ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 22, 2019

ஒவ்வொரு மனிதனும் தெய்வ குண அமிலத்தைப் பெற்று ஆண்டவனாகும் மகத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


ஒரு நாள் தோன்றி மறு நாள் மடிகின்றது காளான். அதே போல் ஒவ்வொரு தாவர வர்க்கத்திற்கும் அது அது ஜீவிக்கும் கால நிலைகள் உண்டு. ஆலமரம் பல நூறு ஆண்டுகள் உள்ளது. வைரம் பாய்ந்த ஆயிரம் காலத்து மரங்களும் பல உள்ளன.

ஆனால் ஆயிரம் ஆண்டுகள் வாழும் மரம் உருவான ஆரம்பக் கால நிலையே காளானின் வழித் தொடர்ச்சி தான். இயற்கையின் தாவர இன முன்னோடி “காளான் தான்...!”

அவ்உயிரணு அவ்வமில வண்ணமுடன் இடியும் மின்னலும் தோன்றும் காலத்தில் ஒன்றுடன் ஒன்று இன வர்க்கங்கள் மோதும் நிலையில் அதற்கு மேல் இந்த மழை நீர் படும் பொழுது வெடிக்கும் தன்மை உருவாகிறது.

அப்படி வெடிக்கும் தருணத்தில்
1.இரண்டு வகை அமில குணத்தின் வெடிப்பில் தோன்றும் அமிலமானது இந்தப் பூமியில் மோதுண்டவுடன்
2.அதன் மேல் படும் ஒளி அலையின் ஈர்ப்பினால் உயிரணு தோன்றி தாவரம் வளர்ந்து
3.ஒவ்வொரு நிலை கொண்ட தாவர இன வர்க்கங்கள் மாறி மாறித் தோன்றுகிறது.

முதலில் காளான் தோன்றி அதன் ஆயுள் முடிந்தவுடன் அந்தக் காளானது அழுகிய நிலையில் பூமியில் படர பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலையின் வெக்கை அதன் மேல் பட்டு அதிலிருந்து வெளிப்படும் அமில குணத்தைக் கொண்டு மீண்டும் பூமியில் படர்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் உயிரணுவின் இன வளர்ச்சி சிறிது மாற்றம் கொண்டு மீண்டும் அதிலிருந்து சில வளர்ச்சி நிலைகள் மாறுகிறது.

மாற்றம் ஏற்பட்டு இப்படியே பல இயற்கை வளங்கள் தோன்றி ஒன்றுடன் ஒன்று அமிலத் தன்மைகள் மாறி மாறி உருவாகிப் பல வழிகள்... பலவித உயிரணுக்களும் கனி வளங்களும் வளர்ந்து கொண்டே மாறி மாறி வாழ்ந்து கொண்டே சுழன்று ஓடிக் கொண்டே உள்ளன.

ஓடும் ஓட்டத்தில் வெளிப்படும் அமில குணத்தில் பல உயிரணுக்கள் அந்த மோதலில் வெளிப்படுகின்றன. “ஒன்றில்லாமல் ஒன்றில்லை...” என்பதன் பொருளும் இதுவே..!

1.எந்த அணுவும் உதிக்க வேண்டும் என்றால் “இந்த மோதல் தான்...” காரணம். (இது முக்கியம்)
2.அமில குணங்கள் மோதுண்டு அதன் மேல் படும் மழை நீரின் ஜீவனால் வெடிப்பு நிலைப்பட்டு உருவாகின்றது உயிரணு.
3.அதன் தொடர்ச்சி நிலை சேர்க்கை தான் ஜீவனின் சேர்க்கையினால் இந்த ஜீவ அணு தோன்றுகிறது.

ஆண் பெண் சேர்க்கையினால் இந்த இரண்டு குண நிலை கொண்ட அமிலத்துடன் ஜீவன் கொண்ட மற்றோர் எண்ண அமிலமான உயிராத்மா தனக்குகந்த அமில குணம் கொண்ட தாயின் தந்தையின் பிறப்பில் கருவுக்கு வருகின்றது.

பல வகையான அமில குணங்களின் சேர்க்கை கொண்டது... இவ்வுலகின் ஈர்ப்பு அமில குணம் ஒன்று தான். இவ் ஈர்ப்பு நிலைக்கொப்ப பல நிலைகளை நம் பூமி வளர்த்துக் கொள்கிறது. பூமி வெளிக்கக்கும் உஷ்ண அலையின் ஈர்ப்பில் பல குண நிலைகள் மாறு கொள்கின்றன.

