ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2013

என் மனதே சரியில்லை...! (MOOD) என்பார்கள் - மனது ஏன் அலைக்கழிக்கின்றது...?

1. கடல் அலைகள் போன்று எண்ணங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றது
கடலில், சிற்றலை பெரிய அலை வருவது போன்று, மனித வாழ்க்கையில் இன்று ஒவ்வொரு நிமிடத்திற்கு நிமிடம், எண்ணப் புயல்கள் மாறிக் கொண்டே தான் இருக்கும். அலைகள் மாறிக் கொண்டே தான் இருக்கும்.

ஒரு நண்பனைப் பார்த்தவுடன், மகிழ்வோம். அடுத்த நண்பன் வந்தவுடன், அவன் நம்மைத் திட்டினான் என்றால், உடனே “அப்படியா சொன்னான்?” என்று, ஆத்திரத்துடன் செயல்பட்டுவிடுவோம்.

அடுத்து வரக்கூடிய நண்பனுடைய நிலைகளில், கொடுத்த பாக்கியை கொடுக்க முடியாது என்று சொன்னவுடன், “இருக்கட்டும் நான் பார்க்கிறேன்” என்ற ஆத்திர உணர்வுடன் செயலபடுவோம்.

அடுத்து ஒரு நண்பன் வந்தவுடன், இன்னொருவர் சொல்கிறார். “உங்களைப் பைத்தியக்காரர், ரொம்ப மோசமான ஆள், இரண்டில் ஒன்று பார்க்கிறேன்” என்று சொல்கின்றார். அதை நாம் கேட்டவுடனே, நம் மானமே போய்விடும் என்று, சோர்வான நிலைகளில் இந்த அலைகள் வந்து பலவீனமான நிலைகள் ஏற்படும்.

இப்படி, ஒரு நிமிடத்திற்கு நிமிடம், மற்றவர்களை நாம் சந்திக்கும் பொழுது, அந்த உணர்வலைகள் நமக்குள் தாக்கப்பட்டு, அந்த உணர்வாலே அத்தகைய அலைகள் மோதிக் கொண்டேதான் இருக்கும்.
2. பல உணர்வலைகள் நமக்குள் தாக்கப்படுவதால் அது நம்மை அலைக்கழிக்கின்றது
சாதாரண வாழ்க்கையில், காற்று மண்டலம் எப்படி இந்தப் பூமியிலே சுழலுகின்றதோ, இதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப நம் உடலில் அலை அலையாக மாறி வருவதை, சுதிவாய்வு என்று சொல்கின்றனர்.

இவ்வாறு நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகளெல்லாம், உடலாக மாறி, அந்த உடலின் தன்மையினுடைய நிலைகள் ஆவியாக மாறி, அது ஒலியாக மாறி, நமக்குள் அது சொல்லாகவும், செயல்களாகவும் செயல்படுகின்றது.

உங்களுக்குள் இருக்கக்கூடிய எந்த உணர்வை எண்ணினாலும், அந்த எண்ணத்தைச் சிறிது நேரம் சுவாசிக்கும் பொழுது, அந்த உணர்வின் அலைகள் உங்களை அலைக்கழிக்கின்றது. நடக்கின்றது. அதன் வழிகளிலே உங்களைச் செயலாக்குகின்றது.

இதை நாம் அறிந்துணர்ந்தவர்கள்தான். அறியாதவர்கள் யாரும் இல்லை. எல்லோருக்கும் தெரியும். புதிதாக யாம் ஒன்றும் சொல்லவில்லை.

நம் உடலிலே எந்தெந்த குணங்களை
அதிகமாக, ஆழமாகப் பதிவு செய்திருக்கின்றோமோ,
அது அதிவேகமாக முன்னனியிலே வந்து,
அதைச் சுவாசித்து, அதன் வழிகளில் தான் நாம் நடக்கின்றோம்.

இன்று வரையிலும் நாம் சாந்தமான நிலைகளில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதையும் தாங்காதபடி, ஆழமான உணர்வுகள் நமக்குள் பதிவாகி உள்ளதை, நாம் உந்தச் செய்யும் பொழுது, அந்த உணர்வை முன்னனியிலே வைத்தவுடன், அந்த உணர்வுகள் நமக்குள் வேகமாகக் கூடி, அதன் வழிகளில்தான் நாம் நடக்கின்றோம்.

இதைப் போன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்திலே தான், நமது குருநாதர் காட்டிய அருள்வழிப்படி, உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தைப் போக்க,
உங்களை நீங்கள் நம்புங்கள்,
தாய் தந்தையை தெய்வமாக எண்ணுங்கள்,
தாய் தந்தையருடைய அருளால், எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியையும் எளிதில் நீங்கள் பெறமுடியும்.

யாம் சொல்லும் முறைப்படி, இந்த ஆத்ம சுத்தியையும் தியானப் பயிற்சியையும் நீங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பொழுது, உங்களுக்குள் வரும் எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுபடும் அருள் ஆற்றல் கிடைக்கும். வாழ்க்கையில், நீங்கள் எல்லோரும் மகிழ்ந்து வாழ முடியும். எமது அருளாசிகள்.