ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 17, 2020

வாழ்க்கையே தியானமாக்கினால் மகரிஷிகள் அடைந்த எல்லையை எளிதில் அடைய முடியும்


நம் சகஜ வாழ்க்கையில் எப்பொழுது தீமையும் கொடுமையும் நாம் நுகர நேர்கின்றதோ… அறிய நேருகின்றதோ… “அறிந்துணர்ந்தாலும்…” நமக்குள் அது வளராது தடுத்துப் பழக வேண்டும்.

தடுக்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நம் உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும். அதை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வளர்த்துக் கொண்டால் பகைமை என்ற உணர்வுகள் வளராது நல்லதாக்க முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று அடிக்கடி நாம் கூர்மையாக எண்ணி ஏங்கிப் பெறும் பொழுது அது கூர்மை அவதாரமாகி… ஒளியான உணர்வின் அணுக்களாக மாற்றி ஒளியின் சரீரமாக முடியும்.

1.எதன் வலிமையைப் பெற்றோமோ…
2.இந்த உடலை விட்டு உயிர் சென்ற பின்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நம்மை அழைத்துச் செல்லும்.

அங்கே அதனின் உணர்வின் தன்மை கொண்டு இருளை வென்று உணர்வின் ஒளியாக மாற்றி என்றும் ஒளியின் சரீரமாகப் பெறுகின்றது.

நாம் எண்ணத்தால் உருவாக்கிய உணர்வுகள்… எண்ணம் சீதாராமா. எந்தச் சுவை கொண்டு நாம் நுகர்கின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்ச்சியாக நமக்குள் தூண்டுகின்றது.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகள் நமக்குள் சேரும் பொழுது சீதா…! உணர்ச்சிகள் சீதாராமனாகத் தோன்றுகின்றது.
1.அந்த அருள் ஒளியின் உணர்வுகள் நம்மை இயக்கி
2.அந்த உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகும் பொழுது இராமலிங்கம்.

சீவலிங்கமாகக் கோள்கள் உருவாகின்றது. ஆனால் அதே சமயத்தில் ஜீவ அணுக்களாக ஜீவ ஆன்மாவாக நாம் விளைகின்றோம். ஜீவ ஆன்மாக்களாக எதை விளைவிக்கின்றோமோ சிவமாக (உடலாக) மாறுகின்றோம்.

உயிரின் தன்மை நமக்குள் இயக்கவில்லை என்றால் இந்த உடல் சவமாகின்றது. எந்த உணர்வை எடுத்தோமோ அதற்குத் தகுந்த அடுத்த ரூபத்தை உயிர் மாற்றுகின்றது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

மனிதனாக ஆன பின் கார்த்திகேயா… இதை அறிந்திடும் பக்குவம் பெற்றவர்கள் நாம்… இந்த உடலினின்றே இனிப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். பிறவியில்லா நிலை அடைந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் அணுவாக மாற்றுதல் வேண்டும்.

ஆகவே தான்…
1.அந்த ஞானிகளின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாக்குகின்றோம்.
2.அந்த உணர்வின் சத்தாக உங்களை நுகரச் செய்கின்றோம்.
3.அந்த அணுவின் கருவாக உங்களுக்குள் உருவாகச் செய்து
4.உங்கள் இரத்தநாளங்களில் பெருக்கும்படி செய்கின்றோம்.

இதையே நீங்கள் அடைகாத்தது போன்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று காலை துருவ தியானத்தில் ஏங்கினால் அந்த உணர்வின் அணுக்கருக்களுக்கு ஜீவன் ஊட்டுகின்றீர்கள். ஒளியான அணுக்களின் பெருக்கமாகின்றது.

நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர வேண்டும் என்று எண்ணினோமோ அந்த அணுக்கள் தனக்கு வேண்டிய உணவைப் பற்றி ஏங்கும் பொழுது
1.அதே அருள் உணர்வுகளை நுகரச் செய்து
2.ஞானத்தின் உணர்ச்சியாக நம்மை இயக்குவதும்
3.ஞானிகள் சென்ற வழியில் செயல்படும் தன்மையும் வருகின்றது.

அதே சமயத்தில் நம் உடலில் உள்ள எல்லாம் அணுக்களும் அதைப் பருகி அந்த ஒளியின் சுடராகத் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிட்டால் இதன் உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலிலே ஏற்கனவே இருந்த இருள் சூழ்ந்த நஞ்சு கொண்ட அணுக்கள் மடிந்துவிடுகின்றது.
1.அது மடியும் தன்மை வரும் பொழுது ஒளியின் அணுவாக மாறுகின்றது
2.மாறிய உணர்வு கொண்டு வெளியே சென்றால்
3.அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் ஒளியின் சரீரமாக மாறுகின்றோம்.

அதற்குத்தான் இந்த உபதேசமே…!