ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 14, 2016

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இரத்தத்தின் வழி செலுத்தி தீமையான அணுக்கள் உருவாகாமல் தடுத்துக் கொள்ளுங்கள்

ஒருவரைப் பற்றித் தவறான நிலைகளைப் பார்த்தவுடன் உற்றுப் பார்த்து அவரை “மோசமானவர்” என்று நினைக்கின்றோம்.

அந்த மோசமான உணர்வு நமக்குள் வளர்ந்தவுடன் நாமும் அந்த மோசமான செயலைச் செய்யத் தொடங்கிவிடுகின்றோம்.

நம்மை அறியாமலே இது இயக்கும்.

நாம் தவறு செய்யவில்லை என்று நினைக்கின்றோம். ஆனால், தவறு செய்கிறான் என்று எண்ணியவுடன் தவறின் இயக்கம் நம்மை இயக்கிவிடுகின்றது. ஆகவே, அந்தத் தவறை மாற்றும் சக்தி இருந்தாலும் முடியாத நிலை ஆகிவிடுகின்றது.

நாம் பலவிதமான உணர்வுகளைப் பதிவாக்கியுள்ளோம். வேதனைப்படும் சொல்களைக் கண்டவுடன் அந்த உணர்வுகள் வந்தே தீரும். அந்த வேதனை உணர்வைச் சுவாசித்தவுடன் அன்று முழுவதுமே சோர்வடைந்த நிலைகள் வரும்.

ஆகவே, வேதனை அணுக்கள் வளர்ந்து விடுகின்றது. வேதனை அணுக்கள் இரண்டு நாட்களுக்குச் சேர்ந்தாற்போல் இரத்தநாளங்களில் கலக்கப்படும் பொழுது மற்ற அணுக்களையும் செயலற்றதாக மாற்றும்.

நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இரத்தநாளங்களில் தான் கலக்கின்றது. எப்படி இந்தக் காற்று மண்டலத்தில் கலக்கின்றதோ இதைப் போலத்தான் இரத்தங்களிலே கலக்கப்படும் பொழுது என்ன ஆகின்றது?

இரத்தம் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்குமே உணவு எடுத்துச் செல்கின்றது. அதிலிருந்து வரக்கூடிய உணர்வின் சத்தை எடுத்துத்தான் உடலில் உள்ள அணுக்கள் விளைகின்றது.

உயிரின் தன்மை கொண்டு நுகர்ந்தால் ஆவியின் தன்மை அடைந்தபின் நம் அணுக்களில் இரத்தத்தில் கலந்தபின் இந்த உணர்வின் தன்மை செயலாகும்.

உணவாக உட்கொள்ளும் உணர்வின் தன்மையை நம் உடல் உறுப்புகள் ஜீரணித்து நீரைப் பிரித்துவிட்டு உணர்வின் சத்தை இரத்தமாக மாற்றுகின்றது. ஆக, இரத்தத்தின் தன்மை கொண்டு வரும் பொழுது அந்த அணுக்களின் ஆகாரம் இதன் வழியே செலுத்துகிறது.

நாம் நல்ல உணவுகளைப் படைத்துச் சாப்பிட்டால் அதன் உணர்வின் தன்மை கொண்டு நாம் நல்ல எண்ணங்களை எண்ணும்போது அந்த நல்ல அணுக்களுக்கு அது ஆகாரமாகச் செல்கிறது.

ஆனால், நல்ல உணவைப் படைத்துச் சாப்பிட்டும் வேதனையான உணர்வைச் சுவாசித்தால் அந்த உணர்வின் தன்மை இதற்குள் ஆனபின் வேதனை உணர்ச்சிகள் தூண்டி நல்ல உணர்வை உட்கொள்ளாது தள்ளிவிடும் நிலை வருகின்றது.

ஏனென்றால், நாம் எண்ணும் உணர்வுகளை நம் உயிர் இந்த உணர்ச்சிகளை அணுக்களாக மாற்றி உணர்வின் செயலாக்கங்களாக நம்மை மாற்றிக் கொண்டேயுள்ளது.

இதைப் போன்ற கொடுமையிலிருந்து நாம் மீள வேண்டும் என்பதற்குத்தான் அந்த தவறிலிருந்து விடுபடும் முறைக்கே உங்களுக்குள் அருள் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி சுவாசித்து அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி இரத்தத்தில் கலந்த தீமையான உணர்வுகள் அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்துதல் வேண்டும்.

எண்ணியவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் கவர வேண்டும். கவர்ந்து உடலுக்குள் தீமைகள் செல்லாதபடி தடுக்க வேண்டும். 


நல்ல இரத்தங்கள் உருவாகி நம் உடல் முழுவதும் படரும். உடலை உருவாக்கிய நல்ல அணுக்களும் உற்சாகமடையும். தீமைகளை அகற்றும் வல்லமையும் பெறுவோம்.

உங்களால் முடியும், உங்களை நீங்கள் நம்புங்கள்.