ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 16, 2023

கார்த்திகை நட்சத்திரத்தின் பங்கு நமக்குக் கிடைக்காததனால் “அறிவு சூனியமாகிக் கொண்டிருக்கின்றது”

குடும்பத்திலே குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் திருமணத்தைச் செய்து வைக்கின்றார்கள். முதலில் குழந்தைகளாக இருக்கும் பொழுது குடும்பத்துடன் இருந்தாலும் திருமணம் ஆன பின் பிரிந்து செல்கின்றார்கள்.

பிரிந்து சென்றாலும் தாய் தந்தையுடன் ஒட்டி வாழ்பவர்களும் உண்டு… அவருடன் ஒட்டி வாழாதவர்களும் இருக்கிறார்கள்.

இதே போல் தான் சூரிய குடும்பத்திலும் வளர்ந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் தன்மைகள்.

ஆரம்ப நிலையில் பல அணுக்கள் மோதி மோதி…
1.மோதலில் ஏற்படும் நிலைகளில் அணுக்கள் உருமாறி ஆவியாக மாறுகின்றது
2.எடை கூடி மேகங்களாக மாறுகிறது… மேகங்களுக்குள் அணுக்கள் மோதும் போது தான் நீராக வடிகின்றது
3.நீருக்குள் சிக்கும் அணுக்கள் எடை கூடி ஓடும் பொழுது அருகிலிருப்பதுடன் உராய்வாகி
4.மற்ற உணர்வுகளைத் தனக்குள் கவர்ந்து திடமாக ஒரு பொருளாக மாறுகின்றது.
5.அது தான் பரம்பொருள்…! – ஒரு கோளாக உருவாகிறது.

அதாவது… ஓடும் வேகத்தில் தன் அருகிலே காந்தப் புலனால் உராயப்படும் பொழுது சுழற்சி ஆகின்றது. சுழற்சியால் வெப்பம் ஆகும் பொழுது நுண்ணிய அலைகளைத் தனக்குள் கவர்கின்றது. துருவப் பகுதி வழியாகத் தன் உணவை எடுக்கிறது.

பல பொருள்களைப் போட்டு நாம் வேக வைக்கும் போது எப்படிப் புது புது சுவை கொண்ட பொருள் உருவாகின்றதோ இது போன்று கோள்… அது நுகர்ந்த உணர்வுகள் கரைந்து அமிலமாக மாறுகின்றது.

அமிலத்தின் தன்மை அடைந்த பின் ஆவியாகப் பல மாற்றங்கள் அடைகிறது. மேலிருந்து வாரியாக பல அடுக்குகளாக வரும் போது இது தான் நிலநடுக்கங்களாக ஆகிறது.

நிலநடுக்கம் ஆன பின் மேல் பகுதி டபக்… என்று உள்ளே சென்று விடுகிறது. உள்ளே சென்ற பின் நிலைநடுக்கம் நின்று விடுகிறது. வேகத்துடிப்பு குறைந்து விடுகிறது.

1.இப்படித்தான் கோளுக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டு அதனின் வளர்ச்சியில் பெரும் சக்தியாக மாறி
2.சுழற்சியின் வேகம் கூட.. வெப்பத்தின் தணல் கூட… அது நடு மையத்தில் கூழ் போன்று ஆகின்றது.

முதலில் நீரானது… அடுத்து ஆவியானது மீண்டும் நீரானது. நீருக்குள் அணுக்களின் தன்மை சிக்கியது. சிக்கப்படும் பொருள்கள் உறைந்து உறைந்து எல்லை இல்லாத இடத்தில் ஒரு எல்லையாக பரம்பொருளாக உருப்பெறுகின்றது என்பதைச் சாஸ்திரங்கள் கூறுகின்றது.

சுழற்சியின் வேகம் கூடி நடு மையத்தில் வெப்பத்தின் தணல் கூடக் கூட அனைத்தும் உருகி அமிலமாகிறது… கோள் நட்சத்திரமாக மாறுகிறது.

