ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 14, 2022

நம் ஆயுளைத் துருவ நட்சத்திரத்தோடு ஒப்படைத்து விட வேண்டும்

ஒரு வேதனை என்ற உணர்வு வந்த பிற்பாடு அது நோயாக மாறிவிட்டால் என்ன ஆகிறது...?

குழந்தைக்கு ஒரு நல்ல துணிமணியை எடுத்துக் கொடுக்கட்டும். நோயாளியாகக் கட்டிலிலே தந்தை படுத்திருக்கும் பொழுது எடுத்துக் கொடுத்த பட்டுச் சேலையைக் கொண்டு நீங்கள் வந்து காண்பியுங்கள்.

அதைக் காண்பிக்கும் பொழுது “எவ்வளவு கோபம் வருகிறது...?” என்று பாருங்கள்.

தன் பிள்ளைக்கு அதைக் கொடுக்க வேண்டும்.. இதைக் கொடுக்க வேண்டும்... நல்ல துணிகளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

ஆனால் தந்தை மிகவும் நோயாக இருக்கும் போது இந்தச் சேலை எப்படி இருக்கிறது...? என்று கேட்டால் என்ன ஆகும்...?

நான் இருக்கிற நிலைமையில் இதைக் கொண்டு வந்து காண்பிக்கின்றாயே...! வந்ததா வினை...!

பிள்ளைக்கு நல்ல துணி வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார். வாங்கிச் சென்று போய் விட்டால் பரவாயில்லை.

அப்பாவிடம் காட்டி விட்டு அதன் பின் கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்தால்...
1.இங்கே அவர் படும் வேதனையில் இந்த நல்ல துணியைப் பார்க்கும் போது எதிர்ப்பு உணர்வு வரும்... நெகட்டிவ்... பாசிட்டிவ்...!
2.மனதில் என்ன செய்யும்...? துணியைக் கொடுத்த பின் வாங்கிச் செல்ல வேண்டியது தானே.
3.நான் உடம்புச் சரியில்லாத போது என்னிடம் இதை காட்டி வேதனைப்படுத்துகின்றீர்களே...!

தன்னாலே இத்தகைய உணர்வு வரும்.

பாசத்தால் சொல்கிறார். ஆனால் உடலில் உள்ள உணர்வுகள் எதிர்க்கிறது. நம் மீது சிறிதளவு கூட அக்கறை இல்லையே என்று குழந்தை மீது வெறுப்பு வந்து விடுகிறது.

துணி வாங்கிக் கொடுத்தால் துணியை எண்ணி அந்த ஆசை தான் வருகின்றதே தவிர என்னைக் கவனிக்கவில்லையே.

சந்தர்ப்பம் எப்படி எண்ண வைக்கின்றது என்று பாருங்கள்...! ஆனால் தவறு நாம் செய்யவில்லை.

அப்பா தான் வாங்கி கொடுத்தார். அப்பாவிடம் காண்பிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றேன். அவர் உடலில் நோயினால் வேதனைப்படும்பொழுது அது எதிர்மறை ஆகிறது. நான் இருக்கும் நிலையில் சிறிதளவு கூட இந்தப் பெண்ணுக்கு வருத்தமில்லையே...!

சரிப்பா... சேலையை நான் எடுத்துக் கொண்டேன் என்று சொன்னால் நன்றாக இரு அம்மா...! என்ற வாக்கு தந்தையிடமிருந்து வரும்.

ஆனால் காண்பித்தால் என்ன செய்யும்...? கூடக் கொஞ்சம் எரிச்சல் வரும். இந்த உணர்வுகளின் இயக்கங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
1.அது மாறாகப் (தவறாக) போய் விடுகிறது.
2.குழந்தைக்கு அவர் தான் வாங்கிக் கொடுத்திருந்தாலும் அந்தச் சந்தோஷம் இழக்கப்படுகிறது... வெறுப்பும் வந்து விடுகிறது.

தியானத்தைக் கடைபிடிப்பவர்கள் இதையெல்லாம் மாற்ற வேண்டும்.

