ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2020

இங்கே போதனை கொடுப்பது சாதாரணமாகவும்… விளையாட்டுக்காகவும் அல்ல…!! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


நம் பூமியின் முக்கியத் தாதுப் பொருள் இரும்பு. இதன் நிலையில் ஒத்த ஜீவ ஜெந்துக்களும் தாவர இன வளர்ப்புகளும் இதன் தொடர் வளர்ச்சியுடையதாகத்தான் வளர்ந்து வந்துள்ளன இன்றளவும்.

எப்படி உலோகங்களிலேயே ஒவ்வொரு உலோகத்திற்கும் அதன் கன அளவுக்குக் கொள்ளளவு நிறையில் வித்தியாசம் உள்ளதோ… அதாவாது ஒரு எடை போடும் தராசில்
1.இரும்பின் கனம் ஒரு கிலோவுக்குள்ள எடையின் கொள்ளளவைக் காட்டிலும்
2.பிற உலோகங்கள் அதிகமாக நிறை தெரிகின்றது அல்லவா…! (உருவ நிலை)

இதன் நிலைக்கொப்ப “நம் பூமியின் நிறை” கனம் பொருந்திய ஜீவ ஈர்ப்பில் நீர் சக்தி வளர்ந்துள்ள இரும்புத் தாதுப் பொருளின் கூடுதல் நிறை கொண்டது அத்தகைய வளர்ப்பில் தான் பூமியில் உள்ள வளர்ப்பு யாவும் உள்ளன.

இன் வரும் காலத்தில் இம்மண்டலச் சேர்க்கைக் காலத்தில் பூமியைப் பாதிக்கவல்ல சில நிலைகள் ஏற்படப் போகிறது.

அத்தொடரிலிருந்து நாம் தப்ப இந்தப் பூமி ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபடக்கூடிய தன்மைக்கு நம் சுவாசத்தில் மேல் நோக்கிய தொடர்புடையதாக சூரிய அலை வட்டத்தில் நுண்ணிய காந்த அலையை நாம் எடுக்கப் பக்குவப்பட வேண்டும்.

அந்த விண்ணின் ஆற்றலை நம் உடல் உறுப்பான எலும்புகளில் சேர்த்து  அவ்வலைத் தொடரான குண ஈர்ப்பு வார்ப்பு அணுக்களை இவ்வெலும்புக்குள் ஒளியான அணுக்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒளியான அணுக்களை வளர்க்க வளர்க்க…
1.இச்சரீரக் கூட்டையே பூமியின் பாதிப்பு நிலை ஏற்பட்டாலும்
2.விண்ணின் ஆற்றலை நாம் எடுக்கும் சுவாச அலையின் சுவாச அலை வளர்ப்பினால்
3.இவ்வுடல் வாழ்க்கை இந்தப் பூமியில் வாழ்ந்தாலும்
4.நம் எண்ணத்தில் எடுத்த சுவாசத்தால் தன் ஆத்ம வலு கூடி
5.சூரியக் குடும்பத்திற்குச் சொந்தப்பட்டதாகச் செயல்படத்தக்க பக்குவ ஆத்மாவாகின்றது.

இங்கே பாடத்தில் உணர்த்துவதும்… போதனை தருவதும்… சாதாரண நிலையிலும் விளையாட்டுப் போன்ற உணர்விலும் இருக்கலாம்.

ஆனால் நடக்கப் போகும் காலத்தில்…
1.இனி நிகழ்பவை எல்லாமே ஞானத்தைச் செயலாக்கும் மனிதனின் சித்தமெல்லாம் கலங்கி
2.சிதறும் அழிவு நிலையில் தான் ஓடிக் கொண்டுள்ளது.

மனிதன் தன்னைத் தான் உணர்ந்து.. ஆத்ம வலுவை உயர் ஞான ரிஷிகளின் அலையுடன் தொடர்பு படுத்தினால் அன்றி… இந்தப் பூமிப் பிடிப்பு சாதாரண வாழ்க்கை நிலையில்.. “தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் நிலைதான் ஏற்படும்…!”

1.ஆத்மாவின் உண்மை அறிந்து
2.ஆத்மாவைக் காணவும்
3.ஆத்மாவுடன் நாம் பேசவும்
4.ஆத்மாவைக் கொண்டே அகிலத்தையும் அறியும் ஆற்றலையும் நாம் பெறும் பக்குவத்திற்கு
5.இச்சரீர எண்ணத்தின் சுவாசத்தை இதுநாள் வரை சொன்ன முறைக்கொப்ப தியானத்தால் வலுக்கூட்டுங்கள்.

சநதிர மண்டலத்தின் ஒளி பிரகாசமாக ஒளிராமல் இருப்பதற்கு அதன் ஈர்ப்பில் பூமியை ஒத்த கனம் பொருந்திய இரும்புத் தாதுப் பொருள் குறைவாக உள்ளது தான் காரணம்.

சந்திர மண்டலத்தைச் சுற்றியுள்ள காற்று மண்டலமே மண்ணும் நீரும் கலந்த கனத்த காற்றாக அங்கு வீசிக் கொண்டிருப்பதனால் அதன் ஒளி வீச்சு குறைவாக உள்ளது.

அதைப் போன்று ஒவ்வொரு மண்டலத்திற்குமே தனித் தனி மாறு கொண்ட ஈர்ப்பு நிலை உள்ளது. சூரியக் குடும்ப மண்டலங்களிலேயே ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட வளர்ப்பிலேயே “பல மாற்றங்கள் உண்டு…”

அதைப் போன்று மனிதனின் எண்ண குணத்திலும் மற்றெல்லா வளர்ப்புத் தன்மையிலும் மாற்றங்கள் உண்டு…!

ஒலி கொண்டு ஒளியான உயிரணு அமிலக்கூட்டு நிலைக்கொப்ப வளரப்பெற்ற வளர்ப்பில்…
1.ஞான வளர்ச்சி கொண்ட மனிதக் கரு வார்ப்பு மனிதன்
2.ஒருவரைப் போன்று ஒருவருக்கு ஞான வழிச் சித்து அமையும் என்று எண்ணாமல்
3.மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பு வலுவினால்
4.தன் ஆத்ம வலுவை தன் அமிலக் கூட்டின் நிலைக்கொப்ப உயர்வாக்கிக் காணுங்கள்.

உங்களால் வரப் போகும் மாற்றத்திலிருந்து விடுபட முடியும்…!