ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 6, 2019

யாருக்கும் தீங்கு செய்யாது அனைவரையும் “அரவணைத்துச் செல்லும் சக்தியே கல்யாணராமா…!”


ஜனகச் சக்கரவர்த்தி அவர் உழுகும் பொழுது அதிலிருந்து ஒரு பெண் குழந்தை கிடைக்கின்றது. அதைத் தத்துக்கு எடுத்துத் தன் குழந்தையாக அவர் வளர்க்கின்றார்.

ஜனகச் சக்கரவர்த்தி என்றால் சூரியன். மற்ற உணர்வுகள் விஷத் தன்மையைப் பெற்ற பின் அந்தத் தீமைகளை அகற்றி நல் உணர்வைச் சமைக்கும் தன்மை பெற்றது.

நாம் என்ன செய்கின்றோம்…? உழுது பயிரிட்டு நமக்கென்று நல்ல சத்துள்ள பொருள்களை விளைய வைக்கின்றோம்.

அதனால் தான் உழுகும் பொழுது கிடைத்தது குழந்தை என்று சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணம் இராமாயணத்தில் அக்காலத்தில் இதைத் தெரியப்படுத்துகின்றனர்.
1.உழுது பயிரிட்டால் தானே நல்ல பயிரினங்களை விளைய வைக்க முடியும்.
2.உழுகவில்லை என்றால் தன்னிச்சையாக என்னென்னமோ விளைந்து விடுகின்றது அல்லவா…!

மனிதனை வளர்க்க ஜனக சக்கரவர்த்தி உழுது பயிரிடும் நிலையிலிருந்து அந்தச் சத்தை எடுத்து வைத்திருக்கின்றது… சூரியனின் காந்த சக்திகள்.
1.இந்த உயிர் வாழும் மக்களை உயர்த்த எண்ணுகிறது
2.மனிதனைக் காக்க எண்ணுகிறது என்ற இந்த உண்மையைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
3.தீமையற்ற நிலை அது.

காவியப்படி அந்தக் குழந்தை வளர்ந்த பின் அதற்குத் திருமணம் வைப்பதற்காகச் சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார்கள். அங்கே அவரவர் திறமைகளைக் காட்டுகின்றார்கள்.

தன்ன்னுடைய வில்வித்தைகளை எல்லாம் காட்டுகின்றார்கள். வில்லை எடுத்து நாணை ஏற்றி அம்பால் குறி வைத்துத் தாக்குகின்றார்கள். குறி வைத்துத் தாக்கும் பொழுது அவரவர் திறமைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.

1.ஆனால் இராமன் என்ன செய்கின்றான்…?
2.அவனுடைய வல்லமையை எப்படிக் கொண்டு வருகின்றான்..?
3.பிறருக்குத் தீமை செய்யும் அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான்.

வில்லில் நாணை ஏற்றி அம்பைப் பாய்ச்சினால் தானே பிறரைத் தாக்க முடியும். அந்த வில்லையே ஒடித்து விட்டால் எதிலே அம்பை எப்படி ஏற்ற முடியும்..? அதை எப்படிப் பாய்ச்ச முடியும்..? அப்பொழுது அது பிறருக்குத் தீங்கு செய்யாது.

தீமை செய்யும் அந்த வில்லையே இராமன் முறித்துவிடுகின்றான்.
1.அதனுடைய உட்பொருள் என்ன என்றால்
2.பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணங்களைத் தனக்குள் நீக்குகின்றான்.

கோவிலில் என்ன செய்கிறோம்…?

பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணங்கள் தனக்குள் இருப்பதை ஒடித்துவிட்டு அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணச் சொல்கிறார்கள். “எல்லோரும் அப்படி எண்ண வேண்டும்…” என்று உணர்த்துகின்றார்கள்.

1.தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்துவிட்டால் எல்லோரையும் அரவணைக்கும் சக்தியாக வருகின்றது. அது தான் கல்யாணராமா.
2.எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அந்த எண்ணங்கள் நமக்குள் வர வேண்டும்.
3.கோவிலுக்குள் சென்றால் நாம் இப்படித்தான் எண்ணி எடுக்க வேண்டும்.

நம் ஞானிகள் கொடுத்த காவியங்களுக்குள் அத்தனை பேருண்மைகள் உள்ளது.