ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 23, 2019

அன்று வாழ்ந்தவர்களின் உடல் வலுவோ மன வலுவோ இன்று நம்மிடம் இல்லை... அன்று உருவான சத்தான தாவர இனங்களும் இன்று இல்லை...! இது ஏன்..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் இந்தச் சமீப நூற்றாண்டுகளில் மனிதனால் விஞ்ஞானம் கொண்டு செயற்கை யுகத்திற்கு வழி காட்டிய நாளில் உள்ள நமக்குப் பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைக் காட்டிலும் இன்றைய இயற்கைத் தன்மையின் குண அமில வர்க்கத்திலுள்ள சக்தித் தன்மையே குறைந்து விட்டது.

இது எப்படிக் குறைந்தது...?

பால்வெளி மண்டலத்தில் சுழன்று ஓடும் நம் பூமி அதில் உள்ள காற்று மண்டலத் தன்மை சக்தி குறைந்ததென்றால் அது எப்படிச் சாத்தியப்படும்...?

சூரியனிலிருந்தும் நட்சத்திர மண்டலங்களிலிருந்தும் மற்ற கோளங்களிலிருந்தும் அனைத்து மண்டலங்களுக்கும் பொதுவான பால்வெளி மண்டலத்திலிருந்தும் சக்தித் தன்மை ஒவ்வொரு மண்டலங்களுக்கும் கூடிக் கொண்டுள்ளதா...?

பொது மண்டலம் பால்வெளி மண்டலம். நமக்கு ஒளி தரும் மண்டலம் சூரிய மண்டலம். சூரியனிலிருந்து
1.நம் பூமி எப்படி ஒளி பெறுகின்றது...?
2.நம் பூமியிலுள்ள உஷ்ண விகிதம் மற்ற சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரங்களில் உள்ளனவா...?

நம் பூமியின் சுழற்சியினால்
1.நம் பூமி சுவாசித்து வெளிக்கக்கும் அலையின் அமிலம்
2.சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலத்துடன் மோதும் நிலை கொண்டே
3.நம் பூமிக்கு உஷ்ண விகித நிலை செயல்படுகின்றது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் ஐம்பது மைல் விகித தூர அளவில் ஒளி வட்டம் உள்ளதாக இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. ஒளி வட்டம் உள்ளதனால் தான் நம் பூமிக்கு இந்த உஷ்ண அலை ஏற்படுகிறது.

இந்த உஷ்ண அலையான ஒளி வட்டத்திற்கு மேல் சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட வழி எல்லாம் பூமியின் உஷ்ணத் தன்மையைக் காட்டிலும் அங்கே குளிர்ந்த நிலை தான் உள்ளது.

சூரியனுக்கு அருகாமையில் 200, 300 மைல்களுக்கு இப்பாலும் நம் பூமிக்குக் காற்று மண்டலம் ஒளி வட்டம் கொண்ட உஷ்ண அலைகளின் நிலையின் தன்மைக்கு அப்பாலும் பால்வெளி மண்டலத்தின் பொதுவான குளிர்ந்த நிலை தான் சூரியனுக்கும் பூமிக்கும். அதைப் போல் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் இடைப்பட்ட பால்வெளி மண்டலம் உள்ளது.

ஒவ்வொரு மண்டலத்தின் அமில குணம் தொட்டு அந்த மண்டலம் ஈர்த்து வெளிப்படுத்தும் அமிலத்துடன் அமிலம் மோதும் நிலை கொண்டே உஷ்ண அலைகளும் அதன் குளிர் நிலைகளும் செயல் கொள்கிறது.

இப்படி இயற்கையில் வளர்ந்து ஓடும் நம் பூமியின் நிலையுடன் கூடிய காற்று மண்டலத்தில்
1.காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள ஒளி வட்டத்தின் ஈர்ப்பினால்
2.காற்று மண்டலத்தில் சேமித்துள்ள இயற்கைக் குணத்தை நம்மால் மாற்றப்படுவதனால் அதனின் நிலைகள் மாறிவிட்டன.

