ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 3, 2021

ஈசனுக்கு அபிஷேகம் எப்படிச் செய்ய வேண்டும்...? என்று குருநாதர் உணர்த்தினார்

 

பள்ளியிலே ஆசிரியராகப் போவோர் அனைவருமே பாட நிலையை எப்படிப் பிறருக்கு போதிப்பது...? என்றும் அவர்கள் குணங்களை எப்படிச் சீர்படுத்துவது...? என்றும் செயலாக்குவார்கள்.

அதைப் போல நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண்ணின் ஆற்றலைத் தான் பருகினாலும் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் வழியினை எமக்கு (ஞானகுரு) உபதேசித்து அருளினார்.

1.அந்தப் பண்படுத்தும் பருவம் வரும்போது உயர்ந்த ஞானத்தின் வித்தை அவர்களுக்குள் எப்படி ஊன்றச் செய்வது...?
2.ஞானத்தை வளர்க்கும் நிலைக்கு அவர்கள் நினைவலைகளை எப்படிக் கூட்டச் செய்வது...?
3.ஞானிகளின் அருள் உணர்வுகளை ஊழ் வினையாக அவர்களுக்குள் எப்படிப் பதிவு செய்ய வேண்டும்...? என்று எனக்கு உணர்த்தினார்.

ஆகவே மக்களை இயக்கும் உயிரான ஈசனை நீ வணங்கு...!
1.அவர்களைப் படைப்பதும்...
2.அவர்கள் எண்ணியதை இயக்குவதும்... எண்ணியதை உடலாக்குவதும்
3.உடலில் விளைந்ததை எடுத்துச் செல்வதும்
4.விளைந்த உணர்வுகளுக்கொப்ப அடுத்த உடலை உருவாக்குவதும் உயிரே.

பிறர் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்... அந்த மெய் ஞானியின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று நீ எண்ணும் போது “அதை நீ பெறக் கூடிய தகுதி பெறுகின்றாய்...!”

ஆகவே அந்த ஞானிகளின் உணர்வை நீ பெற்று அதன் பின் அவர்கள் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வு கொண்டு உபதேசத்தின் வாயிலாக ஊழ்வினையாகப் பதிவு செய்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் ஆற்றலை அவர்களுக்குள் ஆழமாக ஊன்றி நினைவலைகளை அங்கே அந்த ஞானிகளுடன் அவர்களை ஒன்றச் செய்யும் பொழுது தான் அவர்களும் அதைப் பெறும் தகுதி பெறுகின்றனர்
அவ்வாறு பெறும் தகுதியை நீ ஏற்படுத்தி
1.அவர்கள் பெற வேண்டும் பெற வேண்டும் என்று அவர்களை நீ பிரார்த்திக்கும் போது
2.அவரை வளர்த்த அந்த உயிருக்குள் உயர்ந்த உணர்வுகள் அபிஷேகமாகிறது.

அந்த ஒவ்வொரு உயிரும்... உடலை அமைத்துக் கொண்ட நிலைகளில் தனது அவாவினாலும் ஆசையாலும் எந்த உணர்வின் தன்மை அந்த உடலுக்குள் ஆசை பாசம் என்ற நிலையில் பிறரைக் காக்க வேண்டும் என்ற நல்ல உணர்வை எடுத்தனரோ...
1.அப்படி இரக்க உணர்வு கொண்டோருக்குள் பிறிதொரு தீய உணர்வுகள் சென்று
2.அதே உணர்வுகள் அவர்களுக்குள் மீண்டும் ஆன்மாவாக மாறி
3.அந்த ஆன்மாவிலிருந்து அவர்கள் சதா சுவாசிக்கும் பொழுது
4.அந்த உயிரான ஈசனுக்கு அவர்களை அறியாமலேயே தீய உணர்வுகளை அபிஷேகிக்க்கின்றனர்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தச் சுடு தண்ணீரை மேலே ஊற்றினால் எப்படியோ... மிளகாயைப் போட்டு நீரைக் காய்ச்சி அதை நம் மேல் ஊற்றினால் எப்படி எரிகின்றதோ... அதைப் போல எந்தெந்தப் பொருள் இருந்தாலும் அதை அரைத்து நீருடன் கலந்து நாம் மேலே ஊற்றும் போது நம் உடல் எப்படி எரிகின்றதோ... எப்படி வேதனைப்படுகின்றோமோ... இதைப் போலத்தான்
1.இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வின் அணுக்களுக்கு எதிர் நிலையாகும் போது உடலில் எரிவது போல
2.இந்த உடலை இயக்கும் உயிருக்கும் அந்த உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது அங்கே எரிச்சல் ஏற்பட்டு
3.உடல் முழுவதும் எரிச்சலும் நல்ல எண்ணங்களை எண்ண முடியாத நிலையும்
4.அந்த எரிச்சலான உணர்வுகள் உடலான சிவனுக்குள் அந்த எரிச்சலை ஊட்டும் தன்மையாக அந்தச் சக்திகள் மாறுகின்றது.

அவ்வாறு ஆகாதபடி உங்கள் உயிரான ஈசனை மகிழச் செய்ய உடலான சிவனுக்கு அமுதை ஊட்ட... குரு காட்டிய அருள் வழிப்படி நீங்கள் எல்லோரும் அந்த மாமகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும். அதை நீங்கள் பெற்று வாழ்க்கையில் அறியாது வந்த அந்த்த் தீமைகள் அனைத்தையும் உங்களுக்குள் வளராது நிறுத்த வேண்டும் என்பதற்குத் தான் இந்த உபதேசம்.