ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 12, 2021

தொழில் செய்யும் இடத்தில் (டென்சன்) பகைமை வளராது இருக்க எப்படித் தியானிக்க வேண்டும்...?

ஒரு தொழிற்சாலையில் நாம் வேலை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நம்முடைய மேலதிகாரி வேலைக்கு வரும் நேரத்தில்... அவர் குடும்பத்திலேயோ அல்லது வரும் பாதையிலேயோ அவருடைய சந்தர்ப்பம்... தவறான செயல்களை உற்றுப் பார்த்து விட்டால் அந்த உணர்வுகளை அவர் நுகர்கின்றார். அதனால் அவருக்குள் வெறுப்படையும் உணர்வுகள் வந்து விடுகின்றது.
 
அந்த வெறுப்பான உணர்வுடன் தொழிற்சாலைக்குள் வந்தால் அந்த வெறுப்பான உணர்வு கொண்டே அவர் பார்வைகள் வரும்.
 
1.இங்கே தொழில் செய்வோர் சீராகச் செய்தாலும்
2.அவருடைய உணர்வுகள் அந்த வெறுப்படையும் உணர்வுடன் இவர்களை உற்றுப் பார்க்கும் பொழுது
3.இவர்கள் செயலைக் கண்டு குறை கூறும் உணர்வுகளாக... அந்த உணர்ச்சிகளை அங்கே அவருக்குள் தூண்டும்.
 
அவர்கள் நல்லதைச் செய்தாலும் அவர் எடுத்துக் கொண்ட உணர்வால் அவர்களையும் வெறுக்கும் உணர்வைத்தான் உருவாக்கும். அவ்வாறு உருவாக்கி விட்டால் அந்த மேலதிகாரியின் சொல்லும் கடுமையாகும். (இதை எல்லாம் கண்கூடாகப் பார்க்கலாம்...!)
 
அப்படிப்பட்ட வெறுக்கும் உணர்வுடன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அவர் சொல் (கடுமையான) நமக்குள் பதிவாகி விட்டால் அவர் மீது வெறுப்படையும் சக்தியும்... அதே நினைவும் நமக்குள் வருகின்றது.
1.அவரைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு வெறுப்பும்
2.அவர் நம்மைப் பார்க்கும் பொழுது அவருக்கும் வெறுப்பு வருகின்றது.
 
ஆக... ஒரு தொழிற்சாலையில் ஒரு முறை இப்படித் தவறு என்ற உணர்வுகள் பதிவாகி விட்டால் இது வழி தொடர்ந்து இருவருடைய உணர்வுகளும் வெறுப்படையும் அணுக்கள் விளைந்து அவரவர்கள் உடலிலுள்ள நல்ல அணுக்களை வளரவிடாது தடுக்கும் நிலையே வருகின்றது.
 
1.இத்தகைய நிலைகள நமக்குள் வளர்க்கப்படும் பொழுது
2.தொழிற்சாலைக்குள் வந்தபின் மன நோய் போன்று உருப் பெறுகின்றது
3.சிந்தனை இழக்கச் செய்கின்றது... செயல்களைச் சீராக இயக்க முடியாத நிலைகள் இருவருக்குமே வருகின்றது.
 
இதைப் போன்ற உணர்வுகள் சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகளைத் தடுக்க வேண்டுமென்றால் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரின் பால் நினைவைச் செலுத்த வேண்டும்.
 
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்... எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.
 
அதற்கு அடுத்து...
1.நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்
2.எங்களைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும்
3.எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெறவேண்டும்
4.எங்கள் சொல் அனைவருக்கும் நன்மை பயக்க வேண்டும் என்று நமக்குள் வலுப்படுத்த வேண்டும்.
 
மேலதிகாரியை நினைக்க வேண்டியதில்லை...! உங்கள் உணர்வுகள் இவ்வாறு தான் வர வேண்டும் என்று எண்ணங்களைச் செலுத்திவிடுங்கள்.
 
ஏனென்றால் இந்த உணர்வின் வலு நமக்குள் ஏற்பட்டால்...
1.அவர் செய்த தீமையின் உணர்வுகளால் நமக்குள் விளைந்த அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படும்
2.அல்லது முதலில் பார்த்தபின் கருவின் தன்மை (வெறுப்பான அணு) அடைந்திருந்தால் அது மீண்டும் வளராது தடையாகிவிடும்.
 
விவசாயம் செய்கிறோம் என்றால் நிலத்தின் மேலே விதைகளைத் தூவும் பொழுது மண்ணுக்குள் பதிந்தால் அந்த விதை முளைத்து விடும் மண்ணை விட்டு வெளிப்பட்டால் அந்த வித்து முளைப்பதில்லை. ஆனால் அதை நாம் எல்லாச் சமயங்களில் கவனிப்பதும் இல்லை.
 
இதைப் போன்று தான்... ஒருவர் சொல்லும் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி விட்டால்... அந்தப் பதிவின் தன்மையை நமக்குள் மீண்டும் மீண்டும் நினைவு கொண்டால் அவர் செய்த தீமையின் உணர்வுகள் நமக்குள் நிச்சயம் வளரத் தொடங்கும்.
 
ஆனால் அது வளராது தடுக்க வேண்டுமென்றால்...
1.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
3.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும்
4.என் மேலதிகாரி என்னைப் பார்க்கும் பொழுது அவருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்ற உணர்வினை நாம் செலுத்தி விட்டால்
5.நமக்குள் இருக்கும் அந்த  வெறுப்பின் உணர்வால் வளர்ந்த அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது அது நசிந்துவிடும்.
 
ஒரு வித்திற்கு நாம் மீண்டும் மீண்டும் நீரை ஊற்றும் பொழுது தான் அது வளர்ச்சி அடைகின்றது. நீரை ஊற்றாது விட்டுவிட்டால் அதனின் வளர்ச்சி தடைப்படும்.
 
அதே போல் அந்த மேலதிகாரிக்கு நல்ல எண்ணங்களும் நல்ல உணர்வுகளும் வளர வேண்டும்... அவர் குடும்பம் நலம் பெற வேண்டும்... அவர் சொல்லிலே இனிமை பெற வேண்டும்... அவர் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்...! என்று இப்படி நீங்கள் எண்ணி மாற்றிவிடுங்கள்.
 
அவர் பெற்ற அந்தத் தீமையின் உணர்வுகள் அவர் உடலில் விளைந்தது தான்...
1.இருப்பினும் நமக்குள் அது வளராது தடுக்க இது உதவும்
2.மேலே சொன்ன முறைப்படி செய்தால் அவரைப் பார்க்கும் போது அந்த வெறுப்பின் தன்மை நமக்குள் வராது
3.தொழில் செய்யும் இடங்களில் பகைமைகள் நிச்சயம் மறையும்.

செய்து பாருங்கள்..!