மாறினாலும் இந்தக் காற்றில் தானே எல்லாம் கலந்திருக்கிறது என்பீர்கள். இயற்கையாக மாறும் நிலையைச் “செயற்கையுடன் பிரித்துவிடுவதனால்..” அதன் சக்தியின் வலு குறைந்துவிடுகின்றது.

மலைகளிலும் மடுக்களிலும் இருந்து உற்பத்தியாகி வரும் நீரின் சுவைக்கும்
1.ஆறுகளில் நாம் சேமித்து வைத்து அதிலுள்ள மின்சாரத்தைப் பிரித்து எடுத்த பிறகு
2.அந்த நீரின் அமில குணத்தில் சில சக்திகள் குறைந்ததனால் சுவை குறைந்து விட்டது.

அதே சமயத்தில் அந்நீரினால் வளரும் பயிர்களுக்கு
1.நாம் எந்நிலையான அமிலத்தை அந்த நீரிலிருந்து பிரித்து எடுத்தோமோ
2.அதன் நிலைக்குகந்த உரங்களை இட்டால் தான் அந்தப் பயிர்கள் வளரும்.

இப்படி இயற்கையையே நாம் பல நிலைகளுக்காக மாற்றி அமைக்கும் பொழுது இந்த மண்டலத்தின் காற்று அலைகளில் உள்ள சக்தி நிலைகள் குறைந்து விட்டன. மனிதனின் எண்ண சுவாசமும் இதன் தொடர் அலையினால் மாற்றம் கொண்டு விட்டது.

இந்த நிலையிலிருந்தெல்லாம் நாம் நம் ஜெப நிலையை ஒருநிலைப்படுத்தி... ஞானத்தின் வழித் தொடர் பெற... நம்மையே அந்த ஞானமாக்கும் சக்தி செயலில் நம்முடைய ஜெப நிலை இருத்தல் வேண்டும்.

மின் அலையின் தொடரில் ஒளியைக் காண்கின்றோம். அதே மின் அலையினால் ஒலியைக் (வானொலி) கேட்கின்றோம். இவையும் இந்நீரிலிருந்தும் காற்றிலிருந்தும் தான் மனித விஞ்ஞானத்தினால் கண்டறியப் பெற்றோம்.

நம் சுவாசத்தில் எடுக்கும் காற்றலையின் உரு நினைவலையான எண்ணத்தை அந்த ஆண்டவன் மேல் பாய்ச்சி நாம் செயல்படுவோமேயானால்
1.நம் எண்ண நினைவலை எச்சித்தர்களின் நினைவில் பாய்ச்சப்படுகின்றதோ
2.அவர்கள் பெற்ற ஒளி அலைகளின் சக்திகள் நம் எண்ணமுடன் கலந்து
3.சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் செயல்பட்டு நம் ஞானம் வளர்ந்து
4.அதன் தொடரினால் பல சக்தி நிலைகளை இந்த உடல் என்னும் கூட்டிலேயே நாம் கூட்டிக் கொள்ள முடியும்.

அதன் வழி கொண்டு நம்மால் பல உண்மைகளை இந்த உலகம் உணரச் செய்து இன்றுள்ள இந்த உலகின் ஆன்மாக்கள் வாழும் பயம் கொண்ட செயற்கையிலிருந்து மீள வைக்க முடியும்.

இன்றைய கால நிலையில் அங்கங்கு இயற்கை மாற்றங்களும்... விபத்துக்களும்.. போர்களும்... இவற்றால் ஏற்படும் உயிர்ப் பலியின் பீதியிலிருந்தும்... மனிதனால் செய்யப்பட்ட அணுகுண்டு அணுக் கதிர்வீச்சின் பயத்திலிருந்தும்...
1.மனித ஆன்மாக்களை மீட்டு அவர்களின் எண்ணத்தை மேலோங்கச் செய்தால்
2.நடக்கவிருக்கும் உலக மாற்றத்திலிருந்து மனித ஆன்மாக்களை மீளச் செய்யலாம்.

ஒன்று பலவாகி.. பல நூறாகி... நூறு பலவாகிச் செயல்படும் சக்தி அலையாக நாம் செயல்பட வேண்டிய ஞான அலையின் சக்தியை ஈர்க்கும் செயலை முறைப்படுத்திச் செயல்படுத்துங்கள்.