அமிலமாக இருப்பதை உமிழ்த்தப்படும் போது பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது. உதாரணமாக நூலாம்படை பூச்சி தன் மலத்தால் வலையை விரித்து அதிலே சிக்கக் கூடியதை உணவாக எடுத்து வளர்கிறது.

அதே சமயத்தில் ஒரு ஈ கிடைத்தால் தன் மலத்தால் அதைக் காற்று புகாது சுற்றி மூடி விடுகிறது. மூடித் தன் இனத்தை அது விருத்தி செய்கிறது. ஒரு நூலாம்படைப் பூச்சி அடுத்து பலவாகிறது.

இதைப் போல் நட்சத்திரம் பால்வெளி மண்டலமாக அமைத்த பின் அதனின் உணர்வின் தன்மை பரவுகின்றது. இருந்தாலும் தன் சுழற்சியின் தன்மை கொண்டு தூசிகளாக வருகிறது.

நூலாம்படைப் பூச்சி வலையில் சிக்குவதை எப்படி உணவாக எடுத்துக் கொள்கின்றதோ அது போன்று பால்வெளி மண்டலத்தில் சிக்கிக் கொண்ட உணர்வுகளைச் சுழலும் வேகத்தில் நட்சத்திரம் தூசிகளாக மாற்றுகின்றது.

மேல் பகுதியில் இருந்து எடுப்பதைத் தனக்குள் விளைய வைக்கின்றது. அமிலமாக இருந்த அந்த நட்சத்திரம் சிறுகச் சிறுக உறைகிறது. அமிலம் உறைந்து பாதரசமாக மாறுகிறது.
1.அதை எடுத்தால் சூடாகாது… சூடானாலும் ஆவியாக மாறிவிடும் ஆனால் பொருளாக இருக்கும் போது எடை கூடியதாக இருக்கும்.
2.ஒன்றைத் தாக்கப்படும் பொழுது வெப்பத்தின் தணல் கூடி பிரித்துவிடும்.
3.ஆனால் வெப்பத்தின் தன்மை வரும் போது இயக்கும் சக்தி வருகின்றது
4.பாதரசத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் தன்மையாக வருகிறது.

இப்படி உருப்பெற்று வளர்ந்து வரப்படும் போது இந்த சூரிய குடும்பத்தின் எல்லையில் கடைசியில் இருப்பது… மற்றதை இழுக்கும் சக்தியாக நட்சத்திரங்களாக வளர்கின்றது.

நட்சத்திரங்கள் உமிழ்த்துவதைக் கோள்கள் இடைமறித்து உணவாக எடுத்து அதனின் வளர்ச்சியில் வளர்கின்றது. மையத்தில் சூரியன் அது செயல்படுகின்றது.

முதலில் நட்சத்திரமாக இருந்தது வளர்ச்சி பெற்றுச் சூரியனாக… ஒரு சூரியக் குடும்பமாக எப்படி மாறியதோ… அதே போல கடைசியில் இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுமே தான் வளர்ந்து… அதுவும் சூரியனாக மாறத் தொடங்குகிறது

நட்சத்திரங்கள் தனக்கென்று உருவாக்கப்படும் பொழுது பிற மண்டலங்களிலிருந்து (வேறு சூரியக் குடும்பத்திலிருந்து) எடுத்துக் கொடுப்பது இந்தச் சூரிய குடும்பத்திற்குக் கிடைக்காத நிலை வரும் பொழுது இந்தச் சூரியன் முதுமை அடைந்து விடுகிறது.
1.முதுமை அடைந்தால் சூரியன் நாளடைவில் செயல் இழந்துவிடும்
2.அது செயல் இழந்தால் இதனுடன் ஒட்டி இருக்கக்கூடிய கோள்கள் “எங்கே திசை மாறிச் செல்லும்…” என்று சொல்ல முடியாது.