பல வகையான அமில குணம் கொண்ட இந்தக் காற்றைத்தான் நாம் சுவாசிக்கின்றோம் என்றாலும்... “நம் எண்ண நிலைக்கொப்ப சுவாச அமிலம் தான்...” நம் சுவாச ஈர்ப்புக்கு வரும்.

1.வெங்காயச் செடி அதன் கார அமிலச் சுவாசத்தை ஈர்க்கின்றது.
2.மிளகாய்ச் செடி நெடி கலந்த கார அமிலத்தை ஈர்க்கின்றது.
3.கருணை சேனை இவற்றின் குண அமிலம் அரிக்கும் தன்மை உடைய அமில குணத்தை ஈர்த்து அவை வளர்கின்றன.

ஒவ்வொன்றிற்கும் அதனதன் நிலைக்கொப்ப ஒரே தன்மையுடைய அமிலத்தைத்தான் ஈர்த்துப் பழக்கப்பட்டு வளரும் தன்மையுடையது தாவர வர்க்கங்கள்.

ஆனால் பலவற்றையும் புசிக்கும் மனித ஆத்மா தான் உண்ணும் உணவின் உணர்வைத் தவிர “எண்ணும் எண்ணத்தின் அமில குணத்தையும்” அறியவல்ல ஆற்றல் கொண்டவன்.

உடம்பின் மேல் மிளகாயின் காரம் பட்டவுடன் “எரிகிறது..!” என்று அறிகின்றோம். வெங்காயத்தின் காரத்தினால் “கண்ணில் நீர் வடிகிறது...!” சேனை கருணை போன்ற கிழங்குகளில் அமில நீர் பட்டவுடன் அவ்விடம் “பிய்ப்பு எடுக்கின்றது...”

இந்நிலையான அமில குணத்தை நம் உடலும் உணர்வும் ஈர்க்கா விட்டால் அதன் தன்மையின் பாதிப்பை நாம் அறிவோமா...?

மிளகாயின் குணம் நெடி கலந்த குணம்... வெங்காயத்தின் குணம் அதற்குகந்த கார குணத்தினால் அதன் தன்மையை உணரப்படுகின்றோம்.  

எல்லாமே இந்தக் காற்றின் ஈர்ப்பில் தன் ஈர்ப்புக்கொப்ப வளர்கிறது. இந்நிலைகளைப் போன்று தான் நம் மனித ஆத்மாவின் எண்ண நிலைக்கொப்ப “அமில குணங்களைச் சேமிக்கிறது...” என்பதை அறியவில்லை.

நம் எண்ண நிலைக்குகந்த ஈர்ப்பில் நாம் எடுக்கும் சுவாசத்தைக் கொண்ட நிலையுடனே எந்த எண்ணத்தில் எல்லாம் நாம் இருந்து கொண்டுள்ளோமோ... அதன் நிலைக்கொப்ப அமில குணங்கள் நம்முள் சேமிதம் கொண்டே வாழ்கின்றோம் நாம் எடுக்கும் சுவாசத்தினால்...!

“குண அமிலம்” என்பதன் நிலை புரிந்ததா...?

இந்தக் குண அமிலத்தின் நிலையை உணர்த்துவதன் உண்மை நிலை என்ன..?

ஒவ்வொரு மண்டலத்திற்கும் நட்சத்திர மண்டலத்திற்கும் பால்வெளி மண்டலங்களுக்கும் அதனதன் தன்மைக்குகந்த குண அமிலம் உண்டு. அதன் வளர்ச்சி வட்டத்திலே தான் இயற்கையின் அமில குணங்கள் செயல் கொண்டு வாழ்கின்றன.
1.இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட குண அமிலத்தைப் பெறவல்ல ஆற்றல்
2.அதாவது தனக்குகந்ததைப் பெறும் சக்தி மனித ஆன்மாவுக்கு உண்டு.

இயற்கை வளங்கள் ஒரு வகையான அமில குணத்தை ஈர்க்க வல்லது. ஆனால் மனித ஆத்மாவோ... எண்ண நிலைக்குகந்த அமில குணத்தை எல்லாம் ஈர்த்து ஈர்த்து வாழ்கின்றான்.

எண்ண நிலை கொண்ட மனிதனால் தனக்குகந்த அமில குணத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்றால்
1.இந்தக் குணங்களிலேயே சிறந்த குணமான
2.“ஆண்டவன்...” என்னும் நிலை கொண்ட குணத்தைப் பெற முடியும்.