ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 19, 2016

உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களைக் கரைக்கும் முறை – விநாயகர் தத்துவத்தின் மூலம்

நட்சத்திரமாகி சூரியனான பின் அதன் வளர்ச்சியில் ஒரு பிரபஞ்சமாகி வளர்ந்தாலும் இதற்குள் உயிரணு உண்டாகி ஜீவ அணுக்களை மாற்றி மனிதனாக உருவான பின் உணர்வை ஒளியாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்திற்கு வரக்கூடிய உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கின்றது துருவ நட்சத்திரம்.

அதனுடைய ஈர்ப்பு வட்டத்திலிருக்கக்கூடிய சப்தரிஷி மண்டலம் ஆறாவது அறிவை ஏழாவது அறிவாக மாற்றியவர்கள். அதன் வழி நாம் இணைந்தால் மனிதனின் கடைசி எல்லை அங்கே இருக்கின்றது.

ஆகவே, பிறவியில்லா நிலை அடையலாம். நாம் எளிதில் செல்ல முடியும் எளிதில் செல்லும் மார்க்கத்தைத்தான் விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இன்று அதை வேறு வேறு ஆசையைக் காட்டி உடலின் இச்சைக்கே மாற்றிவிட்டார்கள். மெய்ப் பொருளைக் காணும் நிலையை இழக்கச் செய்துவிட்டனர்.

இழந்த நிலைகளிலிருந்து மீண்டு வரவேண்டும் என்றால் இன்று நான் (ஞானகுரு) சொல்வது - நான் பைத்தியக்காரன் ஆகிவிடுவேன் போல் இருக்கிறது. அந்த அளவிற்கு இன்று எதை எதையோ பிதற்றுகின்றார் என்ற நிலை வருகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட சாங்கிய சாஸ்திரங்களிலிருந்து விடுபட்டால் நாளைக்குப் பாவம் வந்து சேர்ந்து விடுமோ என்று தப்பையே மீண்டும் செய்து தவறின் வழியிலேயே செல்லும் உணர்ச்சியைத் தூண்டும் நிலைகள் வந்துவிட்டது.

இதிலிருந்து நீங்கள் மீள வேண்டும்.

ஏனென்றால், இப்பொழுது வந்து கொண்டிருக்கும் விஞ்ஞானத் தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்றால் இன்றிலிருந்து அருள் மகரிஷிகளின் உணர்வுகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

குடும்பத்திலோ, அல்லது நண்பர் என்ற நிலைகளிலோ, உடலை விட்டு எந்த ஆன்மா பிரிந்தாலும் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாவை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரையச் செய்து பெரு வீடு பெரு நிலை அடையச் செய்ய வேண்டும்.

பெரு வீடு என்றால் என்றுமே அழியாது வளர்ந்து கொண்டே இருக்கும். பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

நம்முடன் கலந்த உணர்வின் தன்மை அங்கே சென்றபின் நம்முடன் பழகிய உறவின் இந்த உணர்வுகள் நாம் எண்ணும் பொழுது அங்கே தொடர்பு கொள்கிறது.

நமக்குள் பழகிய மகிழ்ச்சி பெறச் செய்யும் உணர்வுகள் தான் அங்கே நிலைத்திருக்கும். இந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் எண்ணினோம் என்றால் சப்தரிஷிகள் உணர்வுடன் தொடர்பு கொள்கிறது. வாழ்க்கையில் வரும் தீமைகளையும் அகற்றும் வல்லமை பெறுகின்றோம்.

ஆகவே, அவர்கள முன் செலுத்தினால் பின் அதனின் தொடர் வரிசையில் நாம் செல்ல முடியும்.

நம்முடன் பழகிய நண்பர்கள் அவர்களுடன் எத்தனையோ வகையில் பழகுகின்றோம். குடும்பத்திற்குள் வெறுப்பு இருக்கும் ஆனால், நண்பர்கள் என்ற நிலையில் பாசம் இருக்கும்.

பாசத்தின் நிலைகளில் வரும் பொழுது அவர் உடலை விட்டுப் பிரிந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன் அவரின் நினைவு அதிகரித்துவிட்டால் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடும்.

வந்துவிட்டால், அவர் தன் குடும்பத்தில் எப்படிச் சிக்கல் பட்டாரோ அவருடன் பழகிய நண்பர்களின் குடும்பங்களில் பல இன்னல்கள் வரும் பார்க்கலாம். அவர் பட்ட தொல்லைகள் இங்கே வந்து மறைமுகமாக இயக்கும்.

அந்த ஆன்மா இங்கே வந்துவிடும். அவர் உணர்வை இந்த உடலில் வளர்த்துவிடும். அதுவும் மனிதனாகப் பிறக்காது, நம்மையும் மனிதனாக ஆகவிடாது. உணர்வின் ஆசைகளே இங்கே வருகின்றது.

அத்தகைய நண்பர்கள் இருப்பினும் நாம் எப்படித் தியானிக்க வேண்டும்?

எங்களுடன் பழகிய நண்பரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்ற உணர்வுடன் விண்ணை நோக்கி உந்தித் தள்ளுதல் வேண்டும்.  

அவர் உணர்வு இங்கே உண்டு. அந்த வலு பெற்றிருப்பதால் இடைமறித்து அந்த ஆன்மாவை அங்கே விண் செலுத்த வேண்டும்.

அங்கே செலுத்தினால் உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது. கரைந்ததை காலை சூரிய உதயத்தின் தன்மை கொண்டு இதைக் கவர்ந்து சென்றுவிடும்.

ஏனென்றால் அங்கே மனிதர்கள் இல்லை. விஷத்தைப் பிரிக்கும் நிலைதான் உண்டு. எது வெளிப்பட்டதோ அந்தக் காந்தப் புலன் அறிவு கவர்ந்து அது ஈர்த்துத் தனக்காகச் செல்லும் பாதையில் “ஓசான் திரையுடன்” இணைத்து விடுகின்றது.

ஆகவே, மீண்டும் இந்தப் பூமியின் தன்மை சுழற்சியாகும் பொழுது தனக்குத் தேவைப்பட்ட அளவே இங்கே கொண்டு வருகின்றது. அதைச் சுத்தப்படுத்துகின்றது.

மீண்டும் இது பல கலவை கொண்டு பலவற்றுடன் கலந்துதான் இங்கே வர வேண்டும். மனித உணர்வின் உணர்ச்சிகள் இங்கே இழந்துவிடும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை இவ்வாறு நாம் விண் செலுத்தி நம்மை அறியாது வரும் தீமைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும். இந்தப் பரமாத்மாவும் சுத்தமைடைகிறது.