ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 23, 2015

உயிரில் உள்ள காந்தத்தில், துருவ நட்சத்திரத்தின் பேரருளை மோதச் செய்ய வேண்டும்

1. உயிரில் உள்ள காந்தத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை மோதச் செய்ய வேண்டும்
நாம் நம் உடலில், “ஓம் ஈஸ்வரா’ என்று உயிரின் துடிப்பின் நிலைகளைக் கூட்டும் பொழுது, நம் உயிரின் துடிப்பின் வேகம் கூடுகின்றது. அப்பொழுது
நாம் அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணி,
அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை
நமக்குள் மோதச் செய்யும் பொழுது,
ஏற்கனவே இருந்த துடிப்பைக் காட்டிலும்,
அதிகமான நிலைகளை நமக்குள் சேர்க்கப்படுகின்றது.
ஆக நம் உடலிலே காந்த சக்தி கூடுகின்றது.

இந்த வேகத்துடிப்புடன், நம் சுவாசத்தை மேல் நோக்கி நாம் எண்ண வேண்டும்.

புருவ மத்தியிலே நம் உயிர் இருப்பதனாலே நம் கண்ணின் புலனறிவை, ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி, உடலுக்குள் அந்த நினைவைச் செலுத்தும் பொழுது, எந்த பாகத்தில் அந்த நினைவைச் செலுத்துகின்றோமோ, அந்த உணர்வின் நிலைகள் கூட, ஊடுருவிச் செல்லும் நிலைகள் இருக்கின்றது.

அதைப் போல, நம் கண்ணான புலனறிவின் நிலைகளை உயிருடன் ஒன்றி இணைக்கச் செய்து, இந்த ஆற்றலை நாம் செயல்படும் பொழுது, அந்த உயிருக்குள் அந்த வேகத் துடிப்பின் நிலைகள் அதிகமாகின்றது..
இந்த அலைகள் நம் சுவாச நாளங்களில் ஊடுருவி,
உடல் முழுவதற்கும் செல்கின்றது.

நமது பூமி சுழலும் பொழுது, பிரபஞ்சத்திற்குள் காந்தங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அந்தக் காந்த அலைகள் மோதும் பொழுது தான், நம் பூமிக்குள் காந்தங்கள் உற்பத்தியாகின்றது.

அப்படி பிரபஞ்சத்திற்குள் உள்ள காந்தங்களின் அதீத மோதலினால், ஏற்படக்கூடிய வெப்பமும், அதில் ஏற்படக்கூடிய காந்தங்கள்தான், பூமிக்குள் மற்ற அணுக்களை இயக்கச் செய்கின்றது. இதைப் போலத்தான், பூமி ஓடும் பாதையிலே அதன் இயக்கங்கள் அது ஓடிக்கொண்டே இருப்பதால், உராயும் சக்தி கிடைக்கின்றது.

எப்படி நாம் காற்றடிக்கும் பம்பை வைத்து, காற்றடிக்கின்றோமோ,
பெட்ரோல் இன்ஜின் ஓடும் பொழுது,
அதிலுள்ள பிஸ்டன் இழுத்து,
தனக்குள் எடுத்துக் கொள்கின்றதோ,
இதைப் போல நம் உயிரின் ஈர்ப்பு, அது துடிக்கும் பொழுது, அதனின் “ஈர்ப்பின் சக்தி அதிகமாகின்றது”.

நாம் சுவாசிக்கும் உணர்வினுடைய நிலைகள், நாம் எந்தெந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ, அதற்குத் தக்கவாறுதான், இந்த உணர்வின் நிலைகளை நாம் சுவாசிக்க முடிகின்றது.

அவ்வாறு சுவாசித்த நிலைகள் நம் உயிருடன் சுழற்சியாகி,
அந்தச் சுழற்சிக்குள் பட்டவுடன்,
உயிரின் காந்தத் துடிப்புகள் மோதியவுடன்
அதனுடைய நுண்ணிய அணுக்கள்
அந்த உணர்வினுடைய நிலைகளை உணரச் செய்கின்றது.
அந்த உணர்வின் அலைகளை நம் உடல் முழுவதற்கும் பரப்பச் செய்து, தன் இனமான நிலைகளை அது இயக்கச் செய்கின்றது.
2. இந்த உபதேசத்தின் மூலமாக மெய்ஞானிகளின் அருள் ஒளியை உங்கள் உயிரில் பாய்ச்சச் செய்கின்றோம் 
ஒவ்வொரு நிமிடமும், மெய்ஞானியின் அருள் ஒளியை யாம் உபதேசிக்கும் பொழுது, நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு
புலனறிவுகள் ஐந்திலும், கண்ணின் பார்வையிலும்,
உணர்வைச் செலுத்தி, உங்கள்பால் யாம் செலுத்தப்படும் பொழுது,
அந்த உணர்வுகள் எந்த ஏக்கத்துடன் வருகின்றீர்களோ,
அந்த ஏக்கத்திற்குள் நாம் இதைப் பாய்ச்சச் செய்கின்றோம்.

இதைப் போன்று உணர்வின் வேகம் கொண்டு, யாம் உங்கள் ஒவ்வொரு உயிரையும், கடவுளாக மதித்து, உங்கள் உயிரான காந்தத்துடன் தொடர்பு கொண்டு, நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை அதிகமாகச் சேர்த்துக் கொண்டு, மெய்ஞானியின் அருள் சக்திகளை யாம் சுவாசிக்கின்றோம்.

அவ்வாறு சுவாசிக்கும் பொழுது, எமது புலனறிவான ஐந்திலும், அது பாய்கின்றது. அதே சமயம், எமது உணர்ச்சியின் சொல்லின் வடிவிலும், அது வருகின்றது. அவ்வாறு வரும் நிலைகளைத்தான், உங்களுக்குள் யாம் எண்ணியபடி, நீங்கள் அந்த எண்ணங்களைச் சமமாக எண்ணும் பொழுதுதான், நீங்கள் செவி வழி கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்..

கேட்க வேண்டும் என்ற விருப்ப நிலைகள் வரப்படும் பொழுதுதான், இது உங்களுக்குள் பதிவாகின்றது.