ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 4, 2021

பசுக்களுக்காக வசுவா... வசுக்களுக்காகப் பசுவா...? - ஈஸ்வரபட்டர்

தன் உயிர் சக்தியை வலுக்கூட்ட... மனிதச் சரீரம் கிடைக்கப் பெற்ற இன்றைய கால கட்டத்தில் நாம் உண்மையை உணர்ந்து
1.“உலகோதய நான்…” என்ற நிலையை விடுத்து
2.“பரப்பிரம்மமாகிய நான்…!” என்ற நிலையைப் பெறும் வழி அறிந்திட வேண்டும்.
 
தன் உயிர் சக்திக்கு ஒத்த ஆகார நிலையை வழி அமைத்து சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களையுமே ஒளியான சக்திகளை பெறச் செய்யும் மார்க்கம் அறிய வேண்டும்.
 
அந்த மார்க்கத்தை அறிந்திடும் நிலையாக...
1.பசுக்களுக்காக வசுவா…? வசுவிற்காகப் பசுக்களா..? என்ற கேள்வி எழுந்து
2.அதன் மூலம் பெறப்பட்ட ஞான வழித் தொடர் தான்
3.“கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தான் கோபாலன்…!” என்ற தத்துவமே.
 
கண்ணன் என்ற உயிர் சக்தியின் வலுவைக் காட்டி வசுவாகிய ஒளிச் சக்தியை அதனுள்ளே காட்டிக் “கோபாலன்…!” என்ற பசுக்களைப் பராமரிக்கும் வித்தகனாக அதை உணர்த்தினார் வியாசகர்.
 
அதாவது...
1.தனது சரீரத்தையே அண்டமாகவும்
2.உடலில் உள்ள உயிரணுக்கள் எல்லாவற்றையும் பசுக்களாகவும்
3.கண்ணனாகிய உயிர் சரீர உயிரணுக்களுக்கும் தனக்கும் ஆகாரம் ஊட்டுவிக்கும் தன்மையில்
4.நாதத்தைக் காட்டக் கண்ணன் கையில் வேய்குழலும் (புல்லாங்குழல்)
5.“காற்றே தான் ஆகார சக்தி…!” என்பதை மறை பொருளாக வைத்து
6. தியான வழித் தொடர் மூலமாக அத்தகைய வலுப் பெற்றுவிட்டால்
7.தனக்குகந்த பக்குவத்திற்கு உயர்ந்த ஒளிக் காந்த சக்தியினை வலுக் கூட்டி
8.அதே தொடரில் கால மாற்றமாகிய இயற்கையின் சீற்றத்தையும் கலியில் காட்டி
9.இந்த உண்மைகளை எல்லாம் காவியமாக்கி... சொல்லாமல் சொல்லி
10.நம் உயிர் ஒளி சக்தியைப் பெற்று சரீரத்தின் மூலமாக அதை வளர்த்துக் கொள்ள வேண்டிய உயர்வைக் காட்டினார் மாமகரிஷி வியாசகர்…!”
 
ஆதார சுருதி நாதத்தில் செயல்பட்டு நம் தியானமாகிய அந்நாத ஜெபமே எண்ணத்தின் வலுவாகி உயிர் சக்தி அதன் மூலமாக வளரும் சக்தி பெற “கோவர்த்தனைகிரியைச் சுட்டு விரலால் தூக்கியதாகக் காட்டுகின்றார் வியாசகர்…!”
 
அதாவது…
1.கரத்தை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி
2.நம் உயிர் பெறவேண்டிய உயர்வைக் காட்டி
3.அதன் சக்தி வலுவை (கோவர்த்தன) மலையாகக் காட்டி
4.அதன் பாதுகாப்பில் உடலில் உள்ள (பசுக்களாகிய) உயிரணுக்கள் கூடிக் காக்கப் பெற்றன என்பதே அதன் தத்துவம்…!
 
தன் உயிர் சக்தியை உயர் மின் ஒளி காந்த சக்தியாக உயர்த்துவது மட்டுமல்லாமல்... முத்தொழில் தத்துவத்தில் காத்தல் என்பது சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களையுமே என்பது மறை பொருள்.
 
திட ஆகாரத்தின் மூலம் பெறப்படும் வீரியச் சுவை குணங்களில் எந்தச் சுவை வீரியக் கூட்டப்படுகின்றதோ அந்தக் குணங்களின் வழித் தன்மைக்கு ஒப்ப உணர்வுகளின் உந்துதல் ஏற்பட்டு அதே வழி தான் நம் வாழ்க்கையும் நடக்கின்றது.
 
அப்படி இல்லாதபடி உயர்ந்த எண்ணங்களின் வழியில்... தான் கட்டுக்குள் அடங்கிச் செயல்புரிய வேண்டிய உணர்வுகள் என்பது நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய செயல் முறை. ஞானம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொது மறை.
 
உணர்வுகளின் வழிக்கெல்லாம் நம் புலன்கள் போவது என்பது உயிரின் ஆதார வித்தையே.
1.கொள்ளை கொண்டு போய்விடக்கூடிய செயலுக்கு உட்படாதபடி
2.உயரிய எண்ணத்தின் வழி எடுக்கப்படும் வீரிய உயர் ஞான சக்தி கொண்டு
3.தன் உயர்வைத் தானே தேடிக் கொள்ளும் சுயப் பரப்பிரம்மமாக நாம் வளர்தல் வேண்டும்... இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
 
ஆகவே
1.உயிர் பெறும் அந்த ஒளி காந்த சக்தியுடன்
2.சரீரத்தில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி சக்தியான ஆகாரத்தை உண்ண வைத்து
3.ஒளி நாத தத்துவத்தில் அழியா ஒளிச் சரீரம் பெறும் வழி முறை செயலுக்கு நாம் ஒவ்வொருவரும் வரவேண்டும்.