ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2013

உங்கள் ஆண்டெனா பவரைக் கூட்டினால் உங்கள் கஷ்டமெல்லாம் பஞ்சாகப் பறக்கும்

T.V.ல் சேனல் ஏதாவது மாறுபட்டுவிட்டால் அப்பொழுது ஆண்டெனாவினுடைய பவரைக் கூட்டுவார்கள். வட்டமாக, குடை மாதிரி வைத்து எவ்வளவு தூரத்திலிருந்தாலும் இழுத்துக் கொண்டு வந்துவிடுகின்றார்கள்.

அதைப் போலத்தான் உங்களுக்குள் ஆண்டெனா பவரை யாம் கூட்டுகின்றோம். அதாவது,
“ஓம் ஈஸ்வரா” என்று
நீங்கள் உங்கள் உயிரை எண்ணியவுடனே
இந்த ஓட்டம் அதிகமாகின்றது.
கரண்ட் உற்பத்தியாகிறது.

அப்பொழுது, ஓம் ஈஸ்வரா என்று உயிரைக் கண்ணில் நினைக்கும் பொழுது, யாம் உங்களுக்குள் பதிவாக்கிய அருள் உணர்வுகளுக்கு சக்தி கூடும். இப்படி கூட்டிக் கூட்டிப் பழகிக் கொள்ளவேண்டும்.
சந்தர்ப்பத்தில் ஒரு சங்கடமான நிலை வருகிறது. ஓம் ஈஸ்வரா என்று நீங்கள் உங்கள் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்குகின்றீர்கள். அப்பொழுது காற்றிலிருந்து எளிதில் அதைப் பிரித்து எடுத்துக் கொள்கிறீர்கள். சங்கடமான நிலை மாறி மகிழ்ச்சியான உணர்வுகள் வரும்.

இன்றைக்கு நல்ல செடியை என்ன செய்கின்றோம்? வீட்டில் கொண்டு போய் வைத்து தண்ணீர் ஊற்றினோம் என்றால் நன்றாக வளர்ந்துவிடும். இடைவிடாது தினமும் ஊற்றிக் கொண்டு இருக்க வேண்டும்.

இதே மாதிரி, உங்களுக்குள் அந்த நல்ல சக்தி வளர தினமும் ஒரு ஐந்திலிருந்து பத்து நிமிடம் ஓம் ஈஸ்வரா குருதேவா என்று உயிரை எண்ணி, மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று “உயிருடன் ஒன்றுங்கள்”.
உங்கள் புலனறிவை விண்ணை நோக்கிச் செலுத்துங்கள்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும்,
எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

இதிலே ஒன்றும் கஷ்டமில்லை. பத்து நிமிடம் செய்து பாருங்கள். கஷ்டமெல்லாம் எப்படி பஞ்சாகப் பறக்கும் என்று பாருங்கள். எமது அருளாசிகள்.