ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 26, 2022

முந்தைய வினைகளை நாம் மாற்றி அமைக்க வேண்டியது மிகவும் அவசியம்

தாய் கருவிலே நாம் பெற்ற உணர்வுக்கொப்ப மனிதனாக உருப்பெற்றாலும்
1.நமது வாழ்க்கையில் கண் கொண்டு உற்றுப் பார்த்து உணர்வுகளைப் பதிவாக்கி
2.அதன் வழி உணர்வுகளை நுகர்ந்து அறியும் சக்தி பெற்ற நாம்
3.நமது வாழ்க்கையில் எத்தனை பேரைப் பார்த்தோமோ எத்தனை பொருள்களை உற்றுப் பார்த்தோமோ
4.அவையெல்லாம் ஊழ்வினை என்ற வித்தாக நமது உடலில் எலும்புக்குள் இருக்கும் ஊன்களில் பதிவாகி விடுகின்றது.

எப்படி செல்ஃபோன்களில் பதிவாக்கி வைத்துக் கொண்ட பின் அதனின் இயக்கங்களை முழுமையாக நாம் இயக்க முடிகின்றதோ இதைப் போன்று எலும்புகளில் உள்ள செல்களில் இயக்கி எத்தனையோ கோடி உணர்வுகளை நாம் பதிவாக்கிக் கொள்ளலாம்.

“பதிவான நிலைகளில்…” நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த நினைவாற்றலே மீண்டும் வருகின்றது. அதன் வழி அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக நம்மைச் செயலாக்குகின்றது. அதிலே தீமைகளும் பதிவாகி இருக்கிறது.

இதைப் போன்று நமது வாழ்க்கையில் எத்தனை கோடி தீமையின் உணர்வுகள் நம் ஊன்களில் உண்டு. அதை இயக்க விடாது தடைப்படுத்த வேண்டுமல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளை
1.எல்லா உறுப்புகளிலும் படரச் செய்ய வேண்டும்
2.அந்த உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களையும் பெறச் செய்ய வேண்டும்
3.எலும்புக்குள் இருக்கும் எல்லா ஊன்களிலும் அதைப் பரவ செய்ய வேண்டும்.

எப்படி விஞ்ஞான அறிவு கொண்டு இரத்தங்களில் இன்ஜெக்க்ஷன் மூலமாக மருந்தினைச் செலுத்தி உடலில் உள்ள உறுப்புகளுக்கும் மற்ற அணுக்களுக்கும் சேரும்படிச் செய்கிறார்களோ அதைப் போன்று தான்… துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் கவர்ந்து… இரத்த நாளங்களிலே கவரச் செய்து… உடல் முழுவதற்கும் பரவச் செய்ய வேண்டும்.

நண்பர்கள் என்று ஒருவருக்கொருவர் பழகி அந்த உணர்வுகள் பதிவாகிவிட்டால் “நன்மை செய்தார்…!” என்று எண்ணும் பொழுது எங்கே இருந்தாலும் அது பாய்ந்து விக்கலாக மாறுகின்றது அதே தொடர்பில் இருவரையும் நல்லதாக அது இயக்குகின்றது.

ஆனால் பகைமையானால்… எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்று வேக உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது சிந்தனை இழக்கச் செய்து விடுகின்றது.
1.உணவு உட்கொள்ளும் பொழுது அது இயக்க மறுத்து புரையும் ஓடுகிறது.
2.வாகனங்களிலோ அல்லது நடந்து செல்லப்படும் பொழுது விபத்தாகிறது.

மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட உணர்வுகள் எப்படி செல்ஃபோன்களில் இயக்கி நாம் ஃபோனில் தொடர்பு கொள்கின்றோமோ அதே போல் அந்தப் பதிவுகள் இயக்கப்பட்டு அந்த மனிதனுக்கும் சரி… நமக்கும் சரி… அதே இயக்க நிலை ஆகி தொல்லைகளுக்கு ஆளாகின்றோம்.

நமக்கும் அந்த வெறுப்புகள் கூடும் போது பள்ளம் மேடு தெரியாதபடி இயக்கி நமக்கும் விபத்துகள் ஏற்படக் காரணமாகி விடுகின்றது.

அல்லது நாம் மற்ற வேலைகளைச் செய்தோம் என்றால் சிந்தனையற்ற நிலைக்குக் கொண்டு சென்று விடுகின்றது. அவர்களுக்கும் அதே போன்று சிந்தனை இல்லாத செயல்களாக இயக்கி விடுகின்றது…
1.விபத்துகள் ஏற்படுவதற்கு இதுவே காரணம் ஆகி விடுகின்றது.
2.இது எல்லாம் நமக்குள் ஏற்கனவே பதிவு செய்த முந்தைய பதிவுகள்.

இது போன்ற முந்தைய வினைகள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்மிடம் இருக்கக்கூடிய எல்லா அணுக்களிலும்
1.நம் கண்ணின் பார்வை கொண்டு அந்த அழுத்தமான நிலைகளில் அதிகமாகச் செலுத்தச் செலுத்த
2.முந்தைய பாவ வினைகளோ தீய வினைகளோ சாப வினைகளோ பூர்வ ஜென்ம வினைகளோ எது இருப்பினும்
3.அதை எல்லாம் சிறுகச் சிறுக நம்மால் குறைக்க முடியும்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற ஊற்ற அந்த அழுக்கு நீர் எப்படி அது குறைவாகின்றதோ இதே போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து முந்தைய (தீமையான) பதிவுகளைத் தூய்மையாக்குதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி வாய்ந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி உடல் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் இதை இணைக்கக்கூடிய முயற்சிகளை நாம் செயல்படுத்துதல் வேண்டும்…!

நாளுக்கு நாள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவரும் ஊன்களாக நமக்குள் உருவாக்க வேண்டும். அவசியம் இதைச் செயல்படுத்த வேண்டும்.