ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 13, 2019

புது மனையில் புகும் முன் “கூட்டுத் தியானம் வைக்க வேண்டியதன் அவசியம்…”


தலை வலி.. மேல் வலியுடன் வருவார்கள்.. காசுக்காக வேண்டி கட்டிட வேலைக்கு வருவார்கள். அவர்கள் வீட்டில் அங்கே அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கலில் சண்டை இருக்கும்.

இங்கே கட்டிட வேலைக்கு வந்தவுடன் தன்  வேலைக்காக ஒரு அரைச் செங்கலை எடுத்துக் கட்ட வேண்டும் என்றால் அது தனியாக இருந்தாலும் அதை எடுக்க மாட்டான். ஒரு முழுச் செங்கலை எடுத்து உடைப்பான்.

சில கொத்தனார்களைப் பார்த்தால் அவர்கள் அந்த வெறுப்பான நிலையில் இருந்தார்கள் என்றால் இப்படித்தான் செய்வார்கள். கீழே கிடைக்கும் அரைச் செங்கலை எடுக்கச் சொல்ல மாட்டான். முழுதாக இருப்பதையே எடுத்து உடைப்பான்.

அட.. ஏம்பா…? என்று நாம் கேட்டால் நம்மை முறைத்துப் பார்ப்பான். இயற்கை…! அந்த உணர்வுகள் எதைச் செய்யும் என்றால் இப்படித் தான்.

இப்படிக் கட்டப்பட்ட கட்டிடத்திற்குள் நாம் உட்கார்ந்தால் அதிலே மேக்னட் உண்டு. அந்தக் காந்தப் புலன் தான் ஈர்க்கும். பார்த்தது.. பேசியது… எண்ணியது… சண்டையிட்டது… எல்லாவற்றையும் இழுத்து அதற்குள் பதிவாக்கி இருக்கும். இதிலே எந்த உணர்வு கொண்டு வந்தாலும் தாங்க முடியாது.

ஆனால் அந்தக் காந்தம் இல்லை என்றால்
1.நீங்கள் கட்டிடத்திற்குத் தண்ணீர் விட்டால் உள்ளுக்குள் போகாது.
2.அந்தக் காந்தம் இல்லை என்றால் இந்தக் கலவையின் தன்மை இரண்டையும் சேர்த்து ஒட்டாது.
3.இதிலேயும் காந்தப் புலன் உண்டு… அதிலேயும் காந்தப் புலன் உண்டு.
4.நீருக்குள் காந்த நிலை இல்லை என்றால் ஒன்றுக்குள் இணைந்து வேலை செய்யாது.

நமக்குள் காந்தப் புலன் ஒற்றுமை இல்லை என்றால் உணர்வின் தன்மை ஒன்றி வராது. ஆக ஒன்றுடன் ஒன்று எதிர்நிலை ஆகப்படும் பொழுது தான் அது விரிவடையும் தன்மை வந்து உடலையே குறைக்கிறது… உடலைச் சிறுக்கச் செய்கிறது… கரைக்கிறது…!

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கட்டிடத்தில் வேலை செய்பவர்கள் அவர்கள் சிரமப்பட்டுத் தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் செய்வது தொழில்.
1.இருந்தாலும் அந்தத் தொழில் செய்யும் இடத்தில்
2.பல குறை உணர்வுகள் பதிவாகும் பொழுது அது சாக்கடையாகின்றது.

குடும்பத்திலோ தொழில் செய்யும் இடத்திலேயோ நண்பர்களிடமோ காசு கொடுத்தது சரியானபடி திரும்ப வரவில்லை என்றால் என்ன செய்வோம்..? அந்தக் கோபத்தில் தான் இருப்போம்.

இங்கே கட்டிட வேலைக்குச் சிமெண்ட் வேண்டும். ஆனால் இல்லை என்கிற பொழுது அது வருவதற்குக் கொஞ்சம் காலதாமதமாகி விட்டால் வேலை பார்ப்பவர்களிடத்தில் வந்து சாடுவோம்.

சிமெண்டைச் சிந்தினாலே உடனே நமக்குக் கோபம் வரும். சீக்கிரம் கட்டி முடிக்கலாம் என்று சொன்னால் சிமெண்ட் கிடைக்கவில்லை என்பான். அதே மாதிரி ஜல்லி வேண்டும் என்று சொல்லியிருப்போம். அன்று அந்த ஜல்லி வரவில்லை…! என்றால் மனம் ஒடுங்கிவிடுகிறது.

இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது வெறுத்துச் சொல்வோம். இந்த உணர்வு எல்லாம் கலந்து தான் அவன் கட்டிடம் கட்டுவான்.

இந்த மாதிரிக் கட்டிய சில வீட்டுகளில் பாருங்கள். வீட்டுக்குள் போனால் நிச்சயம் சண்டை இருக்கும்.  இதைப் போன்ற நிலைகளை எல்லாம் யார் தூய்மைப்படுத்துவது…?

சிறு துளிகளாக மழை பெய்தாலும் ஒன்று சேர்ந்து அது பெரும் வெள்ளமாக வரும் பொழுது சாக்கடையை எல்லாம் அடித்துச் சென்று விடுகின்றது.
1.அதாவது அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை
2.நாம் எல்லோரும் சேர்ந்து கூட்டுத் தியானத்தின் மூலம் எடுத்து
3.இந்தப் புது மனைக்குள் பாய்ச்சப்படும் பொழுது அது தூய்மைப்படுத்தப்படுகின்றது.
4.எங்கள் புதுமனை முழுவதும் தரையிலும் சுவரிலும் மகரிஷிகள் அருள் சக்தி படரவேண்டும்.
5.இந்த வீட்டில் படர்ந்துள்ள தீமையான எண்ணங்கள் நீங்க வேண்டும்.
6.இந்த வீட்டிற்கு வருபவர்களுக்கெல்லாம் சந்தோஷம் ஏற்படவேண்டும்,

இந்த வீட்டில் குடியிருப்பவர்களும் இந்த வீட்டிற்கு வருகை புரிபவர்கள் எல்லோரும் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழவேண்டும். என்று இப்படி அவசியம் கூட்டுத் தியானம் செய்யவேண்டும்.

ஆனால் நாம் வழக்கமாக கிரகப்பிரவேசம் அன்று எல்லோரையும் வரச் சொல்கிறோம். யாகத்தை வளர்த்து அதில் பல பொருள்களைப் போட்டு புகையை மூட்டுகிறோம். நெய்யை ஊற்றுகிறோம். பஸ்பத்தைப் போடுகிறோம். சில குச்சிகளைப் போடுகிறோம். இதைத்தான் செய்கிறோம்.

நீங்கள் கூட்டுத் தியானம் செய்து உயர்ந்த குணங்கள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து சுவாசித்து அந்த அலைகளை நீங்கள் எல்லோரும் சேர்ந்து வீடு முழுவதும் பரவச் செய்யுங்கள்.
1.இது உங்களுக்கு உயர்வைக் கொடுக்கும்.
2.இதை நீங்கள் செய்து உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.