ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 20, 2019

முன்னோர்கள் காட்டிய வழியில் மனிதன் வாழ வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


மனிதர்களால் பல வினாக்கள் எழுப்பப்படலாம். ஆண்டவனை வணங்கி நம்மையே ஆண்டவனாக்கி ஞானம் பெறும் வழியையெல்லாம் இந்த மனித ஆன்மாக்கள் தானே உணர முடிகின்றது.

மிருகங்களுக்கு ஞான உபதேசங்களோ பக்தி வழிபாடோ இல்லை. அவற்றுக்கு இனி வரப் போகும் உலக மாற்றத்திலிருந்து அழியாமல்... இன்றுள்ள நிலையிலிருந்து விடுபட வழி இல்லையா..? என்ற வினா எழும்பலாம்.

மனிதனுக்குத்தான் அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு இவற்றின் நிலை கொண்ட எண்ணத் தொடர் உண்டு. மனிதனால் இன்றைய நிலையில் ஆடை உடுத்தாமல் அம்மணம் கொண்டு வாழ்ந்திட முடியுமா…?

மனிதனுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற இல்லறப் பிணைப்பைப் பிணைத்து.. குடும்பம் என்ற குடில் அமைத்து பல நிலைகளை மனித ஞானத்தால் பக்குவ மேம்பாடுபடுத்தி... தானாகப் பெய்யும் மழைக்கு வடிகால் அமைத்து வழிப்படுத்தியவன் மனிதன்.

மனிதன் கல்லைச் சிலையாக வணங்கினான். ஆண்டவன் என்ற பக்தி செலுத்த அதே போல் பல பக்குவ மேம்பாடின் ஞானம் பெற்றான் மனிதன்.
1.மனித அமில குணத்தின் ஞான வளர்ச்சி
2.உயர்ந்தோங்கும் ஆற்றல் கொண்ட “அபரிதமான சக்தியின் ஜோதி வளர்ச்சி ஆகும்...!”

இந்த வழித் தொடரின் அமில குண ஞான அறிவாற்றல் கொண்ட மனித வளர்ச்சியின் நிலைக்கொப்ப மேம்பாட்டின் சக்தி மிருக வர்க்கங்களுக்கு வழிப்படவில்லை.

பல ஆயிரம் ஆண்டுகள் மேல் நோக்கிய சுவாசத்தை ஈர்த்து அந்த ஈர்ப்பின் சக்தி அமிலமான மாணிக்கத்தை ஈர்க்க வல்ல குணமுடைய நாக சர்ப்பத்திற்கே அதன் வட்டத் தொடர்ச்சி அமில குணமானது மனித ஞானத்திற்கொப்ப மேம்பாடு பெறவில்லை,

இதே போல் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் மற்ற ஜீவ ஜெந்துக்களுக்கும் மனிதனைக் காட்டிலும் பல சக்தி அமில குணங்கள் மேம்பட்டு வளர்ச்சியுற்றிருந்தாலும் மனிதனைப் போன்ற செயலாக்க வல்ல ஞான வளர்ச்சியின் செயல் கொள்ளும் வழி முறைகள் அவற்றிடம் இல்லை.

மனிதனிலிருந்து தான் எல்லா மிருக இனங்களும் செயல் கொண்டதா என்றால் அதுவுமில்லை. மிருகத்திலிருந்து மனித இனம் வரவில்லை.

ஆனால் மனிதனாக வாழும் நிலையில்
1.இவன் எடுக்கும் நிலை கொண்ட சுவாசத்தினால்
2.ஏழு பிறவியில் இவன் சேமித்த அமில குணத்தின் நிலைக்கொப்ப ஞான ரிஷியாகவும்...
3.மிருகத்தின் நிலையிலும் சென்று விடுகின்றான். இது தான் உண்மை நிலை.

மிருகங்களிலே ஊரும் ஜெந்துக்களிலே அதனதன் நிலைக்கொப்ப பல அறிவு குணங்கள் நிறைந்துள்ளன. மூட்டைப் பூச்சிக்கு மனிதனின் சுவாசமும் மனிதன் “தன்னைப் பிடிக்கப் போகின்றான்..” என்று அறியும் ஆற்றலும் உண்டு. அதே போல் பல்லியைக் கண்டாலும் “தன்னைப் பிடித்துவிடும்...” என்பதை உணரும் ஆற்றலும் அதற்கு உண்டு.
1.ஒவ்வொரு ஜீவராசிக்கும் தன்னைக் காத்துக் கொள்ளும் நிலையும்
2.தன் ஆகாரத்தை ஒரே குறியுடன் எடுக்கவல்ல சக்தியும் உண்டு.

ஆனால் மனிதனுக்கு மூட்டைப் பூச்சி அவனைக் கடித்தால் தான் அவனால் உணர முடிகின்றது. மனிதனுக்குத் தன்னைத் தானே தற்காப்புக் கொள்ளும் அமிலத் தன்மை குறைவு.

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு இவற்றின் வழி பெற்றவன் தான் மனிதன். மனிதன் இயற்கைக் குணமே அவன் ஞானத்தை வளர்க்கும் வழி பெற்ற அமில குணமுடையது தான்.

பூனை.. நாய்... இவை எல்லாம் தன் சுவாசத்தைக் கொண்டு நடப்பதற்கு முதலிலேயே வரப் போகும் நிலையை உணரும் மேம்பாட்டுக் குணமுடையது.
1.இப்படி இயற்கையே கலவையாகி
2.அக்கலவையில் வெளியான உலகில் ஏற்படும் பல கோடி நிலைகளில் கலந்துள்ள நாம்
3.நம் ஞானத்தை நம் முன்னோர்களினால் உணர்த்தப்பட்ட உன்னத வழிக்கோலைச் செயல்படுத்திட வேண்டும்.

ஆண்டவனுக்கு (சிலைக்கு) மாலையை முன் போட்டுத்தான் வணங்குகின்றோம். பின் போட்டு அழகு காண்கின்றோமா…?

எங்கும் நிறைந்துள்ள ஆண்டவனுக்கே மாலையை முன் போட்டால் என்ன…? பின் பக்கம் போட்டால் என்ன…? என்று செயல்படுத்தாமல் முன்னின்று ஆண்டவனையும் முன்னோரையும் வணங்குகின்றோம்.

அந்நிலைக்கொப்ப நம் முன்னோர்களின்... முன் வழிப்படுத்திய தத்துவ ஞானத்தின் உண்மையை உணர்ந்து... மெய் ஞானத்தின் சக்தியைத் தன் ஞானத்தால் ஈர்க்க வல்ல ஞானம் பெறுங்கள்.