ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 26, 2021

எங்கோ இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை… நினைத்தவுடன் உங்களுக்குக் கிடைக்கும்படி செய்கின்றோம்

 

அன்புடன் பண்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்து நாம் வாழக் கூடியவர்களாக இருந்தாலும் அவர்கள் பட்ட வேதனை நமக்குள்ளும் பதிவாகிறது.

அந்த வேதனையை உருவாக்கும் உணர்வுகள் நமக்குள் வலுப் பெற்று விட்டால்
1.அதனின் உணர்வு நம் ஆன்மாவாக மாறும் பொழுது
2.அதிலிருந்து இழுத்து நாம் சுவாசிக்கும் போது
3.அந்த வேதனையான எண்ணங்கள் தான் மீண்டும் மீண்டும் வரும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட இங்கே உபதேசத்தின் வாயிலாகக் காட்டும் வழிகளைச் சீராகக் கடைப்பிடித்து வாருங்கள். ஞானிகளின் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்,
1.சந்தர்ப்பத்தில் இது உங்கள் நினைவுக்கு வரும்
2.உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவும்.

பள்ளிக்கூடத்திற்குச் சென்று முதலில் படிக்கச் செல்லும் பொழுது எல்லாவற்றையும் உடனடியாக நாம் தெரிந்து கொள்வதில்லை. திரும்பத் திரும்பப் படிக்கும்போதுதான் அந்த நினைவாற்றல் நமக்குள் பெருகுகிறது.

அது போல் தான் இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கும் அருள் உரைகளை...
1.ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ பதிவு செய்து விட்டாலும்
2.அதைப் பெற வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருந்தால் தான்
3.திரும்பத் திரும்ப அதை மனதில் பதியச் செய்வோம்… அதை வளர்க்கவும் செய்வோம்.
4.திட்டியவர்களை மீண்டும்…மீண்டும்… மீண்டும்…மீண்டும் எண்ணுவது போல்…!

ஆனால் நாம் எல்லாம் ஆரம்பத்தில் பக்தியிலே ஆலயத்திற்குச் சென்று... விநாயகருக்கு அருகம்புல்லை வைத்துச் சூட தீபாராதனை காட்டி... தேங்காய் பழம் வைத்துக் கும்பிட்டுப் பழகியவர்கள்.

இருந்தாலும்...
1.எங்கோ இருக்கக்கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
2.ஒரு நிமிடத்திற்குள் எண்ணி எடுக்கும் சக்தியை... அந்த ஆற்றலை இப்பொழுது பெறுகின்றோம்.

இதைச் சொல்லும் போது முதலிலே சிறிது கடினமாக தோன்றும். ஆனால் உடனே பெறக்கூடிய தகுதிக்குத் தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம். ஞான வித்தாக உங்களுக்குள் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் வளர்த்துக் கொள்வதில் தான் உங்களுடைய வளர்ச்சி இருக்கின்றது. அதற்குண்டான நீரான அருள் சக்தியை எடுக்கும்போது தான் உங்களுக்குள் அந்த ஞான வித்து ஓங்கி வளரும்.

யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி காலையில் நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்திகளை எடுத்துக் கொள்ளலாம்.
1.அந்த நேரத்தில் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்.
2.எழுத்து உட்கார்வதற்குச் சோம்பேறித்தனமாக இருந்தாலும் கூட
3.உங்கள் எண்ணத்தை நேரடியாகத் துருவ நட்சத்திரத்திற்கு அனுப்புங்கள்.
4.துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளிக் கதிராக வருவதைத் தியானித்து எடுத்துக் கொள்ளலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணி இந்த உணர்வை உங்கள் உடலுக்குள் வலிமையாக்குங்கள்.

எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை விண்ணில் செலுத்தி... உடல் முழுவதும் படர வேண்டும் என்ற மீண்டும் உடலுக்குள் செலுத்துங்கள். உள்ளுக்குள் செலுத்தச் செலுத்த தீமைகள் எல்லாம் கரைந்து விடும்

உடல் அழுக்கைப் போக்கத் தினசரி தண்ணீரை விட்டுக் குளிக்கின்றீர்களோ அதை போல் அருள் ஞானிகளின் உணர்வை உங்கள் உடலுக்குள் சேர்த்து உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.