ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 26, 2016

செவி வழி உணர்ச்சியைத் தூண்டி, கண் வழி ஈர்க்கச் செய்து, மூக்கு வழி சுவாசிக்கச் செய்து, உடலில் பரவச் செய்து, இரத்தத்தில் கலக்கச் செய்யவே இந்த உபதேசம்

இன்று உதாரணமாக இன்னொரு மனிதனை மந்திரத்தால் சில நிலைகளை எடுத்து நமக்குள் நுகர்ந்து கொண்டால் இன்னொரு மனிதனின் உடலிலிருந்து வரக்கூடியதுடன் மோதி அந்த உணர்வின் நுண்ணிய அறிவுகளைக் காட்டுகின்றது. இதை ஜோதிடமாகச் சொல்வார்கள்.

ஒரு மனிதன் தனக்குள் நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொண்டால் ஒருவன் தவறு செய்கின்றான் என்று நுகர்ந்தபின் “இவன் தவறு செய்பவன்” என்று உணரும் அறிவு வருகின்றது.

ஆனால், தவறு செய்தான் என்ற உணர்வை இவர் நுகர்ந்து விட்டால் அந்த நுகர்ந்த உணர்வு இவருக்குள்ளும் விளையத் தொடங்கிவிடுகின்றது.

ஆனால், அறியும் அறிவு வந்தாலும் இதைத் துடைக்கவில்லை என்றால் இந்த உணர்வின் அறிவுகளை மாற்றிவிடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனிதன் விடுபடுதல் வேண்டும்.

தவறு செய்கிறான் என்று நாம் நுகர்ந்த உணர்வு கொண்டு அறிந்தாலும் அறிந்த உணர்வை நம் உயிர் “ஓ” என்று பிரணவமாக்கி “ம்” என்று நம் உடலாக மாற்றிவிடுகின்றது.

ஆனால், நாம் தவறு செய்யவில்லை. இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

இதற்குத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் காலை துருவ தியானத்தில் மனிதனின் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து துருவ நட்சத்திரமாக இருக்கும் அதனின்று வெளிப்படும் உணர்வைக் கவரும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றோம்.

கணவனுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும், மனைவிக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று இரு உணர்வும் ஒன்றாக்கிடல் வேண்டும்.

அந்த உணர்வின் துணை கொண்டு எதை உற்று நோக்கி உணர்வை இங்கே விளைவிக்கின்றனரோ கணவன் மனைவி உங்கள் இரு உயிரும் ஒன்றாகின்றது. ஒளியின் உணர்வாக ஆகின்றது.

இப்படி அடைந்தவர்கள் தான் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து பிறவியில்லா நிலை என்றும் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றி சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்த வாழ்க்கையில் அதன் வழி அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை மாய்த்து அருள் ஞானிகளின் உணர்வைச் சேர்த்து உங்கள் நல்ல மனதைத் தெளிவாக்குதல் வேண்டும்.

அந்தத் தெளிவாக்கும் நிலைகளை நீங்கள் பெறச் செய்வதற்குத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் உணர்வை உங்களுக்குள் தெளிவாக்குவது.

இன்று பாட நூல்களில் விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்தால் அதன் வழிப்படி இன்னென்ன காரியங்கள் இன்னென்ன வழியில் செய்தார்கள் என்ற பதிவின் படிப்பில் நாம் நினைவு கொண்டால் மீண்டும் படித்ததைப் பதிவாக்கி அதை நினைவுகொள்ளும் போது அதன் வழி கொண்டு விஞ்ஞான அறிவைப் பயன்படுத்துகின்றோம்.

வாழ நமக்குள் வழியும் வகுக்கின்றது. பாட நிலைகள் கொண்டு அறிந்து கொள்கின்றோம்.

இதைப் போலத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் உணர்வை உங்கள் செவி மூலம் உணர்வை உந்தச் செய்து கண் வழி ஈர்க்கச் செய்து மூக்கு வழி நுகரச் செய்து உணர்வின் அறிவை உடலுக்குள் பரவச் செய்து உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்ய இந்த உபாயத்தைக் கையாள்கின்றோம்.

இந்த வாழ்க்கையில் வரும் பகைமை உணர்வுகளை நாம் மாற்றவேண்டும் என்றால் பகைமை உணர்வு என்று தெரிந்தபின் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று இரண்டையும் இணைத்துவிட வேண்டும்.

இணைத்து விட்டால் பகைமை உணர்வைத் தணிக்க முடியும். பகைமை உணர்ச்சியை அடக்கும் வல்லமையும் பெறமுடியும். பகைமையற்ற உணர்வின் தன்மையும் நம் உடலுக்குள் விளையும். ஏகாந்த நிலை பெறலாம்.

ஆகவே, ஞானிகள் கண்ட இயற்கையின் உண்மை நிலைகளை நீங்களும் நுகர்ந்தறிய முடியும். அருள் ஒளியின் உணர்வைக் கூட்டி இந்த உடலை விட்டு அகன்றால் நாம் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய இது உதவும்.