ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 15, 2020

ஒரு தெய்வத்தை வணங்குவோர்… அடுத்த தெய்வத்தை வணங்க மாட்டேன் என்று சொல்வதில் என்ன உண்மை உள்ளது…?


அரசர்கள் காட்டிய நெறி கொண்டு மதங்களாகவும் இனங்களாகவும் பிரிக்கப்பட்டு ஒரே மதத்திற்குள் பல இனங்களாகப் பிரிக்கப்பட்டு போர் முறை கொண்டு தான் இன்று வாழ்கின்றோம்.

ஒருவரை ஒருவர் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு தான் வருகின்றது.

ஒரு தெய்வத்தை வணங்குவோர்…
1.நான் மற்ற தெய்வத்தை வணங்க மாட்டேன் என்று
2.காலையில் பள்ளி எழும் பொழுதிலேயே
3.உன்னை அல்லாது நான் யாரையும் வணங்க மாட்டேன்…! என்று அங்கேயே விஷத்தை ஊட்டுகிறார்கள்.

முருகன் கோவிலுக்குச் சென்றால் உன்னை அல்லாது நான் யாரையும் வாயைத் திறந்து பாட மாட்டேன் என்று முருகனை வணங்குவோர் சொல்வார்கள்.

அதே மாதிரி சிவனைப் பாடுவோரும் அதன் நிலை. காளியைப் பாடுவோரும் இதே மாதிரி. பெருமாளைப் பாடுவோரும் இதே மாதிரி. உன்னைப் பற்றிப் பேசிய வாயில் நான் வேறு எந்தத் தெய்வத்தையும் பேச மாட்டேன்.

இப்படி இங்கேயே ஒவ்வொரு குணத்தின் சிறப்பை ஓங்கி வளர்த்து
1.அடுத்த குணத்தைப் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு
2.வெறுக்கும் உணர்வுகளை வளர்க்கும் பண்புகளைத்தான் ஆலயங்களிலும் தோற்றுவிக்கின்றார்கள்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு நாம் உண்மையின் உணர்வுகளை எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்காக வேண்டித்தான் நமது குருநாதர் காட்டிய அருள் நெறி கொண்டு அருள் ஞானத்தின் உணர்வுகளைத் தொடர்ந்து பதிவாக்குகின்றோம். பதிவான பின் அது கருவின் தன்மை அடையும் தன்மையை உங்களுக்குள் உருவாக்குகின்றோம்.

உருவாக்கிய உணர்வு கொண்டு நீங்கள் அதை மீண்டும் நினைவாக்கினால் அதுவே குருவாக நின்று அருள் ஒளிச் சுடராக உருவாக்கும் அருள் ஞானமமாக உங்கள் எண்ணங்களில் தோற்றுவிக்கும்.

அருள் உணர்வின் தன்மை சுவாசிக்கும் பொழுது உங்கள் உடலில் ஞானத்தை வளர்க்கும் அருள் ஞானக் கருக்களாகி அணுக்களின் தன்மையாக உருவாகு.

அந்த உணர்ச்சியின் தன்மை வரும் பொழுது இந்த மனித வாழ்க்கையில் மகிழச் செய்யும் தன்மை வரும். அந்த மகிழும் தன்மையை வளர்க்க வேண்டும் என்றால் இந்த உண்மைகளை.. ஆலயங்களின் பண்புகளை பிறருக்கு எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆலயத்தின் சிறப்புகளையும்…
1.அங்கே வைத்திருக்கக்க்கூடிய தெய்வங்கள் யார்…?
2.அந்தத் தெய்வம் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலைகளையும்
3.ஆலயம் என்பது நம் உடல் என்றும்
4.அதிலே உள்ள நம் நல்ல குணங்கள் காக்கப்பட வேண்டும் என்றும்
5.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உறையப்படும் பொழுது சிவம் என்றும்
6.நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் அனைத்தும் வினை என்றும்
7.நாம் தெளிவாக எடுத்துச் சொல்லி மக்களை அறியாமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும்

இதன் வழியில் மகரிஷிளின் அருள் ஒளியின் சுடரை உங்களிலே வளர்த்துக் கொண்டால் இந்த உணர்வுகள் விளைந்து சொல்லாக உங்களிடமிருந்து வரும் பொழுது கேட்போர் உணர்வுகளில் ஊழ்வினை என்ற வித்தாக மாறும்.

அதை அவர்களும் நினைவுபடுத்தினால் அவர்கள் குடும்பத்தில் வரும் சிக்கல்களையும் அவர்கள் உடலில் வரும் நோய்களையும் மாற்றும் வல்லமை நீங்கள் பெறுகின்றீர்கள்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் அகஸ்தியன் அவன் வாழ்வில் கண்டுணர்ந்த அருள் வழியில் தியானிக்க வேண்டும்.

அகஸ்தியனாகி துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான பின் அதன் வழியில் சென்றவர்கள் அனைவருமே ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக பிறவியில்லா நிலைகள் அடைந்துள்ளனர்.

1.அவர்கள் வழியில் நாம் சென்றோம் என்றால்
2.அனைவரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வை நாம் ஊட்டினோம் என்றால்
3.அதன் வழியில் நம்மையும் இந்த மனித நிலையிலிருந்து விடுபட்டு
4.அருள் ஞானியின் அருள் வட்டத்தில் இணைத்துவிடும்.

நம் உயிர் ஈசனாக இருந்து இயக்கிக் கொண்டேயுள்ளது. நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தும் நமக்குள் கடவுளாக நின்று இயங்கி… உள் உணர்வையும் ஊட்டி… உயிருடன் ஒன்றச் செய்து… அதுவே அருள் ஒளியின் சரீரமாக உருவாக்கும்.

1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை எதை எடுத்தோமோ அதுவே மின் அணுவாக மாற்றும்.
2.என்றும் பிறவியில்லா நிலை அடையச் செய்யும் தன்மை பெறுகின்றது.
3.இது எளிதான நிலைகள்…!

அகஸ்தியன் கண்ட பேருண்மைப்படி அதனை ஒவ்வொரு நாளும் நாம் நுகர்தல் வேண்டும். அப்படி நுகரும் பருவம் பெறுவதற்குத் அதிகாலையில் துருவ தியானத்தில் அரும் பெரும் சக்தியைக் கூட்டச் சொல்கிறோம்.