ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 1, 2023

மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினால் யாருடைய தீமையும் நமக்குள் வராது

நாம் பரிவு பண்பு அன்பு கொண்டவர்களாக இருக்கின்றோம். ரோட்டிலே நாம் செல்லும் போது ஒருவர் “ஐயா பசிக்கிறது…” என்று சொல்கின்றார். அந்த வேதனையை நாம் நுகர்கின்றோம். இரக்க உணர்வு கொண்டு அவருக்கு உதவியும் செய்கின்றோம்.

எந்த வேதனை கொண்டு அந்த சோக குரலிலே அவர் வெளிப்படுத்தினாரோ சோக உணர்ச்சியை தூண்டும் அணுவாக நம் உடலில் விளையத் தொடங்குகிறது… இது சிவமாகின்றது.

இன்னொரு பக்கம் கோபமாக ஒருவர் உதைக்க வேண்டும் என்று எண்ணுகின்றார் அதை நாம் கண்களில் பார்க்கின்றோம்.. “ஓம் நமச்சிவாய…” நம் உடலில் இது இணைகின்றது. அடுத்தாற்போல்
1.வீட்டில் நம் குழந்தை ஏதாவது சொன்னபடி கேட்கவில்லை என்றால்
2.இந்த உணர்ச்சிகள் தூண்டி அவனை உதைக்கும்படி செய்கிறது.

இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் சேர்த்துச் சேர்த்து சிவமாகின்றது (உடலாக்கப்படுகிறது). ஆனால் மனிதனாக ஆன நிலைகள் பரசுராம்…!

ரோட்டிலே வேதனைப்படுகின்றார் என்று தான் உதவி செய்தோம் ஆனால் அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா.

ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரிடம் வேண்ட வேண்டும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
2.அந்த வேதனைப்பட்ட உணர்வுடன் இதைச் சேர்த்து அதைத் தணித்தல் வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் அணுவாக மாற்றுதல் வேண்டும்.. இதை உடலாக மாற்ற வேண்டும்.

சொல்து அர்த்தமாகிறதல்லவா….!

ஆக அது போன்ற சந்தர்ப்பங்களில் நம் நினைவுகள் எப்படி இருக்க வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் அவர்கள் வேதனையில் இருந்து விடுபட வேண்டும் என்று “இந்த உணர்வின் ஒலியைப் பரப்புதல் வேண்டும்…” (இது முக்கியம்)

வேதனைப்படுகிறார் என்று உணவு கொடுத்தாலும் அது எவ்வளவு நேரத்திற்கு உதவியாக இருக்கும். அன்று ஒரு நேரம் தான் அது பசி அடங்கும் அடுத்து அவனுக்கு நாம் நிவர்த்தி செய்ய முடியுமா…? முடியாது.

ஆகவே அவருக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று
1.அவருடைய வேதனை உங்களுக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள வேண்டும் (இது முக்கியம்)
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவாய் உன் எதிர்காலம் சிறந்து இருக்கும்… நீ நன்றாக வாழ்வாய் என்ற
3.இந்த ஞான வித்தை அங்கே போட்டு விட வேண்டும்.

அவனுக்கு அந்த எண்ணம் வந்து அதை எண்ணினால் அவனுக்கு அது கிடைக்கும். எண்ணவில்லை என்றால் அவனுக்கு அது கிடைக்காது. ஆனால் இந்த வித்தை நாம் அங்கே ஊன்ற வேண்டும்.

இதே போன்றுதான் நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் பழகி வரும் பொழுது நண்பர் நோய்வாய்ப்பட்டு விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். உடனே நாம் என்ன செய்கின்றோம்…? என்ன ஏது என்று விசாரிக்கின்றோம்…?

உயிரிலே பட்டபின் நாம் சோர்வடைந்து விடுகின்றோம். அப்போது சோர்வடைச் செய்யும் அணுவாக உடலில் விளைந்து விடுகின்றது. மனித உடலில் விளைந்தது அவர்கள் எத்தனை வேதனைப்பட்டார்களோ அதை எடுத்து நமக்குள் மீண்டும் விளையத் தொடங்குகிறது.

விளையாதபடி தடுக்க வேண்டும் என்றால் அவருடைய நோயைப் பற்றி விசாரித்த அடுத்த கணமே ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இதை இணைத்துக் கொண்டு வர வேண்டும்.

ஒரு இரண்டு நிமிடமாவது இவ்வாறு எண்ணிப் பழகுதல் வேண்டும் செய்து முடிந்த பின் நண்பனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும்… என்று எண்ணிவிட்டு “நீ நலம் பெறுவாய்…” என்று வாக்கினை ஆங்கே பதிவு செய்ய வேண்டும்.

இப்படிச் செய்யப்படும் பொழுது அருள் உணர்வு கலந்து வலிமை பெற்றதாக நமக்குள் சேர்கின்றது. அதை நீங்கள் எடுப்பதற்கு இந்த உபதேசத்தின் வாயிலாக உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்.

திட்டியவனைத் திருப்பி எண்ணும் பொழுது பதட்டமும் கோபமும் வருகிறது. அதே போன்று அந்த அருள் ஞானிகள் சக்தியைப் பெறுவதற்கு உங்களுக்குள் இப்போது பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).
1.திருப்பி நீங்கள் அதை நினைவாக்கும் பொழுது கண்ணுக்கு வருகின்றது
2.அந்த ஞானிகள் உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்கின்றீர்கள்.
3.எடுத்து உங்கள் குணங்களுக்குள் இதனைக் கலந்து பழகுதல் வேண்டும்
4.அப்படிக் கலந்து பழகினால் தான் வரும் தீமைகளை அடக்க முடியும்.
5.இதை உங்கள் உடலாக… சிவமாக ஆக்க வேண்டும்.

நோயைப் பற்றி விசாரித்து தனித்த நிலையில் எடுத்துக் கொண்ட பின் அதற்கப்புறம் வீட்டிற்குச் சென்று நண்பர் நன்றாக வேண்டும் என்று நினைத்தோம் என்றால் அது சரியாக வராது.

ஏனென்றால்
1.முதலில் கேட்டுப் பதிவானது உடலில் அணுவாக விளையத் தொடங்கும்
2.இரண்டாவது அதை சரி பண்ணிக் கொண்டு வர முடியாது.

ஒரு செடி விளையப்படும் பொழுது அந்தச் செடியுடன் உரத்தை இணைத்து விட்டால் நன்றாக இருக்கும். அது போல் தீமை நமக்குள் வளராதபடி தடுக்க வேண்டும் என்றால் அவ்வப்போது ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அது தான் வாழ்க்கையே தியானம் என்று சொல்வது…!

துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றும் பொழுது தீமைகள் நமக்குள் உருவாகாதபடி உடனுக்குடன் தடுக்கப்படுகிறது.

எத்தகைய சந்தர்ப்பமாக இருந்தாலும் அதிலே முதலில் நாம் கேட்டது அல்லது பார்த்தது தவறிப் போய் உடலுக்குள் அணுவாக உருவாகும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
1.ஆனால் அது விளைவதற்கு முன் ஒரு இரண்டு நிமிடமாவது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வினைச் சேர்த்து அதை மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.