ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 12, 2021

சக்தி பெற்றவர்கள் என்று மகரிஷிகளைச் சொல்வதன் காரணம் என்ன...? - ஈஸ்வரபட்டர்

 

கதைகளிலும் காவியங்களிலும் “தொட்டவுடன் பொன்னாகும்…!” சில வழி முறைகளை முந்தைய காலங்களில் உணர்த்தியதன் உண்மை நிலை என்ன…?

ஒரு பொருளைத் தொட்டால் அந்தப் பொருள் எதுவாகிலும் பொன்மயமாக மின்னுவதாகச் சொல் வாக்கிய வழி முறையிலும் காவியக் கதைகளிலும் உண்டு.

ஒரே மரத்தில் பறித்த எலுமிச்சங்கனியைப் பத்து பேர்களிடம் கொடுத்து வைத்திருக்கச் சொல்லி விட்டுப் பிறகு பார்த்தோம் என்றால் அவரவர்கள் பெற்ற அமிலச் சேர்க்கையின் உருவக உஷ்ண அலையின் வெப்ப நிலைக்கொப்ப அந்த கனியின் தன்மை மாறுபடும்.

இதைப் போன்றே…
1.உயர் காந்த சக்தியின் எண்ண வலுக் கொண்டு
2.ஞானத்தின் வழி சக்தியால் உயர்ந்தோரின் தெய்வத் தொடர்புடன் சங்கமித்த வழித் தொடரில்
3.எவ்வலையையும் இச்சரீர இயக்கம் எடுத்துச் சமைத்து ஆத்மாவை வளர்க்கும் ஆத்ம ஜோதி நிலை கொண்டவர்களினால்
4.ஒரு பொருளை எவ்வமிலத்தினால் எவ் உலோகத்தில் செய்யப்பட்டிருந்தாலும்
5.சில அலைச் சக்திகளைக் கொண்டு அதனை உருமாற்றவும்
6.சில நிலைகளைச் சுட்டிக் காட்டும் தன்மையை உருவாக்கும் நிலையையும் உருவகப்படுத்தலாம்.

இந்நிலையில் ரிஷித் தன்மை கொண்ட ரிஷிகள் பலர் காயகல்ப சித்து என்ற சில சக்தி நிலைகளைச் செய்து காட்டினர்.

போகர் சித்து நிலை பெற்று ரிஷித் தன்மை வலுக்கூடிய நாளில் அவர் எடுத்த அலைகளின் சக்தியினால் இந்தப் பூமிக்குப் பல மூலிகைகளை மருத்துவச் செயலுக்காகப் பூமியில் பதிய வைத்து வளரும் தன்மையை உருவாக்கினார்.

இந்தப் பூமியில் சித்து நிலை பெற்று வளர்ந்த பல மகரிஷிகள்…
1.இன்றளவும் தான் பெற்ற அலைத் தொடரின் சக்தியை
2.தான் பிறப்பெடுத்து வளர்ந்த பூமி அலையின் பதிவில்
3.ஜீவாத்மாககளின் வளர்ப்புக் காப்பக நிலைக்காக
4.பல ஆற்றல் மிக்க சக்திகளைப் பூமியில் பதித்து வளர வழி காட்டுகின்றனர்.

ஆனால் தன் இனத்தின் உண்மை குண நிலையைப் புரியாமல்… உண்மை உயர்வின் வழியில் செல்லாமல்… பூமிப் பிடிப்பில் புதையுண்டு மீண்டும் மீண்டும் பிறவிக்குள்ளேயே சுழன்று வாழ்கின்றனரப்பா…!