ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 24, 2024

குறை கூறும் பழக்கமே நமக்கு வரக் கூடாது…!

குறை கூறும் பழக்கமே நமக்கு வரக் கூடாது…!

 

எம்மிடம் (ஞானகுரு) ஆசீர்வாதம் வாங்க வரும் பொழுதெல்லாம்
1.என் குடும்பத்தில் அனைவரும் நலம் பெற வேண்டும்
2.எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வரவேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்
4.எங்கள் தொழில்கள் சீராக நடக்க வேண்டும்
5.எங்கள் வாடிக்கையாளர்கள் நலமும் வளமும் பெற வேண்டும்
6.எங்கல் குடும்பத்தில் உள்ளோர் உடல் நலம் பெற வேண்டும்
7.எங்கள் குழந்தைகள் கல்வியில் ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் உத்தமக் குழந்தைகளாக வளர வேண்டும்
8.எங்களுக்கு அந்த அருள் வேண்டும் என்று தான் வேண்டி நீங்கள் கேட்க வேண்டும்.

ஆனால் அதை விடுத்துவிட்டு
1.வீட்டில் என் பையன் சொன்னபடியே கேட்க மாட்டேன் என்கிறான்… வீட்டை விட்டே சென்று விட்டான்
2.குடும்பத்தில் எப்பொழுது பார்த்தாலும் சண்டையும் சச்சரவும் விட்டே போக மாட்டேன் என்கிறது
3.தொழிலில் நஷ்டம் வந்து கொண்டே இருக்கின்றது
4.கடன் வாங்கிச் சென்றவர்கள் பாக்கியைத் திரும்பக் கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள்
5.(கொடுக்க வேண்டும் என்று கேட்க மாட்டார்கள்… கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்…! என்றே சொல்வார்கள்)
6.எப்போது பாக்கியைக் கேட்கச் சென்றாலும் வெறுத்துப் பேசுகின்றார்கள் என்று தான் எம்மிடம் சொல்லிக் கேட்கின்றார்கள்.

ஆக இதைத்தான் வளர்த்து வைத்துக் கொள்ள முடிகின்றதே தவிர “நல்லதைக் கேட்க முடியவில்லை…”

எல்லோரும் நலம் பெற வேண்டும்… கணவன் மனைவி நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்…! என்று தான் எம்மிடம் கேட்க வேண்டும்.

மனைவி என்ன சொல்கிறது…? என் வீட்டுக்காரர் எப்பொழுது பார்த்தாலும் நச்சு…நச்சு… என்று பேசிக் கொண்டே இருக்கின்றார். அடுத்து கணவரோ… என் வீட்டில் என் பொம்பளை எப்பொழுது பார்த்தாலும் நச்சு…நச்சு… என்று பேசிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்வார்…!

இருவருமே இப்படித்தான் சொல்வார்கள். யார் பேசுவது எவர் செய்வது என்று தெரிவதில்லை.

இந்த உணர்வு ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம். நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள் பதிவாகி மீண்டும் அதைச் சொல்கிறது. இராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வான்.

அதாவது…
1.நாம் ஒருவரைத் திட்டினோம் என்றால் பதில் அதுவே தான் வரும்…
2.ஒருவரைக் கோபித்தால் அதுதான் திரும்ப வரும்…
3.ஒருவரை வேதனைப்படும்படி சொன்னால் அதே வேதனையின் பதிலாக நமக்கு வரும்.

நாம் பேசும் உணர்வுகள் சீதாலட்சுமி ஆக மாறினாலும் நுகர்ந்த உணர்வுகள் சீதாராமனாக மாறுகின்றது. நாம் ஒருவரைக் கோபிக்கும் பொழுது சீதாலட்சுமி ஆக மாறுகின்றது.

அதை உற்றுப் பார்த்தால்… அந்த உணர்வை நுகர்ந்தால் நாராயணன் திரேதா யுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான்… அதாவது அந்த எண்ணங்கள் தோன்றுகிறது.,, திட்டினால் அதுவே திரும்ப பதிலாக வரும்.

காவியங்கள் இதை நமக்குத் தெளிவாக்கியுள்ளன. அதன்படி நமது வாழ்க்கை எப்படி வழி நடத்த வேண்டும்…? மனிதரான பின் நாம் நமக்குள் எதை உருவாக்க வேண்டும்…? மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறுதல் வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எம்மிடம் வந்து விட்டாலே
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன்
2.வாழ்க்கையில் உடல் நலம் பெறுவேன்
3.குடும்பத்தில் ஒன்று சேர்ந்து வாழ்வோம்
4.கணவன் மனைவியும் வசிஷ்டர் அருந்ததி போன்று வாழ்வோம்
5.நளாயினி போன்று மதித்து நடப்போம்… சாவித்திரி போன்று ஒன்றி வாழ்வோம்
6.எங்கள் பார்வை எங்கள் குடும்பத்தில் நலம் பெறும் சக்தியாக மாறும் என்ற உணர்வினை எடுத்து வாருங்கள்.

இது உங்களுக்குள் எவ்வளவு உயர்வைக் காட்டுகிறது…? என்று பார்க்கலாம்.

எம்மைச் சந்திக்க வந்தாலே… தலைவலியோ கை கால் குடைச்சலோ எல்லாமே குறையும்… வயிற்று வலியும் குறையும். வீட்டில் இருக்கும் பொழுது வலி இருந்தது… என்னைச் சந்தித்த பின் அந்த அருள் சக்திகளை எடுத்த பின் நிம்மதி கிடைக்கிறது என்பார்கள்.

இதை எல்லாம் உங்களுக்கு அனுபவபூர்வமாகக் காட்டினால் அதை நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்னொன்று மிகவும் முக்கியமானது…
1.யாரையுமே குறை கூறிப் பழகாதீர்கள்
2.குறையைக் கண்டால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலை பெற வேண்டும்
4.அருள் ஞான வழியில் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வினை எடுத்துக் கொள்ளுங்கள்.

அவருடைய குறை நமக்குள் வளராது. அவர்கள் நல்ல நிலை பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் நமக்குள் இந்த வலுவின் தன்மை அவருடைய குறையான அணுக்கள் நமக்குள் அணுக்களாக விளையாது.

அவர்களும் இவ்வாறு எண்ணத் தொடங்கினால் அவர் வாழ்க்கை நலம் பெறும் சக்தியாக வளரும்.

ஆகவே எங்கே எப்படிப்பட்ட குறையைக் கண்டாலும் அடுத்த கணமே…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
3.சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

குறை காணுவதையும் குறை சொல்வதையும் விடுத்து விட்டு இதைத்தான் ஒரு பழக்கமாக அதை வைத்துக் கொள்ள வேண்டும்.