ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 13, 2021

நீடித்த நாள் வாழ்வோம் என்ற ஆசையில் கௌரவத்தைக் காக்க விரும்புகிறோம்… உயிரான்மாவைக் (தன்னைக்) காக்கின்றோமா…?

 

மனித வாழ்க்கையில்…
1.நிலையற்ற இந்த உடலுக்கு… நிலை உண்டு…! என்ற நிலைகளில்
2.பல ஆயிரம் ஆண்டு காலம் வாழ்கின்றோம்.. வாழ்வோம்… என்ற எண்ணத்திலேயே தன்னைக் கௌரவப்படுத்திக் கொண்டு
3.நாம் கொஞ்சம் வசதியாக இருக்கின்றோம் என்ற நிலைகள் இருந்தாலும்
4.நம் சொல்லை யாராவது ஒருவர் சிறிதளவு மதிக்கவில்லை என்றாலும்
5.இவனுக்குத் திமிரைப் பார்… என்ற நிலைக்கு வந்து விடுகின்றோம்… நம்முடைய சொல்லின் தன்மைகள்.

அதே சமயத்தில் பொறுப்புடன் ஒரு இடத்தில் வேலை செய்கின்றோம் என்றாலும் பிறரைப் பார்த்தவுடனே தன் கௌரவத்தைக் காக்கப் பிறரின் செயல்களைப் புண்படும் செயலாக… சொல்லாக… அந்த உணர்வுகள் அது தாக்கிக் பேசும் நிலைகள் வந்து விடுகின்றது

அவர்களைக் குறைத்துப் பேசினாலும்… அவர்கள் செயலைச் சுட்டிக் காட்டினாலும் பொறுத்துக் கொள்ளும் நிலையற்று… பொறுப்பற்ற செயலைச் செயலாக்கி… அந்தப் பொறுப்பற்ற உணர்வினையே வளர்த்துக் கொள்ளும் நிலையாகித் தன் உடலுக்குள் அந்தத் தீமையின் நிலையையே உருவாக்கி விடுன்றது.

தியான மண்டபத்தில் தியானம் செய்ய வேண்டும் என்ற நிலையில் வருகிறோம். நமக்குள் அறியாது வந்த தீமைகளையும் குறைகளையும் நீக்கிக் கொள்ளவே இங்கே வந்து தியானிக்கின்றோம்.

இருந்தாலும்… யாம் உபதேசிப்பதை எல்லாம் கேட்டு விட்டுப் பிரசாதம் வாங்கும் போதும் சரி… அல்லது மற்ற நிலைகளிலும் சரி… அடுத்தவரைத் தள்ளிவிட்டு நாம் தான் முதலில் வாங்க வேண்டும் என்ற நிலைகள் வந்துவிடுகிறது.

1.பொறுப்பான நிலைகள் கொண்டு இங்கே வந்தபின்
2.பொறுப்பற்ற நிலையில் “என் கௌரவத்தைக் காத்துக் கொள்வேன்…” என்ற எண்ணம் தான் வருகிறது.

இங்கே மற்றவர்கள்… அவர்களை அறியாது சில குறைகளைச் செய்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் அந்தச் சக்திகளைப் பெற்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி மற்றவர்களும் பெற வேண்டும் அவர்கள் குறைகள் அகல வேண்டும் என்ற ஏக்க உணர்வினை எடுத்தால் குறைகள் இங்கே அகலும்.

அவ்வாறு செய்யாது…
1.மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு குறைகளை அகற்ற வேண்டும் என்று எண்ணாது
2.அந்தக் குறையின் உணர்வையே வளர்த்துக் கொண்டு
3.தன்னுடைய கௌரவத்தை காக்க வேண்டுமென்ற உணர்வே மேலோங்குகிறது.

தன்னைக் காத்திடும் எண்ணம் கொண்டு ஏங்கி இங்கே வந்தாலும் இது போன்ற குறை காணும் உணர்வுகள் அது நம்மை அழித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

ஏனென்றால் நஞ்சின் வேகம் அவ்வாறு போகின்றது...!

அதை எல்லாம் மாற்றியே ஆக வேண்டும் என்பதற்குத் தான் திரும்பத் திரும்ப இதை ஞாபகப்படுத்துகின்றோம் (ஞானகுரு).