ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 24, 2015

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை உருவாக்கியதன் நோக்கம்

நாம் சங்கடமான நிலைகளில் பேசிக் கொண்டே இருந்தோம் என்றால் நம் வியாபாரத்திலும் மந்தமாகிவிடும். நம் குழந்தைகளிடத்திலும் பக்குவமாக இருக்க முடியாது.

சங்கடமாக இருக்கும் பொழுது, சமையல் செய்தாலும் எந்தெந்த பதார்த்தங்களை எதெதோடு கலக்க வேண்டும் என்று சமமாகக் கலக்க முடியாது.

அதே மாதிரி சங்கடமாக இருக்கும்பொழுது நாம் சாப்பிட்டோம் என்றால் ருசி இருக்காது. ருசி இல்லாது சாப்பிட்டாலும் ஆகாரத்தில் உள்ள சத்தைக் குடல் பிரிக்காது. அப்பொழுது குடலில் நோயாக மாறிவிடும்.

இதைப்போன்ற நிலைகளை மாற்றுவதற்குத்தான் நம் குருநாதர் காட்டிய தியானத்தைக் கடைப்பிடித்து நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துவதற்காக இதை உபதேசிக்கின்றோம்.

ஆகையால், தபோவனத்திற்கு வரக்கூடிய அனைவருமே இந்த தியானத்தையும் ஆத்ம சுத்தியையும் ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

உங்களுக்குள் உங்களைக் கோபப்படச் செய்யும், ஆத்திரப்படச் செய்யும், துன்பப்படச் செய்யும் நிலைகளில் இருந்து மீள ஓம் ஈஸ்வரா குருதேவா என்று உங்கள் உயிரை வேண்டி இருங்கள்.

உங்கள் உயிரிடம் நல்ல உணர்வுகளைப் பதிவு செய்யும் பொழுது குணத்தின் அடிப்படையில் உங்களை இயக்க ஆரம்பித்து விடும்.

அதனால் இங்கு வருகின்றவர்கள் அனைவரும் ஓம் ஈஸ்வரா என்று உயிரை வேண்டி இங்கு சொன்ன முறைப்படி தியான ஹாலில் அமர்ந்து ஏங்கி தியானிக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

வாழ்க்கையில் எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் நிவர்த்தியாகி எங்கள் சொல்லாலும் செயலாலும் உணர்வுகள் வெளிப்பட்டு பிறருக்கு நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானித்தாலே போதும்.

ஏனென்றால், அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்தியை இங்கு அதிகமாகப் பதிவு செய்து இருக்கின்றேன்.

இங்கு இருக்கும் மரங்களில் கூட, ஒவ்வொரு காலங்களில்
அந்த மரங்களிலிருந்து காற்று வெளிப்படும் பொழுது
அந்தக் காற்றிலிருந்து நல்ல சக்திகள் பெறுவதற்கு
சில நிலைகளைச் செய்து இருக்கின்றேன்.

ஆகையால் நீங்கள் அதே மாதிரி எண்ணி எடுத்தீர்கள் என்றால் உங்கள் கஷ்டத்தை நீங்களே போக்க முடியும். இந்த மாதிரி முறையை நீங்கள் கையாண்டு கொள்ள வேண்டும்.

இதெல்லாம் பெறச் செய்வதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை நிறுவியது.

இந்தத் தியானத்தைப் பழகிக் கொண்டபின், உங்கள் வீட்டு தியான அறையில் ஒரு டம்ளரில் நீரை எடுத்து வைத்து இங்கே சொல்லிய முறைப்படி தியானமிருங்கள்.

பின் தபோவனத்திலிருந்து வாங்கிச் சென்ற விபூதியை அந்த நீரில் போட்டு
மகரிஷிகளின் அருள் சக்தி இங்கு படர வேண்டும்
என்று வீடு முழுவதும் தெளித்தீர்கள் என்றால்
வீட்டிற்குள் பதிவான தீய உணர்வுகள் அனைத்தும் நீங்கி
உங்களுக்கு நிம்மதி ஏற்படும்.

நாம் வருத்தப்படவில்லை என்றாலும், பிறர் படும் துயரங்களைக் கண்ணில் பார்த்தாலும், காதில் கேட்டாலும் அந்த உணர்ச்சிகள் தூண்டி நாம் இருக்கின்ற இடத்திலும் (வீட்டில்) பதிவாகி விடும்.

அந்த உணர்வுகள் உமிழ்நீராகச் சேர்ந்து நம் உடலில் நோயாக வர முயற்சிக்கும். இதைப்போன்றுதான் நம் உடலில், நம் வாழ்க்கையில் நம்மை அறியாமல் தோன்றிக்கொண்டே இருக்கின்றது.

இதையெல்லாம் போக்குவதற்காக வேண்டித்தான் மெய்ஞான உணர்வுடன் ஆத்மசுத்தியை உங்களுக்குள் பதிவு செய்து அதை நினைவு கொள்ளும் பொழுது தீமைகளை நீக்கும் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை உருவாக்கியது.