ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 10, 2013

ஒரு நாளைக்கு நூறு தடவையாவது ஆத்ம சுத்தி செய்ய வேண்டும் - ஞானகுரு

மந்திரத்தைச் சொல்லி மற்ற நிலைகளைச் சொல்லி ஒருவர் குற்றத்தைச் சொல்லி மற்றவர்களின் குறைகளைச் சொல்லப்போகும் பொழுது நமக்குள் அதுதான் வளர்கின்றது. ஆனால், யாம் உங்களுக்கு என்ன செய்கின்றோம்?

இதையெல்லாம் முறியடிக்கக்கூடிய சக்தியாக ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம்.

“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று உங்கள் உயிரை எண்ணியபின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும். அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தங்கள் முழுவதும் படர்ந்து, உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் நினைவச் செலுத்துங்கள்.

அப்படிச் செலுத்தும் பொழுது அது நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக்கொண்டேயிருக்கும். அதற்காக வேண்டித்தான் இந்த ஆத்ம சுத்தி.

நீங்கள் என்னதான் தியானம் பண்ணினாலும்,
ஆயிரம் தடவை, அல்லது நூறு தடவையாவது
ஆத்ம சுத்தி செய்யும் நிலைக்கு வரவேண்டும்.
அப்படிச் செய்தால்தான், உங்களை அறியாமல் சேர்த்துக் கொண்ட
அந்த முந்தையக் கழிவுகளையெல்லாம்
சுத்தப்படுத்த முடியும்.

சும்மா இருக்கும் பொழுது மனதில் கொஞ்சம் கலக்கமாக இருந்தால் ஆத்ம சுத்தி செய்யுங்கள். இப்பொழுது யாராவது வந்து ஒரு கெட்டதைச் சொல்லிவிட்டால், மனதுக்கு என்னமோ ஒரு மாதிரியாக இருக்கும்.
என்னமோ மாதிரியாக இருக்கிறதென்றால்
அதையே நாம் சுவாசித்துக் கொண்டிருந்தால்
என்னமோ மாதிரியாகவேதான் இருக்கும்.

அப்புறம் ஒரு நாள் ஆகிவிட்டால்
கை வலிக்கின்றது, கால் வலிக்கின்றது,
உடலெல்லாம் வலிக்கின்றது, தலை வலிக்கின்றது,
அங்கே வலிக்கின்றது, இங்கே வலிக்கின்றது
என்று சொல்லிக் கொண்டிருக்கவேண்டியதுதான்.
இதெல்லாம் இப்படி இருக்கிறது என்று டாக்டரிடம் போனால், உங்களுக்கு வாத நோய் வந்திருக்கிறது என்பார்கள்.

அவர் சொன்னதை நினைவு  கூர்ந்தோம் என்றால் மூட்டுக்கு மூட்டு வலிக்க ஆரம்பித்துவிடும். அப்புறம் வேறு டாக்டரிடம் போனால், வாத நோய் என்பார்கள். இதிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபடவேண்டும்.

துருவ நட்சத்திரத்தில்ருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் பெறுவதற்காக யாம் எத்தனையோ முயற்சி எடுத்து வருகின்றோம். இப்பொழுது கேட்டுக் கொண்டிருந்தாலும், கேட்ட அடுத்த நிமிடமே அதை விட்டுவிடுகின்றார்கள்.

விதையை விதைத்துவிட்டால் தண்ணீர் ஊற்ற வேண்டுமல்லவா? இதைச் சிரமப்பட்டு ஒவ்வொரு நிமிடமும் யாம்
அழுத்தமாகக் கொடுத்துக் கொண்டு வருகிறோம்.
அதை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.