ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 27, 2016

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அணுகுண்டு இங்கே விழுகாதபடி தடுக்க வேண்டும்

நாம் இப்பொழுது தேடி வைத்திருக்கின்றோம். அரசியலில் நாம் தேடி வைத்திருக்கின்றோம். ஓட்டு போட்டுப் போனவுடன் என்ன செய்கிறோம்?

யார் வலிமையோ அவர்கள் சொல்வதைத்தான் நாம் கேட்க வேண்டும். சம்பாதித்து வைத்திருந்தாலும் அவர்கள் கேட்கும் பொழுது கொடுத்துவிட வேண்டும். இந்த மாதிரிச் சூழ்நிலை தான் இப்பொழுது உருவாகியுள்ளது.

அதே சமயத்தில் தர்மத்தையும் நியாயத்தையும் கடைப்பிடித்து நம் நாடு நலமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றதா...? என்றால் இல்லை.

எந்தச் சூழ்நிலையிலேயும் நாம் சுகமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். சுகத்தை அனுபவிக்கின்றார்கள்.

ஆனால், இப்பொழுது போர் முறை வந்து ஒரு அணுகுண்டைப் போட்டால் என்ன செய்யும்? எல்லாம் தீர்ந்தது.

நான் சம்பாதித்ததும் போய்விட்டது, மற்ற அனைவரது சம்பாத்தியமும் போய்விடுகின்றது.

ஆகவே, நாம் எடுக்கும் இந்த வலிமையான துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு அந்த அணுகுண்டு இங்கே விழுகாதபடி தடுக்க வேண்டும்.

அருள் உணர்வு கொண்டு எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது உங்களால் அந்த அணுகுண்டைத் தடுக்கக்கூடிய சக்தி உண்டு. நம் நாட்டு மக்களைக் காக்க முடியும்.

அதை வெடிக்கமால் செய்யவும் முடியலாம். அந்த அளவிற்கு நீங்கள் வலிமை பெறவேண்டும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அன்று அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைப் பெற்றான். தென்னாட்டில் தோன்றிய அவன் தான் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

எந்நாட்டவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருளைப் பெற்றால் இருளை நீக்கி மெய்ப்பொருள் என்ற நிலையைப் பெறமுடியும். அவன் அருளைப் பெற்றால் நம் உடலில் என்றும் இருள் சூழா நிலைகளை உருவாக்க முடியும்.

நாம் யுத்த மேகத்தில் நம் அறிவுகள் வந்தால் மீண்டும் பிறவிக்கே வருகின்றோம். இந்த உலகம் இனிமேல் எப்படி மாறும் என்று சொல்ல முடியாது.

யுத்தத்தில் விஷத் தன்மைகள் அதிகமாகி நம்மை விஷப் பூச்சிகளாக மாற்றிவிடும் உயிர். மடிந்தால் நாம் நுகர்ந்த உணர்வை உயிர் அவ்வாறு தான் மாற்றிவிடும்.

ஆகவே, எந்த யோகங்கள் செய்தாலும், எந்தப் பாவங்களும் செய்தாலும் இந்த உடலில் வரும் நோய்களை எதுவாக இருந்தாலும் அந்த அருள் ஒளியைப் பெறவேண்டும் என்ற உணர்வைக் கலந்தே நாம் வாழ்க்கையில் வழி நடத்தினோம் என்றால் இருளை அகற்றும் சக்தி நமக்குள் பெருகிக் கொண்டே வரும்.

இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குச் செல்கின்றோம். வேகா நிலை அடைந்துவிடுகின்றோம். இந்தச் சூரியனே அழிந்தாலும் நாம் அங்கே செல்கின்றோம்.

ஆனால், இந்த உடலின் இச்சைக்கு வரப்படும் பொழுது நாளைக்கு குண்டு வீசினான் என்றால் உங்கள் வீடு, காடு, சொத்து, பிள்ளை எல்லாம் என்ன ஆகும்? எல்லாமே போய்விடும்.

வரப் போகின்றது, கூடிய சீக்கிரம். பிறகு இதிலே எதைத் தேடப் போகின்றீர்கள்?

எத்தனை விபத்துக்கள்.., அசம்பாவிதங்கள்.., இயற்கையின் சீற்றங்கள், அழிவுகளை எத்தனையோ பார்க்கின்றோம். அங்கே வாழ்ந்தவர்கள்  எவ்வளவோ சொத்துக்களைத் தேடி வைத்திருந்தார்கள். எல்லாம் என்ன ஆனது?

ஆகையினால், நமக்கு அழியாச் சொத்து பேரின்பச் சொத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்த வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதை எடுத்து வேதனை, சலிப்பு, கோபம் ஆத்திரம் எந்தத் தீமையாக இருந்தாலும் உங்களுக்குள் புகாது தடுத்துப் பழகுதல் வேண்டும். அந்த அருள் ஒளியை உங்களுக்குள் வளர்த்துப் பழகிக் கொள்ளுங்கள்.

எந்த அளவிற்கு இதை வளர்க்கின்றோமோ அங்கே துருவ நட்சத்திரத்திற்குச் செல்கிறோம்.