ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 11, 2016

மனித உடலில் எதைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றோம்? எதைச் சேர்க்க வேண்டும்?

மனிதனின் வாழ்க்கையில் நாம் புழுவிலிருந்து விஷத்தைக் குறைத்துக் குறைத்துக் குறைத்து விஷத்தை நீக்கிடும் மனித உடலாகப் பெற்றுள்ளோம்.

உயிரால் தான் இந்த மனித உடலைப் பெற்றோம். உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் நுகர்ந்ததை உயிர் உருவாக்கியது. உணர்வின் தன்மை கொண்டு நஞ்சினை நீக்கியது நஞ்சினை நீக்கும் உடலாகப் பெற்றது.

இப்பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்துள்ள நஞ்சினை நம் உடல் மாற்றியமைத்து நல்ல நிலைகளில் உருவாக்குகின்றது.

இருப்பினும் அதிகமாக நஞ்சினைச் சேர்க்கப்படும் பொழுது குறைந்த நீரை வைத்துச் சுத்தப்படுத்த முடியுமா என்றால் முடியாது. அதிக அளவில் நாம் எடுக்கும் இந்த உணர்வுகள் நஞ்சினை நீக்கும் சக்தி நமக்குப் போதுமானதாக இல்லை.

நம் உடல் நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் அதிகமாக உடல் பெற்றாலும் இந்த உடலிலிருந்து வரக்கூடிய மணம் நஞ்சென்றும் அறிந்து கொள்ளும் நிலை பெறுகின்றது.

ஆகவே, இதற்குப் பெயர் கார்த்திகேயா என்றும் தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரம்.

நஞ்சினை நீக்கிடும் ஆற்றலைத் தெரிந்து உணர்ந்து அதை அகற்றப்படும் அந்தச் சக்தி பெற்ற இந்த மனித உடலில் நம் உடலிலிருந்து வரக்கூடிய மணம் வெளிப்படும் பொழுது புறத்திலிருந்து செயல்படும் வேதனைப்படும் உணர்வை இதனுடன் கலக்கப்படும் பொழுது என்ன ஆகும்?

ஏனென்றால், வேதனை என்பதே நஞ்சு. நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் இருந்தாலும் நாம் நஞ்சு கொண்ட உணர்வினை நுகர்ந்து வேதனைப்படும் உணர்வுகளை நமக்குள் சேர்க்கும் பொழுது நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் குறைகின்றது.

நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் குறைந்தால் நஞ்சினை வளர்க்கும் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைகின்றது. நஞ்சின் அளவுகோல் அதிகரித்தால் மீண்டும் நாம் நஞ்சு கொண்ட உயிரினங்களாகத் தான் ஆக நேரிடும்.

இதை மாற்றவேண்டுமல்லவா.

அதற்குத்தான் அகஸ்தியனைப் பற்றியும் அவன் துருவனாகி, துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான நிலைகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

அகஸ்தியன் தாய் கருவில் பெற்ற சக்தியின் துணை கொண்டு நஞ்சின் ஆற்றலை அறிந்து நஞ்சை வென்று அதை ஒளிக்கதிராகத் தனக்குள் மாற்றி அமைத்தான்.

இன்னொரு உடல் பெறும் உணர்வை மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நம் துருவப் பகுதியில் துருவ நட்சத்திரமாக இன்றும் சுழன்று கொண்டுள்ளான்.

துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளை நுகர்ந்தவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.

நம் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சிறுகச் சிறுகச் சேர்த்தால் இதற்கு முன் அறியாது சேர்ந்த நஞ்சுகளையும் இனி வரும் எத்தகையை நஞ்சினையும் ஒளியின் சுடராக நமக்குள் மாற்றிக் கொள்ள முடியும். இந்த உடல் பெறும் உணர்வை மாற்றி ஒளி உடலாக நாம் பெற முடியும்.

ஆக, பல கோடிச் சரீரங்களில் நஞ்சினைக் குறைத்துக் குறைத்துக் குறைத்து மனிதனாக உருவான பின் நாம் உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலை பெறுவதுதான் நம் ஞானிகள் காட்டிய மெய் வழி.