ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 25, 2020

தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கும்… வாழ்க்கையில் வேதனை வளராது தடுப்பதற்கும்… ஒரு பயிற்சி


ஒரு தொழிலை நாம் நடத்துகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதிலே வியாபாரத்தைக் கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்து வரும் நிலையில் வேதனை என்று வந்துவிட்டால்
1.பின் தொழிற்சாலைக்குள் நுழையும் பொழுதே நம்முடைய பார்வை
2.அதே வேதனை கொண்ட உணர்வுடன் தொழில் செய்வோரைப் பார்க்க நேரும்.

இந்த உணர்வுகள் பதிவாகிவிட்டால் நமக்கென்று உற்பத்தியாகும் அந்தப் பொருள்களில் நம்முடைய சோர்வைப் போன்றே உணர்வுகள் இயக்கப்பட்டு தரமற்ற பொருளை உருவாக்கும் நிலை வரும்.

நம்முடைய பார்வையே… இதைப் போன்ற நஷ்டத்தை.. ஒரு இழப்பை ஏற்படுத்தும் தன்மை வருகின்றது. இது இயற்கையின் நியதிகளில் இவ்வாறு வழிப்படுகின்றது.

இது எப்படி நிகழ்கின்றது…?

உதாரணமாக ஒரு பலகாரக் கடையில் கொடுக்கல் வாங்கலில் ஒருவருடன் கொஞ்சம் முறைப்பாகிவிட்டால் அதே உணர்வுடன் பதார்த்தம் செய்யும் வேலைக்காரரிடம் ஒரு வேலையைச் சொனனால் போதும்.

இந்த வெறுப்படைந்த உணர்வுகள் அங்கே அவருக்குள் சேர்ந்து
1.பலகாரம் செய்யும் வேலையை வழக்கமாகச் செய்வதைக் காட்டிலும்
2.ஒரு பிடி உப்பை அதிகமாகப் போட்டுவிடுவார்
3.அல்லது காரத்தை அதிகமாகப் போட்டுவிடுவார்
4.அதனால் அந்தப் பலகாரம் சுவை கெட்டுவிடும்.

முதலாளியினுடைய உணர்வுகள்… எந்த அளவுக்கு அந்த வெறுப்புடன் இருந்தாரோ… “சரி பணம் எப்படியோ போய்விட்டது…! இனி நாம் கடை  வேலையைப் பார்ப்போம்…” என்ற உணர்வுடன் உள்ளுக்குள் செல்வார்.

அங்கே பலகாரத்தைத் தயாரிக்கும் இடத்தில் வேலை செய்வோரிடம் பேசும் பொழுது அன்றைய தினம் பொருள்களில் சுவை கெட்டுப் போய்விடும்… இதைப் பார்க்கலாம்.

ஒரு நான்கு நாளைக்கு இப்படிப்பட்ட பார்வை பட்டால் உற்பத்தியாகும் பொருள்களில் நிச்சயம் சுவை கெட்டுவிடும்.

ஏனென்றால்… நம்மை (முதலாளியை) எதிர்பார்த்துச் செயல்படக்கூடியவர்கள் அவரின் உணர்வுகளை நுகர்ந்தறிந்து செயல்படக் கூடியவர்களுக்குள் இந்த வெறுக்கும் உணர்ச்சிகள் பதிவாகி விடுகின்றது.

அப்பொழுது நம்முடைய வெறுப்பான உணர்வே அவர்களை இயக்கத் தொடங்கிவிடுகின்றது. அதனால் நமக்கு நஷ்டமாகின்றது.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் தப்புவதற்கு இந்தக் காலை துருவ தியானத்தில்
1.அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி தொழில் வளாகம் முழுவதும் படர வேண்டும்
2.இங்கே தொழில் செய்வோர் அனைவருக்கும் அந்த சக்தி கிடைக்க வேண்டும்
3.இங்கே தயாரிக்கும் உணவை உட்கொள்வோர் அனைவரும்
4.அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும் என்ற உணர்வை நாம் செயல்ப்டுத்த வேண்டும்.

அங்கே தொழிலாளிகள் தொழில் செய்கிறார்கள் என்றால் அவருக்கு இப்படி ஒரு பழக்கத்தைக் கொடுக்க வேண்டும்.

அவர்கள் உயிரை எண்ணச் செய்து…
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
2.இங்கே செய்யப்படும் உணவு வகைகள் அது சீராக அமைய வேண்டும்…
3.இந்த உணவை உட்கொள்வோர் அனைவரும் உடல் நலம் பெறவேண்டும் என்று
4.நாம் எண்ணச் செய்தல் வேண்டும்.

இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டால் அந்தச் சுவையும் கிடைக்கின்றது. அவர்களும் எல்லோரும் நலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் அதை எண்ணும் பொழுது உங்களிடம் வேலை செய்பவர்களுக்கும் உயர்ந்த சக்தி கிடைக்கின்றது.

1.இப்படி ஒருவருக்கொருவர் நாம் எண்ணும் உணர்வுகளை
2.இப்படி அருள் வழியில் செயல்படுத்தும் பொழுது அனைவருக்கும் உயர்ந்த நிலை உருவாகின்றது.
3.அதற்காகத்தான் காலை துருவ தியான நேரத்தில் தன் தொழிலை எண்ணி அந்த உணர்வுகளைப் பாய்ச்சச் சொல்வது.

அதே சமயத்தில் தன் குடும்பத்தில் குழந்தைகளுக்கும் சொல்லி அவர்கள் கல்வியையும் நல்லதாக்க வேண்டும்.

முதலில் தாய் தந்தையரை எண்ணச் சொல்லி என் அம்மா அப்பாவின் அருள் வேண்டும் என்று ஆசி வாங்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பின்… தனக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியரை எண்ணி…
1.அவர் சொல்லிக் கொடுப்பது அனைத்தும் என் மனதில் நிலைக்க வேண்டும்
2.அது எல்லாம் மீண்டும் என் நினைவுக்கு வர வேண்டும்
3.எனக்குள் அந்த ஞானம் வளர வேண்டும் என்று
4.அதி காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி குழந்தைகளைத் தியானிக்கப் பழகிக் கொடுக்க வேண்டும்.

ஆசிரியல் தனக்குள் அந்த உயர்ந்த நிலைகளை எப்படிக் கற்றுக் கொண்டாரோ அவருக்குள் விளைந்து… சிந்தித்து வெளிப்பட்ட அந்த நல்ல உணர்வுகள் உண்டு. அதைக் குழந்தைகள் எண்ணி எடுத்தால் இவர்களுக்கும் சிந்தித்துச் செயல்படும் சக்தி கிடைக்கின்றது.

இது தான் விநாயகர் தத்துவத்தில் உள்ள முழுமை.

ஆகவே… அதிகாலை அந்த நான்கு மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை எடுத்து… நமக்கு எதை எல்லாம் நன்மை பெறவேண்டுமோ அதை எல்லாம் நல்லாதக்க இப்படி எண்ண வேண்டும்.