ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 7, 2023

யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை…!

மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கி வலு சேர்த்துக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைக்க வேண்டும்.

அவருடைய உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு. நாம் எடுத்துக் கொண்ட ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு அங்கே செல்ல வேண்டும் என்று
1.அவர்களை உந்திச் செலுத்தும் பொழுது
2.நேராக சப்தரிஷி மண்டலம் போய்ச் சேர்கின்றது.

சப்தரிஷிகள் என்பவர்கள் உடல் பெறும் உணர்வுகளை அவர்கள் கரைத்தவர்கள். அங்கே சென்றவுடன் நம் முன்னோர்கள் மீண்டும் உடல் பெறும் அந்த உணர்வுகளைச் சுட்டுப் பொசுக்கி விடுகின்றது… உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது

கரைத்த பின் அறிவாக இருக்கும் அந்த ஒளி நிலைத்து நிற்கின்றது. அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் அவர்கள் சுழலத் தொடங்குகின்றார்கள்.

அதே போன்று குடும்பத்தில் யார் உடலை விட்டுப் பிரிகின்றார்களோ கணவன் இறந்தால் கணவனை முதலில் அனுப்புகின்றோம்… மனைவி இறந்தால் மனைவியை முதலில் அனுப்புகின்றோம்.

சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து கணவன் முதலில் ஒளியாக ஆன பிற்பாடு மனைவி இங்கே இருக்கும் பொழுது
1.அதே உணர்வுடன் கணவன் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
2.அடிக்கடி இதை எண்ணப்படும் பொழுது அடுத்து மனைவி உடலை விட்டுச் சென்றாலும் அங்கே சென்று விடும்.
3.அதாவது அந்த உணர்வை எண்ணினாலே ஆட்டோமேட்டிக்காக மனைவியின் ஆன்மா அங்கே சென்றடைந்து விடும்.

நாம் எல்லோரும் சேர்ந்து அந்த உணர்வை நமக்குள் பெருக்குவதற்குத் தான் இப்போது கூட்டாக உங்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றோம். செய்கிறோம்.
1.இந்தப் பதிவு இல்லை என்றால்
2.அங்கே நாம் யாரையும் அனுப்ப முடியாது.

மனைவி முதலில் பிரிந்தால் மனைவியின் ஆன்மாவைக் கணவன் உந்தி அங்கே சப்தரிஷி மண்டலத்தில் செலுத்திய பின் கணவன் இங்கே எண்ணியவுடன் ஆட்டோமேட்டிக்காக கணவனின் ஆன்மாவும் அங்கே சென்று விடுகின்றது.

யார் பிரிந்தாலும் முதலில் அவர்களை அங்கே அனுப்பி வைத்து விடுகின்றோம். உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றோம்.
1.அங்கு இணைந்த பின் அவர்கள் உணர்வு இங்கே இருக்கின்றது.
2.அந்த ஒளியின் உணர்வை இங்கிருந்து நாம் பெருக்குகின்றோம்.
3.பெருக்கிக் கொண்டால் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை
4.உடலை விட்டுப் பிரிந்து சென்றால் சப்தரிஷி மண்டலம் தான் நாம் செல்வோம்.

நண்பர்களுக்குள் நன்மை செய்தான் என்று பாசமாக இருக்கின்றனர். ஆனால் சந்தர்ப்பத்தில் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால்…
1.பாசத்தால் எண்ணி “நண்பா நான் போகின்றேன்…” என்று எண்ணினால் நண்பனுடைய உடலுக்குள் தான் அந்த ஆன்மா செல்லும்.
2.அந்த நண்பனும் நேற்று வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தானே “இப்போது போய் விட்டானா…” என்று எண்ணும் பொழுது அந்த உடலுக்குள் தான் செல்லும்.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

ஆகவே… இதற்கு முன்பு மூதாதையர்களை விண் செலுத்தும் அந்தப் பழக்கத்தை நாம் விட்டு விட்டோம். இப்போது மீண்டும் அந்த ஞானிகள் கண்ட வழியினை “உங்களுக்குள் தொடரும்படி செய்கின்றோம்...”

