில் வாழக் கூடிய வழித் தொடர் யாவையும் அசைவம் தான்.

சித்தத்தால் எடுக்கும் மெய் ஞானத்தைத் தன் ஞானமாக்கும் உயர் ஞானி... தன் ஆத்மாவை அழிவில்லா ஒளித் தன்மையாக... என்றுமே அழியா நிலை கொண்டு ஏகாந்தத் தன்மை பெறுகின்றான்.

1.ஏகாந்த நிலைக்கும்...
2.இவ்வுடலின் உணர்வின் எண்ணத்தைச் சைவமாக்கும் தெய்வ குணத்திற்கும்... தொடர்புண்டு.

ஏனென்றால் இஜ்ஜீவ வாழ்க்கையில் சரீர உணர்வின் எண்ணம்.. சங்கடத்துடன்... சலிப்புடன்... மோதப்படும் உணர்வால் மனிதன் தன்னையே அசைவமாக்கிக் கொள்கின்றான்.

தெய்வ குணத்தைத் தன்னுள் வளர்த்து... மெய் உணரும் வழியை அறிய... தெய்வ குணங்களைப் பெற ஒவ்வொருவரும் அதை உரமாகத் தான் எடுத்து வளர்தல் வேண்டும்.

ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ குணங்களை வளர்க்கும் சைவத்தின் சித்தாகத் தன் உணர்வின் செயல் அமையும் பொழுது தன் வலுவின் வளர்ச்சியால் மெய் ஞானி சித்தனாகின்றான்.

சித்து நிலையின் அஷ்டமாசித்தினால் அகிலத்தையும் அறியக்கூடிய வளர்ச்சி நிலையின் வளர்ப்பால் ரிஷியாக முடியும்.

இரு மனத்தின் திருமணமே
இல்லறத்தின் நறு மணமே
இறையுணர்வின் வழியறிந்தே
இவ்வுலகின் காவியத்தில்
இருளகற்றும் ஒளிச்சுடராய்
இனியதொரு வாழ்வமைப்போம்

இடும்பனான குணமகற்றி
இறையருளின் நற்குணத்தில்
ஈன்றெடுக்கும் கனியமுதே
ஈசனருள் பொக்கிஷமே...!

இல்லத்தில் இனிய வித்திட்டு
இனிய குண வளர்ப்பாக
இல்லறத்தில் நீர் ஊற்றி
இன்பத்தின் இனிமை பெற்றிடவே

ஈசன் அருளில் உதித்த நாம்
ஈன்றெடுத்த தெய்வமாய்
ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்