ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 26, 2023

“சுவாசிக்கும் உணர்வும்… உட்கொள்ளும் உணவும்…” உடலுக்குள் அமிலமாகி இரத்தமாக மாறும் போது ஏற்படும் மாற்றங்கள்

பாம்பினங்கள் விஷத்தைப் பாய்ச்சி நாகரத்தினமாக உருவாக்குகின்றது ஆனால் ஒடக்கான் போன்ற உயிரினங்கள் அது நுகரப்படும் பொழுது தன் உடலில் விஷத்தன்மையாக உருவாக்குகின்றது.

விஷத்தன்மையாக மாற்றிக் கொள்வதன் நோக்கம் மற்ற பூச்சிகளையும் வண்டினங்களையும் முழுமையாக விழுங்கப்படும் பொழுது “அதற்குள் இருக்கக்கூடிய விஷம் அதற்குள் ஏற்படும் அமிலமும்” அதனுடன் சேர்த்து விழுங்கியதை (பூச்சி வண்டு) அமிலமாக நீராகக் கரைத்துவிடும்.

கரைத்து உள்ளே சென்ற பின் இரத்தத்தில் கலந்து உடலில் இருக்கும் அணுக்களுக்கு ஆகாரமாகப் போகின்றது… அதனின் உணர்வின் சத்தைக் கொண்டது

மனிதர்கள் நாம் உணவாக உட்கொள்கிறோம் என்றால் அவையெல்லாம் நம் உடலில் ஜீரணிக்கும் போது முதலில் அமிலமாகத் தான் மாறும்.
1.நமக்குள் சேர்க்கும் விஷத்தன்மை கொண்டு “பித்த சுரபி” அதனுடைய சுரப்புக்குத் தக்கவாறு
2.இந்த உணவுக்குள் கலந்த பின் அந்த அமிலத்தைக் குளுக்கோஸ் ஆக மாற்றுகின்றது.

குளுக்கோஸ் ஆக மாற்றி வரப்படும் பொழுது இரத்தத்தில் இருக்கக்கூடிய செல்கள் இந்த உணர்வின் தன்மை சுழல… சுழலச் செய்து “செவ்வணுக்களாக…” மாற்றுகின்றது.

ஆனால் அதை மாற்றும் தன்மை இல்லை என்றால்
1.விஷத்தின் தன்மை அந்த குளுக்கோசைச் சர்க்கரையாக மாற்றி விடுகின்றது
2.இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமானால் சர்க்கரைச் சத்து தான் அதிகமாகும்… அதை மாற்றும் வல்லமை பெற வேண்டும்.

ஒரு மனிதன் அடிக்கடி வேதனையைச் சுவாசிக்கிறான் என்றால் அவ்வாறு வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது நாமும் வேதனைப்பட்டுச் சோர்வடைகின்றோம்

காரணம்… அவருடைய செயலைப் பார்த்து “ஒன்றும் முடியவில்லை…” என்கிற பொழுது சோர்வு வருகின்றது. சோர்வினால் அடுத்துக் கோபம் என்ற உணர்வைக் கலந்து சுவாசிக்கின்றோம்.

1.இது கலந்த பின் இந்த உணர்வு பிரிக்கப்பட்டு குளுக்கோசாக மாற்றுவதற்கு மாறாக
2.இந்த உணர்வின் செல்கள் அழுத்த நிலைகள் கொண்டு இரத்தக் கொதிப்பாக உடலில் ஒரு பக்கம் உருவாகும்.

சர்க்கரைச் சத்து உள்ளவர்களுக்கெல்லாம் சீக்கிரமே இரத்தக் கொதிப்பு வரும். காரணம் அவர்கள் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலில் உள்ள அணுக்களின் தன்மை இப்படி மாறுகின்றது.

இந்த வாழ்க்கையில் எதை எடுத்திருந்தார்களோ இரத்தங்களை எடுத்து வைத்தியரீதியிலே அணுக்களைப் பரிசோதித்துப் பார்க்கும் பொழுது இரத்தக் கொதிப்பு இருக்கின்றது; சர்க்கரைச் சத்து இருக்கின்றது; அந்த இரண்டும் மோதலாகித் தனித்துப் பிரிக்கப்படும் போது அதனால் சளி உருவாகி ஆஸ்துமா உருவாகின்றது என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆகவே
1.இரத்தத்தில் இனிப்பு அதிகமாகி விட்டால் சளி அதிகமாக உற்பத்தியாகி
2.உடலில் எல்லா இடத்திலும் உறையும் தன்மை அமிலங்கள் மாறிவிடுகின்றது… ஒவ்வொன்றும் இப்படி மாறுகிறது.

ஏனென்றால் உடலுக்குள் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது…? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

நாம் பல கோடிச் சரீரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் தப்ப வேண்டும் என்ற எண்ணங்களை எடுத்து வலுவாகித் தான் மனிதனாக வந்துள்ளோம்.

ஆனால் மனிதனாக ஆனபின் நம்முடைய இந்த வாழ்க்கையின் சந்தர்ப்பங்கள்
1.உடலுக்குள் அணுத்தன்மைகள் மாறி… அடுத்து இந்த உடலின் ரூபத்தை மாற்றும் நிலை வந்து விடுகிறது
2.கடைசியில் வேதனை வேதனை என்று கொண்டு போய்… மனித உடலையே மாற்றும் சக்தியாக வந்து விடுகின்றது.

வாழ்க்கையின் சந்தர்ப்பங்களால்… வேதனையைச் சந்திக்கும் போது அதை நாம் நுகர நேர்கின்றது. ஆனால் “அதை மாற்றி அமைக்கக்கூடிய சந்தர்ப்பம் தான்” ஞானிகள் காட்டிய மெய் வழியினை உங்களுக்கு யாம் இப்போது உபதேசிப்பதினுடைய நோக்கங்கள்.