ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 25, 2022

இன்றைய உலக வாழ்க்கை கனவு தான்…!

நாம் வாழும் வாழ்க்கை கனவான வாழ்க்கை…!

நாம் உறங்கும் பொழுது வருவது தான் கனவு… நாம் விழித்திருக்கும் பொழுது வாழ்வது “நினைவு..!” என்கின்றோம். கனவும் நினைவும் எல்லாமே ஒன்று தான்…!
1.இன்று நடப்பது நாளை கனவு தான்.
2.நாம் உறக்கத்தில் உள்ள பொழுதும் கனவு தான்.
3.சில நாட்கள் பொறுத்து எண்ணிப் பார்ப்பது எல்லாமே கனவு தான்,
4.முன் ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
5.இந்த ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
6.இனி நமக்கு நடப்பதுவும் கனவு தான்,

அவ் ஈஸ்வரனின் நினைவு ஒன்றே… அவ் ஈசனின் சக்தி ஒன்றே தான்…! ஒரே நிலை கொண்ட “என்றும் நிலைத்து நிற்கும் நினைவு…!”

கனவுக்கும் நினைவுக்கும் நாம் மாறுபட்டு எண்ணுகின்றோம்.

நடப்பது எல்லாமே கனவு தான் என்ற நினைவு எல்லோருக்கும் வந்தால் இன்றைய உலகில் பகவானைப் பல ரூபமாக்கி பல ஜாதியாக்கி இருக்க மாட்டார்கள்.

இன்று பல மதங்களின் நாமத்தைச் சூட்டி வட கலை… தென் கலை.. என்றெல்லாம் சொல்லி தன்னையே தான் தாழ்த்தி வாழ்கின்றான் மனிதன்.

இதிலிருந்து விடுபட வேண்டும்.