ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 1, 2021

அண்ணாமலையான் தீபம்

கார்த்திகை தீபம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மனிதனின் ஆறாவது அறிவைத்தான் கார்த்திகேயா என்று காட்டினார்கள் ஞானிகள். அனைத்தையும் தெரிந்து கொள்ளக்கூடிய நிலைகள் மனிதனின் ஆறாவது அறிவு.
 
ஒரு விளக்கை ஏற்றினால் அந்த விளக்கின் ஒளி கொண்டு மற்ற பொருள்களைப் பார்க்க நேர்கின்றது… தெரிய முடிகின்றது. அதைப்போல ஆறாவது அறிவால் நாம் தெரிந்து கொள்ளும் சக்தி பெற்றவர்கள் என்று காட்டுகின்றார்கள்.
 
இதை அண்ணாமலை தீபம் என்று சொல்வார்கள்…! அண்ணாமலை தீபம் என்றால்…
1.நமது உடல் மலையாக இருக்கின்றது
2.நம் உயிர் இருக்கும் இடம் ஒளியாக இருக்கின்றது
3.இந்தச் சுடரின் ஒளியைப் போல நம் உணர்வுகள் அனைத்தையும் ஒன்றாக்கி ஒளியாக சுடராக மாற்றிடும்
4.அதை நினைவுபடுத்தும் நாள் தான் இந்த கார்த்திகை ஜோதியின் தன்மைகள்.
 
அன்றைய தினம் நம் வீட்டு முச்சந்தியில் விளக்குகளைக் கொளுத்தி வைப்போம். எல்லா நாளும் அல்லாது வீட்டு முகப்பில் ஏன் விளக்குகளை வைக்கின்றோம்…?
 
முகப்பில் ஒளி என்ற உணர்வை வைத்து இருளை அகற்றிடும் தன்மையாக மெய் என்ற உணர்வை நமக்குள் அறிந்துணர்ந்து… எது மெய்…? எது பொய்…? என்று வெளிச்சத்தின் மூலமாக நாம் காண முடிகின்றது.
 
நமக்குள் எந்தத் தீமைகளும் புகாது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும் என்று காட்டுவதற்குத்தான் வீட்டு வாசலின் முகப்பில் விளக்கை வைப்பது.
 
அந்த சாஸ்திர வழக்கப்படி மனிதர்களுக்கு நினைவுபடுத்தும் நாள் தான் இது. நாம் சுவாசிக்கும் உணர்வு (மூக்கிற்கு நேராக உயிர்) முகப்பில் இருக்கின்றது. தெளிவான உணர்வின் தன்மையை அருள் ஒளி என்ற உணர்வை நாம் சுவாசித்து இந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் சேர்த்து இருளை அகற்றும் தனக்குள் தெளிந்த உணர்வு கொண்டு உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற வேண்டும்.
 
இந்த மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்…
1.நாம் சுவாசிக்கும் முகப்பிலே உயிரிலே பட்டுத்தான் உண்மையின் உணர்வை நாம் அறிகின்றோம்.
2.அங்கே ஒளி என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது பொருளைக் காணும் தன்மைகள் வருகின்றது.
 
ஆகவே தான் இதை நினைவுபடுத்தும் நாளாக “அண்ணாமலை தீபம்” என்று காட்டுகின்றனர். அண்ணாமலையான் என்றால் நம் உயிர் உடலின் உச்சியிலிருந்து கொண்டு அந்த ஒளியின் தன்மையாக நம்மை இயக்குகிறான்.
 
உடல் சிவம் என்றாலும் சிவனின் ரூபத்தைக் காட்டி அண்ணாமலையான் என்று உயிரான ஈசனைக் காட்டி உடலை (சிவத்தை) இயக்குகிறது என்று காட்டுகின்றனர்.
 
ஆனாலும் நாம் சுவாசிக்கும் போது உயிரிலே பட்டு எதன் உணர்வைத் தெரிகின்றோமோ அதன் ஒளியின் தன்மை கொண்டு தான் நாம் இயங்குகின்றோம்.
 
1.கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
2.தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றும் போது ஒளியின் உணர்வாக நம் உடலே ஒளியாகின்றது
3.நம் சொல்லும் ஒளியாகின்றது… செயலும் ஒளியாகின்றது.
 
இதை நினைவுபடுத்தும் நாள் தான் அண்ணாமலையான் தீபம்.
 
ஆறாவது அறிவு கொண்டு தெரிந்து… தெளிந்து… நாம் வாழும் இந்த மனித உடலில் வேதனை என்ற விஷத்தின் தன்மை எடுத்து நம் ஆன்மாவை அது மறைத்திடாது அருள் ஒளியைப் பெருக்க வேண்டும்.
 
 உதாரணமாக… தான் சேமிக்கும் நஞ்சினை ஒளியாக மாற்றி வைரங்களாக மாற்றுகின்றது நாகம். விஷத்தின் தன்மையை ஒடுக்கப்படும் பொழுது அது நாகரத்தினமாக மாறுகின்றது.
 
அதைப் போன்று தான்…
1.மனிதனின் உணர்வின் தன்மைகளை அணுக்களாக்கப்படும் பொழுது உணர்வின் ஒளியாக மாறுகின்றது.
2.மற்றொன்றில் இருக்கும் இருளை மாய்த்து அந்த உணர்ச்சிகளை மாற்றி ஒளி என்ற நிலைகளாகப் பிரகாசிக்கச் செய்யும்.
 
ஒரு பொருளுடன் ஒரு பொருள் மோதப்படும் பொழுது “ஒளி” என்ற நிலைகள் வருகின்றது. ஒரு உணர்வுடன் ஒரு உணர்வு மோதும் பொழுது “வெப்பமாகி” உணர்வுகள் மாற்றம் அடைகின்றது.
 
எதன் வழி கொண்டு வருகின்றதோ அதற்குத்தக்க இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றது. இப்படித்தான் உயிர் நம்மை இயக்குகின்றது. நாம் நுகரும் உணர்வை வைத்துத்தான் நம் உயிர் ஆட்சி புரிகின்றது.
 
ஆகவே இருளை அகற்றி நஞ்சினை வென்று ஒளியாக மாற்றிச் சென்ற அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை ஏங்கிப் பெறுவோம்.
1.நாம் தெளிந்த மனம் பெறுவோம்… தெளிவான வாழ்க்கை வாழ்வோம்.
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளிச் சுடராக மாற்றிக் கொண்டே இருப்போம்.