நம்முடைய சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திகை நட்சத்திரம் பிரிந்து சென்று விட்டது. அதனுடன் சேர்ந்து மற்ற நட்சத்திரங்களும் விலகிச் சென்று விட்டது… முழுமையாகவே விலகி விட்டது.

கார்த்திகை நட்சத்திரத்தின் பங்கு நம் சூரியக் குடும்பத்திற்குக் கிடைக்காததனால் “இங்கே அறிவு சூனியமாகிக் கொண்டிருக்கின்றது…”

விஞ்ஞானிகள் விஷக் கதிரியக்கப் பொறிகளை இங்கே பரவச் செய்து கொண்டிருக்கின்றார்கள்… அழிவின் தன்மையாகத் தான் இங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மனிதனால் உருவாக்கப்பட்ட விஷக்கதிரியக்கங்கள் இந்தப் பூமி முழுவதும் படர்ந்து பிரபஞ்சத்திலும் பரவி விட்டது. பூமிக்குள் இருக்கும் மற்ற பொருளுடன் அது இரண்டாவது தரம் மோதிய பின்
1.கல் மண் கட்டிடம் அனைத்தையும் ஆவியாக மாற்றி
2.தன் இனமாகப் புயல் போல மாற்றக்கூடிய நிலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

வான்வீதியிலும் அது அதிகமாகப் பரவியதால் சூரியனால் கவரப்பட்டு அங்கேயும் மோதலாகி வெடிக்கும் நிலை வரும் போது
1.சூரியனுக்குள் பார்த்தால் கருகும் நிலை அடைந்து (நஞ்சைப் பிரிக்கும் தன்மை இழந்து கொண்டிருக்கிறது) கரும்புள்ளிகள் அதிகமாகப் பரவி விட்டது.
2.சூரியனும் மாசுபடும் நிலைகள் வந்து கொண்டிருக்கின்றது.
3.விஞ்ஞானிகளும் படம் பிடித்து அதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

2000 சூரியக் குடும்பங்களும் இப்படி விளைந்தது தான். இதிலே
1.முதலில் உருவான மையத்தில் இருக்கக்கூடிய சூரியக் குடும்பம் அது பெரிய சுழற்சி வட்டம்… “பெரிய பாதாளம்” என்பது அது தான்.
2.அதற்குள் எந்தக் கோள் சென்றாலும் கரைத்துவிடும்… எது சென்றாலும் கரைத்து ஆவியாக மாற்றிவிடும்
3.ஆவியாக மாற்றி… மறுபடியும் மற்ற கோள்களுக்கு மற்றவைகளுக்கோ அது உணவாகக் கொடுத்து விடும்.

இது போன்று தான் நம் சூரியனும் கரையும் நிலையில் வருகின்றது கரைந்து அமிலமாக ஆவியாகப் பரவும். நம் பூமி திக்கில்லாதபடி ஓடும். மற்ற சூரியக் குடும்பத்தில் எந்தக் கோளிலாவது போய் விழுகும்.

ஏதாவது ஒரு கோளின் ஈர்ப்புகள் புகும். பூமியிலே விளைந்த உயிர் அணுக்கள் மற்ற கோள்களில் நம் பூமி போன்று ஜீவிக்கக் கூடிய நிலை இருந்தால் அங்கே மீண்டும் உயிரினங்களாக உருவாகும் வாய்ப்பு உள்ளது.

அப்படி இல்லை என்றால்
1.மனிதனாக உருப்பெற்ற “நம்முடைய உயிர்கள்” விஷத் தன்மை கொண்டு சதா வேதனைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டி இருக்கும்
2.கண்ணுக்குப் புலப்படாத நிலையில் (உயிர்) தான் இருக்கின்றது
3.ஆனால் சேர்த்துக் கொண்ட அந்த விஷத் தன்மையின் துடிப்பு தாங்காது வேதனையை வளர்த்துக் கொண்டுதான் இருக்கும்.

இது எல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாகக் காட்டிய உண்மைகள்.