ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 3, 2023

சக்கரம் சுழல்வது போல் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “ஒரு ரவுண்டு” உடலுக்குள் பாய்ச்ச வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

உங்களுக்குள் யாம் (ஞானகுரு) பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்து உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் செலுத்தினால் அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை நீங்கள் நுகர்ந்தறிய நேரும்.
1.உங்கள் நினைவுகள் எல்லாம் வான மண்டலத்தில் சென்றிருக்கும்
2.ஒரு மத்தாப்பைக் கொளுத்தும் போது பொறிகள் எப்படிக் கிளம்புகின்றதோ அது போன்று
3.வான மண்டலத்தில் பல நிறங்கள் கொண்ட உணர்வலைகள் பரவிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தோற்றம் அளித்திருக்கும்.

உங்கள் உடலுக்குள் அதைப் பெற்றிருப்பீர்கள்…!

1.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் அனைத்தும் வைரத்தைப் போன்று இளம் நீல நிறமாக இருக்கும்.
2.சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வந்தது அனைத்தும் பலவித வர்ணங்களில் இருந்திருக்கும்

ஏனெனில் ஒவ்வொரு மகரிஷியும் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கலந்தது பல வர்ணங்களில் இருக்கும். சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வருவது மத்தாப்பு போன்று உங்களுக்கு அந்த உணர்வுகள் தெரிந்திருக்கும்.

தெரியவில்லை என்றாலும்
1.இந்த உணர்வலைகள் சுழன்று கொண்டு வந்தது உங்கள் உடலுக்குள் பாய்ந்து… சக்கரம் போன்று சுழன்று வருவதை உணர்ந்து இருக்கலாம்.
2.ஏனென்றால் சுவாசித்து… உடல் முழுவதற்கும் ஒரு ரவுண்ட் வரும்.
3.இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள அணுக்களில் இணையும்.

செடிகளுக்கு எப்படி உரம் போடுகின்றோமோ அதைப் போன்று அந்த அணுக்களின் முகப்புகளில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் போய்ச் சேரும்.

இந்த வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்கள் கொண்டோமோ அத்தனை வகையான அணுக்கள் உடலில் உண்டு.

நாம் நல்ல குணங்கள் கொண்டிருப்பினும் பிறருடைய தீமைகளை உற்றுப் பார்த்து கேள்வியுற்றிருந்தால் அந்த உணர்வுகள் நுகரப்பட்டு
1.நல்ல குணங்களின் முகப்புகளில் இது அடைப்பட்டிருக்கும்
2.அந்த நல்ல குணங்கள் செயல்படாத நிலையில் தடைப்பட்டு அது நலிந்து கொண்டிருக்கும்.
3.நல்ல குணங்கள் வளர்வதற்கு ஈர்ப்பு சக்தி குறைந்திருக்கும்.
4.வளர்ச்சி குன்றும் பொழுது நல்ல குணங்களால் வளர்க்கப்பட்ட உடலில் சோர்வு உண்டாகும்.

நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணித் தான் பிறருடைய தீமைகளைக் கேட்டு உணர்கின்றோம்.

ஏனென்றால் உயிரிலே பட்ட பின் தீமை என்று உணர்ந்தாலும் அந்த உணர்வுகள் உடலில் பரவி நாம் எந்த நல்ல குணங்கள் கொண்டோமோ அதனுடன் சேர்ந்து விடுகின்றது. தீமை என்று அறிவித்தாலும் நல்ல குணத்தை அப்போது இயங்கவிடாது அடைத்து விடுகிறது.

ஒரு மாவை எடுத்து நாம் பிசைந்தாலும் மாவு சுவை உள்ளது தான். இருந்தாலும் அதிலே வேறு ஒரு பொருளைப் போட்டுக் கலக்கினால் அது மேலோட்டமாக இருந்தால் அதனின் சுவை தான் முன்னணியில் இருக்கும்.

இதைப் போன்று தான் நாம் நல்ல குணங்களில் மற்ற தீமையான உணர்வு சேர்ந்த பின் அது செயலற்றதாக ஆகிவிடுகிறது.
1.இதை அகற்றிய அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் சுழலச் செய்ய வேண்டும்
2.ஏனென்றால் அது வலு கொண்டு ஊடுருவிச் செல்லும் ஆற்றல் பெற்றது
3.அது சுழன்று வரும் பொழுது செடிகளுக்கு உரம் போட்டது போன்று நல்ல அணுக்களில் ஊடுருவிப் பாய்ந்து
4.கேட்டறிந்த தீமைகள் நல்ல அணுக்களில் கலந்ததைச் செயலிழக்கச் செய்கிறது.

இவ்வாறு நல்ல அணுக்களைத் தூய்மைப்படுத்தி துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலில் உள்ள எல்லா அணுக்களின் முகப்புகளிலும் கொண்டு வர வேண்டும் என்பதற்குத் தான் உபதேச வாயிலாக உங்களுக்குள் அதைப் பதிவு செய்கிறோம்.