ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 10, 2016

நோய் என்று நோயின் மீது எண்ணத்தைச் செலுத்தாதீர்கள் அதை மறைக்க மறக்க மகரிஷிகளின் அருள் உணர்வைச் சேருங்கள்

இந்த உபதேசத்தைப் படிப்போர் அனைவரும் உண்மையின் உணர்வை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

இந்த மனித உடலிலிருந்தே அருள் ஒளியைப் பெறவெண்டும் என்று எண்ணுங்கள். அந்த உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பரிடத்தில் இதைப் போன்ற உணர்வை ஊட்டுங்கள்.

தவறு செய்வது நாம் அல்ல. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வே நம்மை இயக்குகின்றது. இதிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்ற உணர்வின் தன்மையை நீங்கள் மற்றோருவருக்கு ஓதும் பொழுது அந்த உணர்வினை உங்களுக்குள் வலுவாக வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் சொல் - நீங்கள் சொல்லும் அந்த உணர்வுகள் பதிவாக்கப்படும் பொழுது அவர்களைத் தீமைகளைலிருந்து மீட்டிடும் சக்தியாக மாற்றவேண்டும். நீங்கள் இடும் மூச்சலைகள் சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றும்.

நீங்கள் எண்ணும் பொழுது அகஸ்தியனின் நிலைகளில் அறியும் உணர்வாக அறிய முடியும். ஆக, நஞ்சினை வென்றிட்ட உணர்வினை அந்தத் துருவ மகரிஷியின் உணர்வலைகளைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

உங்களுக்குள் இது வளர வளர உங்கள் வாழ்க்கையின் நிலைகளும் பிறவியில்லா நிலை அடையும் தன்மையும் வரும்.

ஆகவே, சதா உங்கள் வாழ்க்கை அனைத்தும் மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே வாழ்ந்திடுங்கள். மகரிஷிகளின் அருள் ஒளி அனைவரும் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

பகைமை என்ற உணர்வோ பகைமை உணர்வால் வந்த நோயோ வந்தாலும் இதை மறந்துவிடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் என்று இதைப் பெருக்குங்கள். அருள் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அது வளர நம்மையறியாது சேர்ந்த தீமைகள், அந்தப் பகைமை உணர்வால் ஏற்பட்ட கடும் நோய்களிலிருந்து விடுபட முடியும்.

ஆக, நோய் என்று நோயின் மீது எண்ணத்தைச் செலுத்தாதீர்கள். அதை மறைக்க மறக்க அருள் உணர்வைச் சேருங்கள்.

அருள் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க மகரிஷிகளை எண்ணினாலும் இந்தத் தீமையின் உணர்வுகள் கொஞ்சம் கடினமாக இருக்கும். மேலும் என்னைச் சிந்திக்கவிடவில்லை என்று ஏங்க வேண்டாம்.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம் எங்களுக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் அணுக்களும் அது சாந்தமடையும். எங்கள் உடல் நலம் பெறும்.

எந்த நோயின் காரணமாக இருக்கின்றதோ அருள் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் பெருகும். எங்களுக்குள் இந்த நோயை நீக்கிடும் அருள் சக்தி பெருகும், அது வளர்ச்சி பெறும்.

எங்களுக்குள் அருள் ஞானம் பெருகும். எங்கள் பேச்சும் மூச்சும் கேட்போர் நலம் பெறுவர் என்ற மன உறுதியுடன் எண்ணுங்கள்.

ஏனென்றால், நோயுடன் ஒருவர் சொன்னால் அவருக்குள் இந்தப் பகைமையும் தான் உண்டாக்குகின்றது. அவருக்கும் நோய்தான் உருவாக்குகின்றது.

ஆகவே, இதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் அனைவரும் விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்திலே என்றும் மகிழ்ந்து வாழ்ந்திட எமது அருளாசிகள்.