ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 28, 2019

அன்று வியாழன்... இன்று பூமி... இனி அடுத்து சந்திரனா...? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


வரப்போகும் இந்த உலக மாற்றத்தில் இந்தப் பூமியின் குணத்தில் மாற்றம் ஏற்படப் போகும் நிகழ்ச்சி மனித ஆத்மாவினால் நிகழ்கிறது...! என்ற குற்ற உணர்வை ஏன் காணல் வேண்டும்..?
1.இயற்கையின் உந்தலினால் மனித எண்ணமே செயற்கை காண வழிப்பட்டதற்கு
2.”மனிதனைக் குற்றம் காணலாமா...?” என்ற வினா எழும்பலாம்.

ஆனால் மனிதனால் ஏற்படுத்திக் கொண்ட இந்தத் தீய அமில குணத்தினால் தான் நம் பூமியின் இயற்கை பாழ்பட்டது.

மனிதனால் அரசர்கள் என்றும் தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும்
1.மனித ஆத்மாவுக்குகந்த குணத்தைப் பிரித்துக் கண்டு
2.ஒருவனை உயர்த்தி... ஒருவனை அடிமை கொண்டு... வாழ்ந்த எண்ணத்தில்
3.போட்டி பொறாமைகள் ஏற்பட்டு... பேராசையில் அதிகப் பொருள் சேர்த்து
4.ஒருவனை அழிக்க ஒருவன் வாழ்ந்து வந்ததின் நிலையினால் குண அமிலங்களில் மாறுபட்டு
5.அணுகுண்டுகளையும் அணுக்கதிர்களையும் காற்று மண்டலத்தில் கலக்கவிட்டு
6.இயற்கையைப் பாழ்படுத்திய மனிதனால் தான் நம் பூமியின் நிலை நிலை தடுமாறப் போகிறது.

ஆக... இந்தக் கலியில் பூமியை நிலை தடுமாற வைப்பவனும் இம்மனிதன் தான். இந்தப் பூமி நிலைக்க கல்கியுகம் காணச் செயல்படுத்தப் போகிறவனும் இந்த மனிதன் தான்..!

மனிதன் மனித ஞானம் பெற்றால் மனிதனால் மனித ஆத்மாக்களைப் பலவாக நிறுத்த முடியும். நம் பூமியில் மனிதக் கரு வளர... நம் பூமியில் மனித ஆத்மாக்களை வளர்க்கும் தன்மை கொள்ள...
1.வியாழனிலிருந்து மீண்ட ஆன்மாக்கள் இருந்ததனால் தான்
2.நம் பூமி வளர்ந்த பிறகு நம் பூமியில் மனித ஆன்மாக்கள் வாழக்கூடிய கருவே வளர்ந்தது.

பல சப்தரிஷிகளும் அவர்களின் வழித் தொடர் பெற்ற பல நிலை கொண்டவர்கள் இருந்தாலும்... இந்தப் பூமியில் வாழ்ந்த மனித ஆத்மாக்களின் சக்தி நிலை உயர்ந்து தன் ஞானம் பெறும் ஆத்மாக்கள் வளர்ந்து வந்தாலும்... இந்தப் பூமியின் மாற்றக் காலத்தில் என்ன ஆகிறது...?

இந்த மனித வாழ்க்கையில் கொண்டுள்ள ஆசாபாசங்களிலும் நித்தியக் கடன்களிலும் மூழ்கியே... இந்தக் கலியின் மாற்றத்தில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள்... கலி மாறும் தருணத்திலும் அதே சுழற்சி ஓட்டத்தில் இருந்து... “தான் இதிலிருந்து மீள முடியாமல் போகிறது...!”

அத்தகைய நிலையில்... மீண்டும் அறிவு ஞானம் கொள்ளும் மனிதக் கரு வளர்ந்து... அக்கருவின் செயலிலிருந்துதான் மனித உருவங்களே இந்தச் சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களின் வளர்ச்சியில் மனித ஆத்மாக்கள் வாழும் நிலை வரும்...!
1.அதாவது வியாழனுக்குப் பின் நம் பூமியில் மனிதர்கள் வாழுவது போல்
2.இந்தப் பூமிக்கு அடுத்து மனிதர்கள் சந்திரனில் வாழும் நிலை ஏற்படலாம்...!

நம் சூரியனின் சுழற்சியில் பல மண்டலங்கள் ஓடினாலும் நம் பூமியின் நிலைக்கொப்ப மனித ஆத்மாக்கள் வாழக்கூடிய இச்சக்தி மண்டலத்தின் இந்தக் கலி மாறி கல்கியுகம் பெற்று நம் பூமி சுழலும் தருணத்தில்
1.இன்றைய நிலையில் வாழும் ஆத்மாக்களின் பல கோடி எண்ணங்களை மாற்றிச் செயல்புரிய
2.பல சக்தி நிலைகள் செயல் கொண்டு செயலாற்றித்தான் கல்கியுகம் வாழ முடியும்.

அதற்குத்தான் எம்மைப் போன்ற எண்ணிலடங்கா மகரிஷிகளின் செயல்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ளது.