ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2023

மறைமுகமாகச் செய்ய வேண்டியது

மனிதனாக உருவாக்கப் பங்கு கொண்டது 1008 குணங்கள். அந்த 1008 குணங்களைத் தான் ஞானிகள் ஆலயத்தில் தெய்வங்களாகக் காட்டுகின்றார்கள். சிலையாக உருவாக்கி வைத்தது ஞானிகள்… அது துவைதம்.

அந்தச் சிலைக்கு வைர கிரீடத்தை வைக்கின்றான்.. தங்க ஆபரணத்தைப் போடுகின்றான்… மலர் மாலைகளை அணிகின்றான். ஔஷதங்கள் சுவையாக உருவாக்கப்பட்டு தெய்வத்திற்கு உணவாகப் படைக்கின்றான்.

இயற்கையில் விளைந்த கனியும் அங்கே வைக்கின்றான். இயற்கையில் விளைந்ததும் செயற்கையில் விளைந்ததும் என்ற உணர்வைக் காட்டுவதற்காக…!

நமக்குள் நல்ல குணங்கள் எப்படி வளர்ந்தது…? ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் தன்மை பெற்ற நிலையை ஒன்றுடன் இணைத்து நாம் எதைச் செய்ய வேண்டும்…? என்பதற்காகச் சிலையை உருவாக்கினான்…!

பதார்த்தங்களையும் வைத்தான் திரையிட்டு மறைத்தான்.
1.தீப ஆராதனையைக் காட்டித் தன்னை அறியும்படி செய்தான் தனக்குள்
2.மறைந்திருக்கும் இந்த உணர்வைத் திறந்து பார்க்கப்படும் பொழுது உணர்வுகள் எப்படி…? என்பதை அறியம்படி செய்தான்

இது தான் ஆலயம்.

திரையைத் திறந்தபின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரிகிறது. எதனால்…? வெளிச்சத்தால்…!

கார்த்திகேயா என்ற நிலையில் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு உணர்வை நுகர்ந்தறியும் தன்மை பெற்றவன் மனிதன். எதனெதன் குணங்களைத் தனக்குள் எடுத்து… உருவாக்கும் தன்மை எப்படிப் பெற வேண்டும் என்பது ஆறாவது அறிவு… ஆக படைக்கத் தெரிந்து கொண்டவன்.

விண்ணின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது இனிமையின் உணர்வை வளர்க்கின்றது. தீமையின் நிலைகளை அகற்றிடும் சக்தி பெறுகின்றது என்பதற்காகச் சிலையை உருவாக்கி வைத்தனர்.

தீபத்தை அங்கே காட்டப்படும் பொழுது பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் நாம் வேண்ட வேண்டும்.

இந்த ஆலயம் வருவார் அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா. நாங்கள் பார்ப்போர் குடும்பமெல்லாம் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அருள் ஒளியின் சுடராக அந்தக் குடும்பங்களில் வளர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
1.ஏனென்றால் நமக்குள் பல குடும்பங்கள் உண்டு
2.பலருடைய எண்ணங்கள் நமக்குள் குடும்பமாக வாழ்கிறது
3.கோபப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் நமக்குள் கோபத்தின் அணுக்கள் வளர்கின்றது
4.நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுடன் அது போர் செய்கின்றது
5.ஆகவே அதை மாற்றி நட்பின் தன்மை அடைவதற்கு இந்த ஞானிகள் உணர்வை நாம் இப்படி எடுத்தல் வேண்டும்.

ஏனென்றால் நுகரும் உணர்வுகள் அணுவாக மாறுகின்றது… அணுவின் இயக்கமாக நம்மை மாற்றுகின்றது. எதனின் வலு அங்கு வருகின்றதோ அதனின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது. இதை நாம் அறிந்து கொள்வதற்குத் தான் கோவிலிலே இப்படிக் காட்டியுள்ளார்கள்

அந்த ஆலயம் வருவோர்… நாம் பார்ப்போர் குடும்பங்கள்… நாம் தொழில் செய்யும் இடங்களில் பணிபுரிவோர்… எல்லோருமே பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

உதாரணமாக நாம் தொழில் செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நம்மிடம் வேலை செய்யும் ஒருவனுக்கு வீட்டிலே சங்கடமாக இருக்கின்றது.
1.சங்கட உணர்வுடன் இங்கே வந்து வேலையைச் செய்யும் பொழுது…
2.தவறாகச் செய்து விடுகின்றான்… உற்பத்தி ஆகும் பொருள் நஷ்டமாகி விடுகின்றது

அல்லது அவன் வேலைக்கு வரும் பொழுது ஒருவன் ரோட்டிலே எதிர்பாராது கீழே விழுந்து விடுகின்றான். அவனை உற்று நோக்கி இருந்தால் அந்த இரக்க மனம் கொண்டு அந்த வேதனையை எடுத்துக் கொள்கின்றான்.

அவன் நல்ல குணத்துடன் இந்த விஷம் கலந்து விடுகின்றது. அப்போது இருளடைந்து விடுகின்றது. இருளான உணர்வுகள் கலந்து இங்கே வேலையில் அமர்ந்து வேலை செய்யப்படும் பொழுது பொருளறிந்து செயல்படும் திறன் இழக்கப்படுகிறது… உற்பத்தி குறைந்து விடுகிறது.

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம்மிடம் வேலை செய்யும் அந்த தொழிலாளி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… பொருளறிந்து செயல்படும் திறன் அவன் பெற வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சினால் “அடுத்து அவன் தவறில்லாதபடி வேலையை நிதானித்துச் செய்வான்…”

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை அனைவருக்கும் நாம் வேண்டிடல் வேண்டும்… அதை வளர்த்திடல் வேண்டும். அதற்குத் தான் ஆலயத்தில் இந்த மார்க்கத்தைக் காட்டினார்கள்.

சிலையைப் பார்க்கும் பொழுது துவைதம். ஸ்தல புராணமாக வடித்து நற்குணங்களை அங்கே விவரித்துக் காட்டியுள்ளார்கள்.
1.அந்தத் தெய்வ குணத்தையும் தெய்வீக நிலைகளையும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்
2.இந்த ஆலயம் வருபவர் எல்லோரும் தெய்வகுணம் பெற வேண்டும் தெய்வ நிலைகளும் பெற வேண்டும்
3.நாங்கள் பார்ப்போர் குடும்பம் எல்லாம் தெய்வ குணமும் தெய்வீகப் பண்புகளும் பெற வேண்டும்
4.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் தெய்வ குணங்கள் பெற வேண்டும்…
5.தெய்வ சக்தி அங்கு வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
6.நமக்குள் இல்லாதவர்கள் யாரும் இல்லை… "எல்லோருமே நமக்குள் இருக்கின்றார்கள். “
7.எல்லோருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்கும்படி செய்ய வேண்டும் “மறைமுகமாக…”

ஏனென்றால் ஒரு வேதனைப்படுவனுடைய உணர்வுகள் “மறைமுகமாக” நமக்குள் வந்து தான் விஷத்தின் தன்மையாக மாறி… நம்மை அறியாமலே வேதனைப்படும் செயலாக அமைத்து விடுகின்றது. மற்றவரிடம் அதைச் சொல்லப்படும் போது அது எல்லோரையும் வேதனைக்குள்ளாக்குகிறது.

இதை மாற்ற வேண்டும் என்பதற்குத் தான் கல்யாணராமா…! பகைமைகளையும் வேதனைகளையும் அகற்றும்படி ஆலயத்தில் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.