ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 11, 2021

வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் எத்தகைய நிலையையும் நறுமணமாக... அமுதமாக... பேரொளியாக மாற்ற முடியும்

பால்வெளி மண்டல சூட்சம சக்திகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
 
அதாவது ஆதிசக்தியின் “நீர் அமில ஒளி காந்த மூலம்…” உள்ளடங்கி ஓர் வண்ணமாக மூலத்திலிருந்து வெளிப்படும் ஏழு வண்ண அமில குணங்களாக வெளி வருகிறது.
 
1.நிறம்
2.குணம்
3.உள்மூல நீர் அமிலம் என்ற
4.மூன்று சக்திகளின் தொடரின் கலப்பில் பால்வெளியில் படர்ந்து கொண்டே உள்ளது.
 
வான இயலை உன்னிப்பாகப் பார்த்தால் பல விதமான வர்ணங்களையும்… எண்ணிலடங்கா வாயுக்களையும்… உருவாக்கும் ஜீவ சக்தியையும் காண முடியும்.
 
அதிலே தான் ஒன்றுடன் ஒன்று கலந்து பிறிதொன்றை உருவாக்கும் உயிரணுக்கள் தோன்றுகிறது.
 
அத்தகைய வினைச் செயலின் படைப்பில் அனைத்துச் சக்திகளையும் காத்திடும் பக்குவத்தில் உயிரணுவிலே முலாமாகும் வீரிய அமிலம் தன் வளர்ச்சியின் வளர்ப்பாக்க மற்ற அமில குணங்களைத் தன் வளர்ப்பிற்குத் துணை சக்திகளாக எடுத்துக் கொள்கிறது.
 
அவ்வாறு வளரும் பக்குவத்தில் கோடானு கோடி உயிரணுக்கள் பால்வெளியின் பரமாத்மாவின் தத்துவத்தில் ஒன்றுடன் ஒன்று ஈர்த்துப் பிறிதொரு சக்தியாகவும் வளர்ச்சி கொள்கிறது.
 
அந்த வளர்ச்சியில் எந்த அமில முலாம் வீரியமாக வளர்ச்சி நிலை பெற்றதோ அதுவே வினையின் கதியால் வினையின் செயலுக்குத் தொடர் நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டேயுள்ளது.
 
இந்தத் தொடர் “காலம் காலமாக…” நடக்கின்றது.
 
நீர் நிலையின் ஊடே பாய்கின்ற ஒளிக் கதிர் (வானவில் – RAINBOW) ஏழு வண்ணங்களைக் காட்டுவது எட்டாவது வண்ண மூலத்திலிருந்து தான்.
 
அந்த ஏழு வண்ணங்களின் அமிலங்களுக்குள் நீர் சக்தியின் மூலம் சக்திகள் பாய்ந்து அது செயல் கொண்டிட்ட விதங்களை சித்தர்கள் காட்டியுள்ளார்கள்.
 
நீர் சக்தியின் குளிர்விப்பால் தான் (உறையும் போது தான்) உயிரணுக்களின் இயக்கத் தொடர்பில் சரீரங்களாக… பிம்பங்களாக உருப்பெறுகின்றது. ஜீவனுள்ள உருவங்களாக ஆனதைத் தான் சீவலிங்கம் (சிவலிங்கம்) என்று சொல்வது.
 
சரீரம் என்ற குகைக்குள்…
1.உயிரணுவின் காந்த அமில ஈர்ப்பின் குணம்
2.சக்தியாகச் செயல் கொள்வது என்பது
3.சரீரத்தின் மூலம் பெறும் வளர்ச்சி பெறும் நிலை.
 
அதாவது “ஆன்மா வலு கொண்டிடும் தற்காப்புப் பணி…!” என்று விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த ஆன்மாவைச் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் ஊடே உயிர் சக்தி சூட்சமத்தில் செயல் கொள்கிறது என்பதையும் அறிந்திடல் வேண்டும்.
 
பால்வெளியில் பரந்துள்ள நீர் சக்தி அது வளர்ச்சி கொள்ளும் பக்குவத்தில்
1.மனக் குகையினூடே பாதுகாப்பு வளையமிட்டு
2.ஆத்ம லிங்கத்தைப் பூஜிக்கும் உயிர் சக்தி
3.மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு
4.தன் சுய சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் நிகழ்வில் எழுவதே “உயர் ஞான ஜோதி மலர்…!”
 
தாமரை மலரை உவமை காட்டுவது எதற்கு…?
 
சூரியனின் தொடர்பு கொண்டு நீர் சக்தியின் மூலமாக உயிரணுக்கள் உடல் பெற்று உருவாகும் நிலையை உணர்த்துவதற்காகத்தான்.
 
ஏனென்றால் இரு வித சுவாசத்தின் அலைகளாக…
1.பூமி தனக்குள் ஈர்க்கும் அலையும்
2.பூமி அதை ஈர்த்துச் சமைத்து வெளிக்கக்கும் சுவாச அலையும்
3.பரவெளியில் மோதுண்ட நிலையில் அதை ஈர்த்து உருவாகும் மலரே “தாமரை மலர்…!”
 
தாமரை தான் ஈர்த்திடும் அமில குணத்தின் மூலம் அமுதத்தை மலரும் மலராக மலர்கிறது. தன்னுள் பாய்ந்திடும் விஷ அமில சக்தியைத் தன் இலைப்பரப்பில் பதிய வைத்துக் கொள்கிறது.
 
அந்த விஷ அமிலத்தையே இலையின் மூலம் தன் சக்தி குறைவு படாமல் ஏழு வண்ணத்தில் ஓர் வண்ணமாக மலராக மலர்ந்திட தனக்குகந்த ஆகாரத்தைச் சமைத்துச் சூரிய சக்தியின் தொடர்பில் தன்னை வளர்ச்சி நிலைப்படுத்துகின்றது.
 
இந்தத் தத்துவத்தைத் தெரிந்து கொண்டால்…
1.வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் எத்தகைய நிலையையும்
2.நறுமணமாக அமுதமாக பேரொளியாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.