ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 28, 2013

விஞ்ஞானிகள் கணிக்கும் அளவுகோலுக்கு இந்த உலகம் இனி நிற்காது

1. விஞ்ஞானிகள் கணிக்கும் அளவுகோலுக்கு இந்த உலகம் இனி நிற்காது
சூரியன் ஒளி தரும் சக்தியாகவும், மற்றதை இயக்கும் சக்தியாக இருந்தாலும், மனிதனால் ஏற்பட்ட இந்தச் சக்தி, சூரியனும் நஞ்சின் தன்மை அடைந்து கொண்டே வருகின்றது.

இந்தச் சூழ்நிலையில், இன்று நாம் மனிதன் சுவாசிக்கும் அனைத்து உணர்வுகளிலும் அது கலந்து கொண்டே உள்ளது. மற்ற கோள்கள் விஷத்தன்மை கொண்டது. மற்ற கோள்களில் விஷத்தின் தன்மை கொண்டு, வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்த உயிரணுக்களைப் போல நாமும் ஆக நேரிடும்.

இவ்வாறு இந்தக் காற்று மண்டலத்தில் சேர்த்துக் கொண்ட இந்த நச்சுத்தன்மையான உணர்வுகள், நம் உடலில் கலந்து, இந்த உணர்வின் ஆற்றல், இந்த உடல் இழந்தாலும், உடலில் கலந்த இந்த நச்சுத்தன்மையான உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி, அதன் செயலாக இயக்கி, வேதனைகளை அனுபவித்ததே ஆக வேண்டும் (உயிருடன் ஒன்றிக் கொண்டு).

ஆக, எந்த விஞ்ஞானியாக இருந்தாலும் சரி, இன்று பல நிலைகளில் அற்புதங்களைக் கண்டு கொண்டான், பிறர் வியக்க அற்புதச் செயல்களைக் கண்டோம்; தன் ஆற்றலை வெளிப்படுத்தினான்; என்ற நிலைகள் இருந்தாலும்,
இதைப் போல நச்சுத்தன்மையான உணர்வின் சக்தி,
அவன் உடலிலும் விளைந்து,
வேதனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

இந்த உடலில் எந்தெந்த செயல்கள் செய்கின்றோமோ, அந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி, நாம் நிலையான வேதனைகள்பட்டே தீரவேண்டும்.

ஒரு உடலுக்குள் சென்று இதை மாற்றிக் கொள்ள எண்ணினாலும், அந்த உடலையும் வேதனைப்படச் செய்து, அங்கும் வேதனையான உணர்வுகளை வளர்த்து, அந்த மனிதனையும் வீழ்த்தி, உயிராத்மா வெளியே வரப்படும் பொழுது, இந்த வேதனையையே உணவாக உட்கொண்டு, வேதனையை அனுபவிக்கும் உணர்வின் சரீரமாக நம் உயிர் மாற்றிவிடும்.

சூரியன் இன்று விஷத்தன்மையாகி, அது செயலிழக்கும் தன்மை, துரித நிலைகளில் வந்துவிட்டது. விஞ்ஞானிகள் பல காலத்தை அளவிட்டார்கள். அந்த அளவுகோலுக்கு நிற்காது.

ஆனால், அவன் அளவிடுவதற்கு முன் சூரியன் நஞ்சாக மாறும் பொழுது, இங்கு பூமியில் மனிதனின் சிந்தனைகள் முழுமையாக மாறி, மிகவும் வேதனைப்படும் நிலையும், வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையும், பூமிக்குள் துரித நிலைகளில் வருகிறது.
2. ஈஸ்வராய குருதேவர் மக்களை மீட்ட வேண்டும் என்று எண்ணினார்
நமது குருநாதர் காட்டிய அருள்வழிப்படி, அவர் எமக்கு எவ்வாறு எல்லாவற்றையும் காட்டினாரோ, அதையெல்லாம் கண்டுணர்ந்துதான், உங்களுக்குத் தெளிவாகச் சொல்கிறோம்.

நமக்கு இந்த மனித உடல் கிடைத்தது பெரிய பாக்கியம்.
ஆனால், கிடைத்த இந்த பாக்கியத்தை
சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

ஏனென்றால், நாம் வயல்களில் எவ்வாறு களைகளை நீக்குகின்றோமோ, அதைப்போல வாழ்க்கையிலே தோன்றும் விஷத்தன்மையான களைகளை நீக்கவில்லை என்றால், அது நமக்குள் இரண்டறக் கலந்து, நம் நல்ல உணர்வுகள் அழிக்கப்பட்டு, துன்பமே வாழ்க்கை என்ற நிலைகள் ஊடுருவி, அதுவே வளர்ந்துவிடும் நிலைகள் ஏற்பட்டுவிடுகின்றது.