மனிதனான பின் பிறவி இல்லா நிலை அடைந்தவர்கள் அக்காலத்தில் விண் சென்றவர்கள் தான் “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்” என்று சொல்வது. சப்தரிஷி மண்டலத்திற்குள் கண்ணுக்குப் புலப்படாது ஒளியாக எண்ணிலடங்காதோர் உள்ளார்கள்.

அவர்கள் பல கோடி ஆண்டுகள் ஆகித்தான் ஒளியின் சரீரமாக உள்ளார்கள் “என்றும் பதினாறு” என்று வாழுகின்றார்கள்.
1.இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும் அவர்கள் பிற சூரிய குடும்பத்தில் இருந்து ஆற்றல்களைப் பெற்றதனால்
2.அதிலே நஞ்சாக வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள்.
3.என்றும் பதினாறு என்று அகண்ட நிலையில் எங்கும் செல்லும் திறன் பெற்றவர்கள்
4.ஒரு எல்லையில் இருந்து தனக்குள் உருவாக்கிக் கொண்டவர்கள்.

எந்த எல்லையில் இருக்கின்றார்களோ… துருவத்தை எல்லையாக வைத்து சூரியனைச் சுற்றி மற்ற கோள்கள் வருவது போன்றது துருவ நட்சத்திரத்தினுடைய வட்டத்தில் அவர்கள் சுழன்று வருகின்றார்கள் சப்தரிஷி மண்டலங்களாக…! மனிதனாகப் பிறந்து வாழ்ந்தவர்கள் தனித்தன்மை கொண்டு வாய்ந்தவர்கள் தான் அகண்ட அண்டம் பேரண்டம் எத்தனையோ நிலைகள் கொண்டது.

அதிலே எத்தனையோ கோடி ஆண்டுகள் வரப்படும் பொழுது அணுவாகி கோலாகி நட்சத்திரமாகி சூரியனான பின் நட்சத்திரமாகிக் கோளின் தன்மை அடைந்தது பலர்.

இந்தக் குடும்பங்கள் அழிந்தாலும் அதற்குள் எத்தனை நிலையில் உள்ளது

ஒரு சூரிய குடும்பமே எத்தனை கோடி மைல்கள் எல்லை விஸ்தீரணம் கொண்டது. அதேபோன்று அடுத்த சூரிய குடும்பத்தை எடுத்தாலும் அது எத்தனை கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது.

நாம் இந்த 2000 சூரியக் குடும்ப வட்டத்தில் தான் வாழுகின்றோம். ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு தான் சுழலுகின்றது. இது வேறு 2000 சூரியக் குடும்பத்திலிருந்து வரக்கூடிய சக்தியை எடுத்து தான் வாழுகின்றது.

இப்படி ஒவ்வொன்றிலும்
1.மனிதனாக உருப்பெற்றவன் ஒளியாக மாறிய பின் தனித்தன்மை வாய்ந்ததாகச் செல்லுகின்றது
2.இதற்கு அதற்கும் சம்பந்தமில்லாது செல்கின்றது… துருவத்தின் எல்லையில் தான் வாழ்கின்றார்கள்.

ஆகவே என்றும் 16 என்ற அந்த நிலையை நாம் அடைய வேண்டும் இல்லை என்றால் மீண்டும் தேய்பிறை தான்.

ஆகவே யாராக இருந்தாலும் நாம் பலருடைய ஆன்மாக்களை விண்ணுக்குச் செலுத்துகின்றோம்… மூதாதையர்களை அனுப்புகின்றோம்.
1.இவ்வாறு செய்து கொண்ட பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றால்
2.யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை நாம் அங்கேதான் செல்கின்றோம்.

தியானத்தில் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… மூதாதையர்களின் உயிரான்மாக்கள் அங்கே இணைய வேண்டும் என்று இந்த உணர்வை நாம் வளர்க்க வளர்க்க
1.உடலை விட்டு நாம் சென்றால் அங்கே தான் உயிர் நம்மை அழைத்துச் செல்லுமே தவிர
2.புவியின் ஈர்ப்புக்குள் இருக்காது…!

இதை நாம் ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் ஒரு தொடர்பு வேண்டும். எல்லோரும் சேர்ந்து ஆன்மாக்களை அங்கே அனுப்புகின்றோம்.

எல்லோரும் சேர்ந்து சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியம் ஆகும் பொழுது நம் குருநாதர் காட்டியபடி ஒளியின் கூட்டமைப்பாகின்றது.