ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 10, 2020

ஞானிகளை அணுகுவோர் உடலுக்கும் செல்வத்திற்கும் தான் கேட்கின்றார்களே தவிர “ஞானத்தைக் கேட்க முற்படவே இல்லை…!”


இராமனைக் கண்ணிலே கண்டார்… ஆஞ்சநேயரைக் கண்டார்… அதன் உணர்வின் நிலைகளை ஆட்டிப் படைத்தார்… கண்ணனைப் போன்று அவன் செயலாக்கங்களைச் செய்தார்… “அத்தகைய அருள் சக்தி பெற்றவர் தான் இராமகிருஷ்ணர்…!” என்று அவரின் புகழ் பாடி அதன் வழி கொண்டு பின் வந்தோர் இதை மக்களின் மத்தியில் பறைசாற்றி இந்த உணர்வின் தன்மையை இவருக்குள் சாகாக்கலையாக வளர்த்துக் கொண்டார்கள்.

1.அதன் வழியில் தான் பெரும் பகுதியானோர் வருகின்றனரே தவிர
2.அந்த ஞானி காட்டிய உண்மைகளைக் கூட இன்று வளர்க்க முடியவில்லை.

இந்த நூற்றாண்டில் இராமகிருஷ்ணர் கீதையைப் பற்றிச் சொல்லி வெளிப்படுத்தியதை எல்லாம் அதன் சார்புடையோர் கீதை நூல்களைப் படித்து “அவரவர்கள் விளக்க உரைகளைக் காட்டி…” அதன் வழி தான் மக்களுக்கு உபதேசித்துள்ளார்கள்.

பேரண்டத்தின் உண்மையின் உணர்வுகளை இராமகிருஷ்ணர் அறிந்தாலும் அந்த உணர்வின் துணை கொண்டு விவேகானந்தரும் அறிந்தாலும் அவர்கள் வழிப்படுத்திய நெறி… செயல்படச் சொன்ன முறை..
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்துப் பழகு
2.நீ எண்ணும் எண்ணத்தை உனககுள் அது உள் நின்று இயக்குவதை
3.அந்த உன் எண்ணமே கடவுளாகின்றது என்று தெளிவாக்கியுள்ளார்கள்.

இதை எல்லாம் நமக்கு யாரும் எடுத்துச் சொல்லவும் இல்லை.. அதன் வழி நாம் செல்லவும் இல்லை.

 காலத்தால் நாம் ஆசையில் சிக்கப்பட்டு இன்று
1.இதன் வழிகளிலே சென்றால் நம் வியாபாரத்தைப் பெருக்கலாம் ஆண்டவன் அருளைப் பெறலாம் என்று சிலர் செல்கின்றனர்.
2.இன்னொரு சாரார் நாம் இந்த வழிகளில் சென்றால் சாது என்ற நிலைகளை அடையலாம்
3.ஆசை என்ற நிலைகளில் விடுபடலாம் என்றும் தனக்குள் விடுபடும் உணர்வுகளை வளர்த்து
4.கடைசியின் விரக்தியின் தன்மையை வளர்த்து அடங்கிடும் நிலை வருகின்றது.

செல்வம் இருந்தாலும் அடங்கி வாழலாம்…. செல்வம் இல்லை என்றால் உணவுக்காகத் தன் உணர்வின் தன்மையை மற்றவருக்குப் பறைசாற்றி அதன் வழியில் பொருளை ஈட்டி இந்த உடலை வளர்க்கலாம்.

இப்படித்தான் வாழ முடிகிறது…!

மடாதிபதிகள் தான் எடுத்துக் கொண்ட கொள்கையிலே
1.அவர்கள் உருவாக்கிய மடாலயங்கள் கொண்டு செல்வங்களை ஈட்டுவதும்
2.அதன் துணை கொண்டு பெரும் செல்வத்தை அடைய
3.அதிலே முன்னணியிலே இருப்பவரைக் குற்றவாளியாக்குவதும்
4.பின் அந்தச் செல்வத்தைக் கைப்பற்றிச் சுகபோகங்களை அனுபவிக்கும் நிலைகள் தான் மடாலயங்களில் வருகின்றது.

இப்படி… அன்றைய ஞானிகள் வெளிப்படுத்திய அருள் ஞானங்களை எல்லாம் பக்தி கொண்ட சிலர் அதற்குள் புகுந்து… பக்தியும் பற்றும் கொண்டு நடந்தால்… “தெய்வம் உனக்குச் செய்யும்..” என்ற இந்த நம்பிக்கையைத் தான் பெரும்பகுதி மடங்களிலிருந்து வெளிவரும் நிலைகள் ஊட்டுகின்றார்கள்.

இது தான் இன்றைய நிலை…!