ஆகவே, இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனிதன் மீளவேண்டும் என்று நமது குருநாதர் காட்டிய, அவர் கண்டுணர்ந்த நிலையில், அவர் உடலிலே துன்பத்தை நீக்கிய வழிகளில்தான், செயல்படுத்துகின்றோம்

நமது குருநாதர், இந்த உலக மக்களை மீட்பதற்கு, நல்லதை எண்ணி ஏங்கினார். அவர் எம்மிடம், மக்கள் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டு, அந்த மெய் ஒளியின் தன்மையை உனக்குள் கூட்டி, அந்த நச்சுத் தன்மைகள் உனக்குள் வளராது தடுத்து, அந்த உணர்வின் சக்தியை உனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அதை உனக்குள் வளர்க்கப்படும் பொழுது, இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும், வாழ எண்ணும், நல்லதை எண்ணும் அந்த நல்ல உள்ளங்களில் அந்த மெய் உணர்வுகள் வளரவேண்டும் என்று நீ ஏங்கி ஒலிபரப்பு.

ஆக, நீ எடுக்கும் இந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து, ஒவ்வொரு உள்ளத்திலும் விளையட்டும் என்று எம்மிடம் கூறினார் குருநாதர்.
3. சிறுதுளி வெள்ளம் போன்று மெய் உணர்வுகள் பரவட்டும்
சிறுதுளி பெருவெள்ளம் போன்று, ஒரு நெல்லை விதைத்தால் அது விளைந்து நெல்கள் பலவாகி, அந்தப் பல நெல்களையும் விளைவித்து எடுத்துக் கொண்டால்தான் மலைபோல் குவிகின்றது. அப்படி மலைபோல் குவிந்தால்தான் அவரவர்கள் பசிக்கு, அளவுக்குத் தககவாறு உணவாக எடுத்து உட்கொள்ள முடியும்.

நீ ஒரு நெல்லாக இருக்கின்றாய். அந்த நெல்லின் தன்மையை பலவாக வளர்த்துக் கொண்டு, அந்த உணர்வின் சக்திவாய்ந்த உணர்வின் ருசியை, ஒவ்வொரு உள்ளத்திற்குள்ளும் ஊட்டு.

ஒவ்வொரு உள்ளத்திலும் விளைந்து,
அந்த உணர்வின் எண்ண அலைகளாக வெளிபரப்பும்
அதை ஒன்று சேர்த்து,
அந்தத் தீமையை நீக்கும்
மெய் உணர்வுகளாகப் பரப்பச் செய்,
என்று கூறினார் நமது குருநாதர்.

அப்படிப் பரவும் அந்த மூச்சலைகள், காற்று மண்டலத்தில் கலந்திருக்கும், “நச்சுத் தன்மைகள் அனைத்தையும் பிளக்கட்டும்”.

நச்சுத் தன்மைகளைப் பிளக்கும் எண்ணங்கள் கொண்ட, பல ஆயிரம் பேர் சேர்ந்து, அந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளும் நிலையில், அவர்களிலிருந்து வெளிப்படும் சக்தியின் தன்மை, நாம் இன்று கூட்டு அமைப்பாக வளர்ந்து தியானிக்கும் இந்த உணர்வின் எண்ண அலைகள், நம் பூமி முழுவதும் பரவும்.

அப்படிப் பரவி, விஞ்ஞானிகளால் வெளிப்படுத்தப்பட்ட, சூரியனால் கவரப்பட்ட நஞ்சான அணுக்களையும், “இன்று மனிதனை மனிதனே கொன்று குவித்திடும், இரக்கமற்ற நிலையில் செயல்படுத்தும் இந்த எண்ண அலைகள், ஒவ்வொரு மனிதனின் உடலிலும் விளைந்து வெளிப்படும் நச்சுத் தன்மையாக படரும் நிலைகளையும் தடுத்து, மக்களை மீட்கச் செய்யும், என்று உணர்த்தினார் குருநாதர்.

அதைத்தான் யாம் செய்து கொண்டிருக்கின்றோம். எமது அருளாசிகள்.