சந்தர்ப்பங்கள் இது போன்று வந்தாலும் ”அப்பா சொல்லிவிட்டார்... நான் எடுத்துக் கொண்டேன். பரவாயில்லை... நல்ல சேலையாகத் தான் இருக்கின்றது அப்பா என்று சொல்லலாம். இல்லை என்றால் “நீங்கள் நன்றாக ஆன பிற்பாடு எடுத்துக் கொள்கிறேன் அப்பா...” என்றும் சொல்லலாம்.

இந்த உணர்ச்சிகள் அங்கே தந்தைக்கு ஒரு சந்தோசத்தை ஊட்டும். ஏனென்றால் ஒரு உணர்வின் உணர்ச்சிகள் மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகின்றது...? என்று உங்களுக்குச் சொல்கின்றேன்.

மனிதனின் வாழ்க்கையில் எந்த மாதிரி நிலைகள் வந்தாலும் நாம் விழித்திருக்க வேண்டும்.

விழித்திருக்க வேண்டும் என்றால் எப்படி...?
1.புதுச் சேலையைக் காட்டி அந்த மகிழ்ச்சியைச் சொன்னால் அவர் மனம் புண்படும்
2.அந்த உனர்வை எடுத்தால் நாமும் சங்கடப்படுவோம் என்று விழித்திருத்தல் வேண்டும்.

அப்போது என்ன செய்ய வேண்டும்...?

ஈஸ்வரா... என்று உயிரிடம் வேண்ட வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்... எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்... உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எந்தக் காரணத்தினால் இது நிகழ்ந்ததோ... அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர் வாழ வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு என் தந்தை உடல் முழுவதும் படர வேண்டும் மகிழ்ந்த நிலை வர வேண்டும் என்று இதைப் போன்ற உணர்வுகளை எடுத்தோம் என்றால் வேதனை யாருக்கும் வராது.

சில பேர் என்ன செய்வார்கள்...?

அப்பா உடல் நோயாக இருக்கும் போது இந்தத் துணியை எடுத்துக் கொள் என்று பிள்ளையிடம் சொல்வார்கள்.

ஆனால் பெண்ணோ... அப்பாவுக்கு இப்படி நோயாக இருக்கின்றதே... வேதனைப்படுகின்றாரே... துணியை எடுத்துக் கொள்ளச் சொல்கிறாரே...! என்று எண்ணி அழுகத் தொடங்கும்.

தகப்பனுக்கு முன்னாடி அழுதால் எப்படி இருக்கும்...? சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறது அல்லவா.

ரியாக்ஷன் ஆகி... “வேண்டாம்...” என்று சொன்னாலும் அப்பாவுக்கு வேதனையாக இருக்கின்றது. அந்த வேதனை எடுத்துச் சமைக்கும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றோம்... கண்களிலே நீர் வருகின்றது.

தகப்பனார் இதைப் பார்த்தால் “நான் இருக்கும் நிலையில் இப்படி அழுகின்றார்களே...!” என்று அவருக்கு அந்த வேதனை அதிகமாகும். ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஒவ்வொரு நிலைக்கொப்ப அந்த வேலையைச் செய்யும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்துப் பல பொருள்களைப் போட்டுச் சமைத்தாலும்... அதிலே பக்குவம் தவறி விட்டால் சுவை கெட்டு விடுகின்றது.

ஆகவே ஆயுள் கால மெம்பர்கள் எப்படி இருக்க வேண்டும்...?
1.நம் ஆயுளைத் துருவ நட்சத்திரத்தோடு ஒப்படைத்து விட வேண்டும்.
2.நம் பற்று அதன் மீது வரவேண்டும்.
3.அதை வைத்து இந்த வாழ்க்கையில் வரக்கூடிய சிக்கல்களை நிவர்த்தி செய்ய முடியும்.

குடும்பத்தில் ஒருவர் மட்டும் செய்தால் பத்தாது. கணவன் மனைவி குழந்தைகள் எல்லோரும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழக வேண்டும்.