ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2019

மனிதன் இராமலிங்கமாக மாறும் வழி


1.கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து உன் குறைகளை எல்லாம் சொன்னால் அவன் தீர்த்துத் தருவான்...
2.அதற்காக வேண்டி நீ காணிக்கை போடு... அதைப் போடு இதைப் போடு..
3.நேர்த்திக் கடனைச் செய் அதைச் செய்...! என்று சொல்லி விட்டார்கள்
4.பழனிக்குப் போனாலும் இது தான்... திருப்பதிக்குப் போனாலும் அது தான்.

ஆனால் அந்தக் கோவிலின் பண்புகளை நமக்கு யாரும் எடுத்துச் சொல்லவில்லை.

“ஏழு கொண்டலவாடா...” என்று தெலுங்கில் சொல்வார்கள். ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக “ஒளியாக மாற்ற வேண்டும்” என்று பொருள்.
1.ஏனென்றால் இந்த ஆறாவது அறிவை இயக்குவது உயிர்
2.ஆக இந்த உடலை ஆள்வது “பெருமாள்...”

திருவேங்கடாசலபதி...! இங்கே இந்த உடலில் இருப்பது எல்லாவற்றையும் ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றான் என்ற தத்துவத்தைக் கொடுக்கின்றார்கள்.

அதை நாம் யாராவது புரிந்து கொண்டோமோ...? என்றால் இல்லை. தத்துவத்தை நமக்குத் தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்... யாரும் அதை மதிப்பதில்லை.

இங்கிருந்து அங்கே திருப்பதிக்குப் போய்க் காணிக்கையைப் போட்டால் “அவன் நமக்கு எல்லாம் செய்வான்...!” என்ற நம்பிக்கை தான்.
1.சாமிக்கு விலங்கு போட்டால் ஐய்யய்யோ...! என்பார்கள்
2.காசு குறைவாக இருப்பதால் விலங்கு போட்டுவிட்டு அப்புறம் சாமியை ஜெயிலிருந்து மீட்டுகிறார்களாம்...!

இப்படி நம்மை முட்டாளாக்கி வைத்திருக்கின்றார்கள்...!

இங்கே உபதேசத்தை நீங்கள் கேட்கிறீர்கள்...! எப்பொழுது உங்களுக்குள் என்ன நடக்கிறது...?

“அரங்கநாதன்...” நல்ல (ஞானிகளின்) உணர்வுகளை நீங்கள் கேட்கும் பொழுது உங்கள் உடலான அரங்கத்திற்குள் உயிர் என்ன செய்கிறது...? நாதங்களாக வெளிப்படுத்துகிறது. (அரங்கம் + நாதம்)

அந்த நாதங்கள் என்ன செய்கிறது..? சந்தோஷமான உணர்ச்சிகளை ஊட்டுகிறது. அது தான் அரங்கநாதன்,

அரங்கநாதனின் மனைவி யார்...? ஆண்டாள். அந்த உணர்ச்சிகள் தான் நம்மை ஆள்கிறது. ஆண்டாள்...! என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.

கோபமான உணர்வை நுகர்ந்தால் அரங்கநாதன் என்ன செய்கிறது...? அந்தக் கோபமான உணர்ச்சி தான் நம்மை ஆளும் ஆண்டாள்.

ஆனால் எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வைச் சுவாசித்தால் அரங்கநாதன். இந்த அரங்கத்திற்குள் மகிழ்ந்து வாழும் அந்த உணர்வுகள் நம்மை ஆளும்.

1.காரணப் பெயரை வைத்துத் தெய்வங்களை உருவச் சிலைகளாக வைத்து
2.நாம் நம்மை அறிந்து வாழ்வதற்கு ஞானிகள் எவ்வளவு பெரிய சக்தியை ஊட்டியிருக்கின்றார்கள்...?
3.அதை நாம் உணர வேண்டுமல்லவா...!

ஏனென்றால் இந்த உடலில் கொஞ்ச நாள் தான் நாம் வாழ்கிறோம். சிறிது காலமே வாழும் இந்த மனித வாழ்க்கையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வாழ்க்கையில் வரும் பகைமைகளை எல்லாம் அகற்றிடல் வேண்டும்.

எந்தப் பகைமையையும் நாம் இழுக்காதபடி வாழ்ந்து வந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குப் போய்ச் சேர்கின்றோம். இராமலிங்கமாக ஆனது தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.

அங்கே சென்றால் பிறவியில்லா நிலை அடைகின்றோம். அந்தப் பிறவியில்லா நிலை அடையக்கூடிய சக்தியைத் தான் ஞானிகள் நமக்குக் கோவிலில் காட்டியிருக்கின்றார்கள்.